Wednesday, June 9, 2010

தமிழகம் முழுவதும் குழந்தை கடத்தல் கும்பல்!







காய்ச்சல் நெருப்பாய் கொதித்த 3 மாத ஆண்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு வந்தார் பேரிகை கிராம ராமக்காள்.

சாதாரண காய்ச்சல்தான் என்று ஊசியைப் போட்டு மாத்திரைகளையும் கொடுத்து, ""பயப்படாமல் ஊருக்குப் போங்க'' என்றார் டாக்டர்.

ராமக்காள் ஆஸ்பிடலில் இருந்த அந்த ஒருமணி நேரத்தில், அன்பாக பாசத்தோடு பழகினார் தீக்காய வடுக்கள் நிறைந்த ஒரு பெண்மணி. ராமக்கா வோடு பஸ் ஸ்டாண்ட் வரை வந்த அந்தப் பெண்மணி, ராமக்கா ஏமாந்த நேரத்தில், 3 மாத ஆண் குழந்தை யோடு எஸ்கேப்பாகி விட்டார்.

மகனைப் பறிகொடுத்த ராமக்காள் பஸ் ஸ்டாண்ட் முழுக்க அலறிவிட்டு, காவல்நிலையத்திற்கு ஓடினார். கொஞ்சம் கூட தாமதிக்காமல், குழந்தையை கண்டுபிடிக்க, ஸ்பெஷல் டீமை அமைத்தார் எஸ்.பி. பாபு.

கை, கால், முகமெல்லாம் தீக்காய வடுக்கள் நிறைந்த சுமார் 40 வயதுப் பெண்மணி பற்றி, மருத்துவமனை ஊழியர்களிடம் விசா ரித்தபோது, ""ஆமாமா... கிருஷ்ணகிரி டவுன் பகுதியில இருக்கு அந்த பொம்பளை... அடிக்கடி யாரையாவது பார்க்க வரும்... பெயர் தனலட்சுமி!'' என்றார்கள்.

மறுநாள் காலையில் தனலட்சுமியை இழுத்து வந்தார்கள். ""இவள்தான் சார்... இவளே தான்...!'' ராமக்காளும் அடையாளம் காட்டி னார். வகையாக மாட்டிக் கொண்ட தனலட்சுமியால் உண்மையை மறைக்க முடியவில்லை.


""எனக்குச் சின்ன வயசிலேயே கல்யாணம் ஆச்சு. முதல் புருஷன் வேலு சரியில்லை. கிருஷ்ணகிரி கிருஷ்ணனோட சேர்ந்து வாழ்ந்தேன். அவன்தான் மண் ணெண்ணெயை ஊத்தி என்னை கொளுத்தினான். தீக்காயங்களுக்கு வைத்தியம் பார்க்கிறதுக்கு சென்னை பெரம்பூர்ல தங்கியிருந்தப்பதான் மூலக்கடை மதுரை சாமிமடம் ஏரியா கிரிஜா பழக்கமானாங்க.

"பணத்துக்கு ஏன் கஷ்டப்படுறே... வருமானத் துக்கு நான் வழிகாட்டுறேன்... குழந்தை இல்லாம ரொம்பபேர் தவமா தவ மிருக்காங்க. குழந்தைகள் கிடைத்தால் எனக்குப் போன் பண்ணு, வந்து ரக சியமா வாங்கிட்டுப் போறோம்... ஆண் குழந் தைனா 10 ஆயிரம் தர்றேன்... பெண் குழந்தைனா 5 ஆயிரம் தர்றேன்'னு சொன்னாங்க... நல்ல தொழிலா தெரிஞ்சது... கிருஷ்ண கிரி ஆர்.எஸ்.லட்சுமிபுரம் தெரு செல்வராஜோட ஆண் குழந்தை தேவா... விளையாடிட்டு இருந்தான். நான் தூக்கின முதல் குழந்தை அவன்தான். அவனுக்காக 10 ஆயிரம் கொடுத்தாங்க கிரிஜா. அந்தக் குழந்தையை விழுப்புரம் மணியிடம் விற்றதா சொன்னாங்க. "இனிமே திருட வேண்டாம், கிருஷ்ண கிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஆஸ்பத்திரியில் வருஷத்துக்கு 800 டெலிவரி நடக்குது. அங்கேயிருந்துதான் தொட்டில் குழந்தைத் திட்டத்தில அதிக குழந்தைகளை போடுறாங்க. ரொம்பக் குழந்தைங்க முறைகேடா பிறக்கிற குழந்தைகள். அந்த ஆஸ்பத்திரியில நர்ஸ்கிட்ட பழகி, அப்படிப்பட்ட குழந்தைகளை கொண்டு வா'னு சொன்னாங்க கிரிஜா. அப்போதிருந்து தான்... நர்ஸ் ராணியோட உதவியால நிறையக் குழந்தைகளை கொண்டு போனேன். அப்படித்தான் ஈஸ்வரி யோட 10 நாள் ஆன குழந்தையையும் கிரிஜாவிடம் கொடுத்தேன் !'' -இப்படி வாக்குமூலம் கொடுத்த தனலட்சுமி... கோர்ட் வாசலில் மயங்கி விழுந்து விட்டாள்.

