Thursday, June 3, 2010

இனி, தமிழ் படமே இயக்க மாட்டேன்! அதிரடி கெளதம் மேனன்


shockan.blogspot.com

கௌதம் வாசுதேவ் மேனன்... சென்சேஷனல் நியூஸ் மேக்கர். முதல்வரைப் பெயர் சொல்லி அழைத்தார், அஜீத்துடன் வருத்தத்தில் இருக்கிறார் எனச் செய்திகள் சிறகடிக்க... 'விண்ணைத் தாண்டி வருவாயா' இந்தி - கன்னட ரீ-மேக், மோகன்லால் நடிக்கும் ஒரு மலையாளப் படம், அஜீத்தின் 50, 51-வது படங்கள், சூர்யாவுடன் ஒரு படம், செம்மொழி மாநாட்டுப் பாடல் என கலர்ஃபுல்லாக நிரம்பி இருக்கிறது கௌதமின் டைரி.


''உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல் வெளியீட்டு விழாவில் 'கருணாநிதி' என்று முதல்வரைப் பெயர் குறிப்பிட்டு நீங்கள் பேசியது ஒரு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறதே?''

''அந்த நிகழ்ச்சியின் ரெக்கார்டட் வீடியோவைப் போட்டுப் பார்க்கச் சொல்லுங்க. 'மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்'னுதான் பேச ஆரம்பிச்சேன். தொடர்ந்து பேசும்போது, 'சினிமாவில் ஒரே டேக்ல ஷாட் ஓ.கே. பண்றவங்களை ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்னு சொல்வோம். கலைஞரும் ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்தான்'னு நான் சொன்னதும் அவரே ரசிச்சுச் சிரிச்சார். 'முதல்வரை கலைஞர்னுதான் எல்லோரும் சொல்வாங்க. 'கருணாநிதி'ன்னு யாரும் பேர் சொல்ல மாட்டாங்க'ன்னு நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு சிலர் சொன்னாங்க. 'அவர் பேரைச் சொல்றது எனக்குச் சந்தோஷமா இருந்தது. இருக்கு. எந்த மேடையிலும் அவரது பேரை நான் சொல்வேன்'னு சொன்னேன். அதைத்தான் 'மிஸ்டர் கருணாநிதி'ன்னு நான் பேசியதா மாத்தி எழுதிட்டாங்க.

'இந்த வீடியோவை டைரக்ட் பண்ண ஒரு தமிழன்கூடக் கிடைக்கலையா? ஒரு மலையாளிதான் கிடைச்சானா?'ன்னு விமர்சனம் கிளப்புறாங்க. 'என் அப்பா ஒரு மலையாளி... அம்மா ஒரு தமிழச்சிதான்'னு சொல்லுங்கன்னு ஃபோர்ஸ் பண்றாங்க சிலர். நான் யார், எந்த ஊர்ல பிறந்தேன், என் அப்பா யார், அம்மா யார்னு படம் வரைஞ்சு பாகம் குறிக்கிறது தேவை இல்லாத வேலை. மும்பை போனால், 'சவுத் டைரக்டர்'னு ஒதுக்கிடுறாங்க. 'இல்லப்பா... நான் இந்தியன்'னு அவங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா? கேரளா போனா, 'நீ தமிழன். இங்கே ஏன் படம் பண்ண வர்றே?'ன்னு கேட்கிறாங்க. அங்கே, 'என் அம்மாதான் தமிழ். அப்பா மலையாளி'ன்னு சொல்லிட்டு இருக்கணுமா? எனக்கு எங்கப்பா வெச்ச பேர், கௌதம் வாசுதேவ் மேனன். 'மேனன் வேணாம். கௌதம்னு மட்டும் இருக்கட்டும்'னு என் முதல் படத் தயாரிப்பாளர் சொன்னார். அப்ப நான் அவர் கன்ட்ரோல்ல இருந்ததால், என் முழுப் பேரை டைட்டில் கார்டில் போட முடியலை. அப்பா இறந்த பிறகு 'வாரணம் ஆயிரம்' படத்தைச் சொந்தமாத் தயாரிக்கும்போதுதான் என் முழுப் பேரையும் போட்டேன். இனி, கடைசி வரை அந்தப் பேரைத்தான் வெச்சுப்பேன். இதுக்காக யாருக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!''

'' 'அஜீத் படம் பண்றேன்னு நான்தான் சொல்லிட்டு இருக்கேன். ஆனால், அவர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை'ன்னு நீங்க சொன்னதாகவும் ஒரு செய்தி...''

''பேசின ஒரு விஷயத்துக்கு மறுப்பு சொல்லலாம்ங்க. ஆனா, பேசாத விஷயத்துக்கு எல்லாம் மறுப்பு சொல்ல முடியுமா? அஜீத்தைப்பத்தி அந்த மாதிரி நான் சொல்லவே இல்லை. அவருடன் படம் சம்பந்தமாப் பேசிட்டு வந்த நாலு நாள்ல இப்படி ஒரு புரளி கிளம்புது. ரேஸ் முடிச்சுட்டுப் படத்தை ஆரம்பிக்கலாம்னு அஜீத் சொல்லிட்டார். அந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஏற்கெனவே இரண்டு படங்களில் பிஸி. அவங்களே பேசி முடிவெடுத்து, எந்தத் தேதி சொல்றாங்களோ, அன்னிக்கே படப்பிடிப்பைத் தொடங்க பக்கா ஸ்க்ரிப்ட்டோடு நான் தயாரா இருக்கேன்!''

''ஏன், எப்பவும் உங்க வார்த்தைகளில் அனல் அடிச்சுட்டே இருக்கு? யார் மேல் உங்க கோபம்?''

''உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்கள் பார்க்க விரும்பும் படங்களைத் தமிழில் எடுக்கணும்னு எனக்கு ஆசை. தமிழ் ரசிகர்கள் மட்டும் பார்த்தாப் போதும்னு நினைச்சா, ஒரு குறுகிய வட்டத்தில் சுருங்கிடுவோம். உலக அளவில் ஆடியோ ரிலீஸ் பண்றது, மார்க்கெட்டிங் பண்றதெல்லாம் அதுக்காகத்தான். 'ஸ்லம்டாக் மில்லியனர்' பண்ண பிறகுதானே ரஹ்மான் சாருக்கு ஆஸ்கர் கிடைச்சது. ஆனா, அப்படியான முயற்சிகளுக்கு இங்கே வரவேற்பு இல்லை. மீடியா ஆட்கள் பிடிச்சுப் பின்னால் இழுக்குறாங்க. ஒரு சிட்டி லைஃப், அவங்க தினமும் வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை ஒரு படத்தில் வெச்சா, பிடிக்க மாட்டேங்குது. உடனே, அந்தப் படங்களை டவுன் பண்ணிடறாங்க. நமக்கே நம்ம மேல் சந்தேகம் வர்ற அளவுக்கு ஒரு சூழலை உண்டாக்கிடுறாங்க. இதே மாதிரியான சூழல் தொடர்ந்தா, நான் இங்கே தமிழில் படம் பண்ண மாட்டேங்க. நிச்சயமாச் சொல்றேங்க... அடுத்தடுத்த இடங்களுக்கு நான் பயணிச்சுட்டே இருப்பேன். சின்னச் சுதந்திரம்கூட இல்லைன்னா, ஒரு கிரியேட்டர் புதுசா என்னதான் பண்ண முடியும்? நான் இங்கிலீஷ் படம் டைரக்ட் பண்ணா, அதைப் பார்க்க தமிழ்நாட்டில் என் ரசிகர்கள் 100 பேராவது இருப்பாங்கள்ல. எனக்கு அது போதும். 'கிராமத்து வன்முறையை வெச்சு எடுக்கிற படங்கள்தான் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்'னு சிலர் விடாமல் சொல்லிட்டே இருப்பது தப்புன்னு சொல்றேன். நான் விமர்சனங்களை மதிப்பவன்தான். அதே சமயம் ஒரு பையனும் பொண்ணும் காதலிக்கிறப்ப, சுத்தத் தமிழ்ல பேசி லவ் பண்ண அவங்க என்ன புலவர்களா? யதார்த்தமான நகரங்களையும் சினிமாக்களில் பிரதிபலிக்க அனுமதிங்க. மத்தபடி யார் மீதும் எனக்குக் கோபம் இல்லை!''

''சமீரா ரெட்டியை வெச்சு நீங்க இயக்கும் அடுத்த படத்தில் பாட்டே இல்லையாமே... ஏன், என்னாச்சு? பாடல்கள்தானே கௌதம் ஸ்பெஷல்?''

''சும்மாதான். கவிதையான, ஓவியமான காதல்லாம் பண்ணியாச்சு. ஒரு ஆக்ரோஷமான காதலைக் காட்டலாம்னு இந்த மாற்றம். த்ரில்லர்... இதுவரை நான் பண்ணாத விஷயம். ஒரு காதல் எப்படி எல்லாம் இருக்கக் கூடாதுங்கிறதுதான் ஒன்லைன். படத்தில் பாட்டு, மியூஸிக் எதுவுமே கிடையாது. ஏன், இசையமைப்பாளரே கிடையாது. ஒரே மாதிரி வேலை பார்க்க வேண்டாம்னு தோணுச்சு. எவ்வளவு தவிர்த்தாலும் என்னை அறியாமலேயே சில விஷயங்கள் என் படங்களில் வந்துடுது. 'வழக்கமான கௌதம் கிளிஷேக்கள் இந்தப் படத்தில் இருக்கிறது'ன்னு நீங்ககூட விமர்சனம் எழுதியிருக்கீங்க. அது மாதிரியான விஷயங்களைத் தவிர்க்கலாமேன்னுதான் இந்த முயற்சி!''

''இதெல்லாம் புதுப் பசங்களை வெச்சுப் படம் பண்ணும்போதுதானே சாத்தியம். ஆனா, நீங்க அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களை வெச்சுத்தானே படம் பண்றீங்க?''

''யார் சொன்னது? 'வேட்டையாடு விளையாடு' பண்ணும்போது, 'கௌதம் இது உங்க படம். எனக்காக எதுவும் ஸ்பெஷலாப் பண்ண வேண்டாம்'னு கமல் சார் சொன்னார். அதே மாதிரி 'வாரணம் ஆயிரம்'ல இன்னும் கொஞ்சம் சீரியஸ்னெஸ் அதிகமா இருந்தா, அது ஆர்ட் ஃபிலிம் ஆகியிருக்கும். அப்போ 'என் ரசிகர்கள் சில விஷயங்களை எதிர்பார்ப்பாங்க'ன்னு சூர்யா எதுவும் சொல்லலை. அதே சூர்யாதான் இப்ப 'சிங்கம்' பண்றாரு. ஆனா, 'சிங்கம்' எந்த சர்க்கஸ்ல வித்தை காட்டும்னு அவருக்கு நல்லாவே தெரியும். அந்த டைப் ரசிகர்களையும் ரீச் பண்ணணும்னு நினைக்கிறார். முதல் நாள் முதல் ஷோவே 'சிங்கம்' பார்க்கும் அளவுக்கு நானும்கூட அந்த ரசிகர்களில் ஒருவன்தான். பஞ்ச் டயலாக், அஞ்சு சண்டை வைக்கிற டிரெண்ட் இப்ப மாறிட்டு இருக்கு!''

''உங்களால் கிராமம் சார்ந்த கதையைப் படமா எடுக்க முடியாதுன்னுதான் கிராமத்துப் படங்களை நீங்க பாராட்டுறதில்லையா?''


''நிச்சயம் என்னால் அழகா, மண் வாசத்தோடு ஒரு கிராமத்து சப்ஜெக்ட் இயக்க முடியும். 'ஜுராசிக் பார்க்' எடுத்த ஸ்பீல்பெர்க் என்ன டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்துட்டு வந்தாரா? கிராமம்னு ஓப்பன் பண்ணா, 'படிப்பறிவு இல்லாத மக்கள், யாருமே சட்டை போட மாட்டாங்க, எல்லாரும் அந்த ஊர்ப் பண்ணையாருக்கு அடிமை'ன்னு திரும்பத் திரும்பக் காமிச்சுட்டே இருந்தா, வெளியில் இருந்து பார்க்கிறவங்க, தமிழ்நாடு இன்னமும் அப்படியேதான் இருக்குபோலன்னு நினைச்சுக்குவாங்க. சேட்டிலைட் போனோ, டி.டி.ஹெச் டிஷ்ஷோ, ஆடி காரோ எல்லாம் கிராமத்துலயும் இருக்கு. இங்கே நல்ல ரைட்டர்ஸ் இல்லை. அதுதான் பிரச்னை. உண்மையைச் சொல்லணும்னா, இப்போ தமிழ் சினிமா ரொம்பச் சிக்கலான நிலைமையில் இருக்கு!''

''ஆனா, சேட்டிலைட் சேனல்ல ஆரம்பிச்சு செல்போன் ரிங்டோன் வரை இங்கே சினிமாதானே ஆக்கிரமிச்சு இருக்கு. சினிமா கஷ்டப்படுதுன்னு ஏன் சொல்றீங்க?''

''சேட்டிலைட் சேனல்களில் விளம்பரங்கள் வந்துட்டே இருந்தா, அந்தப் படம் நல்லாப் போகும்னு நினைக்கிறீங்க. ஆனா, எல்லாப் படங்களுக்கும் அந்த வசதி கிடைக்குதா? யாரு அவங்களுக்கு சேட்டிலைட் ரைட்ஸ் கொடுக்கிறாங்களோ, அவங்க படங்களை மட்டுமே விளம்பரம் பண்றாங்க. இது கண்டிப்பா ஆரோக்கியமான போட்டி கிடையாது. எல்லா சேனல்களும் சினிமா படங்களின் க்ளிப்பிங்ஸ், பாட்டு, காமெடிக் காட்சிகளால்தான் சமாளிக்கிறாங்க. என் 'வாரணம் ஆயிரம்' படத்துக்கு ஒரு சேனல் தன்னோட டாப் டென்ல 10-வது இடம்கூடத் தரலை. புது வரவாகக்கூட காட்டலை. இப்படிப்பட்ட நிலைமையில் சினிமா எப்படி வளரும்?''

''ஹாரிஸ் ஜெயராஜுடன் ராசி ஆகிட்டீங்களா?''

''அவர்கூட வேலை பார்க்க மாட்டேன்னு நானா சொன்னேன்? 'இனிமேல் கௌதமுடன் வொர்க் பண்ண மாட்டேன்'னு அவர்தான் சொன்னார். ஆனால், வேலை தவிர, மத்தபடி வழக்கமாப் பேசுற விஷயங்களைப் பேசிட்டுத்தான் இருக்கோம். அதனால், அஜீத் படம், இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா'ன்னு என் அடுத்தடுத்த படங்களுக்கு ரஹ்மான் சார்தான் இசை!''

No comments:

Post a Comment