""குழந்தைகளை நான் திருடலை. தொட்டில் திட்டத்தில போட நினைக்கிற பெற்றோர்கிட்ட உங்களுக்கு எதுக்கு கஷ்டம்... நானே தொட்டில் மையத்தில போடுறேன். அல்லது ஓசூர் ஆனந்தா ஆஸ்ரமத்திலே சேர்த்து விடுவதாகச் சொல்லி குழந்தைகளை வாங்கி தனலட்சுமியிடம் கொடுத்தேன். தனலட்சுமி கிரிஜாவிடம் கொடுத் திருக்கு!'' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த காவேரிபட்டினம் நர்ஸ் ராணி அப்ரூவராக மாறியிருக்கிறார்.

சென்னை மூலக்கடை, மதுரைசாமி மடம் ஏரியா கிரிஜாவையும் கும்பலையும் எப்படி தூக்குறது?

""ஒரு குழந்தை கிடைத்திருக்கு... எங்கே கொண்டு வர என்று கேள்!'' தனலட்சுமியை மூலக்கடை கிரிஜாவுக்கு போன் போடச் சொன்னார்கள் போலீசார்.

""கொண்டு வா... கொண்டு வா... என் வீட்டுக்கு வரக்கூடாது. பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வா!'' சந்தோஷத்தோடு சொன்னார் கிரிஜா.

தனலட்சுமியை கூட்டிக் கொண்டு சென்னை புறப்பட்டது கிருஷ்ணகிரி ஸ்பெஷல் டீம். பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார்கள். எதிர்பார்த்த படி, கிரிஜாவும் கணவர் சிவாவும் இவர்களின் கையாளான ராணியக்காவும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். தனலட்சுமியோடு கிருஷ்ணகிரி போலீசாரும் சென்னை திரு.வி.கநகர் இன்ஸ்பெக்டர் பிரகாசும் வந்திருப்பதைப் புரிந்து கொண்ட மூவரும் ஓடத் தொடங்கினார்கள். ""புடி... புடி...'' என்று விரட்டித்தான் மூவரையும் பிடித்தது போலீஸ்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிரியார் அல்போன்ஸ் சேவியரையும் செல்வம் என்பவரையும் அள்ளிக் கொண்டு வந்தார்கள். கிரிஜாவுக்கு துணையாக குழந்தை வியாபாரம் செய்தவர்கள் இவர்கள் என்று எல்லாரையும் கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றார்கள்.

""ராமக்கா மகனையும், பெயிண்டர் செல்வராஜ் மகன் தேவாவையும் கண்டுபிடிச்சிட்டீங்க. இன்னும் 6 குழந்தைகள்தான் தனலட்சுமி மூலம் எங்ககிட்ட வந்தன. 18 மாத கலாபிரியாவை பாண்டிச்சேரி பாடசாலைத் தெரு ஆரோக்கியம்மாளிட மும், 40 நாள் ரேகா பிரியா வை கடலூர் மாவட்டம் வரகால்பட்டி பரிமளாவிட மும், ஒரு வயது விஜயகிருஷ் ணனை பாண்டிச்சேரி அனையாகுப்பம் அம்சவதியிடமும், 42 நாள் பெண் குழந்தை ஒன்றை பாண்டிச்சேரி ராமகிருஷ்ணாநகர் லலிதாவிடமும், இரண்டரை வயது சிவாவை பண்ருட்டி பாளையம் லதாவிடமும், ஒரு வயது அஜய்யை சென்னை பெரம்பூர் சங்கீ தாவிடமும் கொடுத்திருக்கிறோம்!'' கிரிஜாவும், அவர் கணவர் சிவாவும், இவர்கள் கையாள் ராணியக்காளும் வாக்குமூலம் கொடுக்க... குழந்தைக் கடத்தலில் முதன்முறையாக கிரிஜாவையும் கும்பலையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.

மறுநாளே 6 குழந்தைகளையும் மீட் டார்கள்.

கிரிஜாவைப் பற்றித் தெரிந்து கொள் வதற்காக, சென்னை மூலக்கடை மதுரை சாமிமடம் தெருவில் களமிறங்கினோம்.

""பதினைஞ்சு வருஷம் முன்னாடி இந்த ஏரியாவுக்கு வந்தாங்க கிரிஜாவும் புருஷன் சிவாவும். ஆட்டோ ஓட்டி பிழைச்சாங்க. கிரிஜாவோட வயசுக்கு வந்த பொண்ணை வியாசர்பாடி ரவுடி ஒருத்தன் கூட்டிட்டு ஓடிட்டான்... அதில இருந்துதான்... கிரிஜா வுக்கு ரவுடிகளோட தோஸ்த் அதிகமாச்சு. ஒருதரம் ஏதோ சந்தேக கேஸ்ல வில்லிவாக்கம் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய் விசாரிச்சுட்டு விட்டாங்க. ஏரியா குழாய்ல தண்ணி வர லைனா... ரேஷன் பிரச்சினைனா... ஏதாச் சும் பொதுப் பிரச் சினைனா முன்னாடி நிப்பாங்க கிரிஜா... போலீஸ் கூட கிரி ஜாவைப் பார்த்து பயப்படும்... அவ்வ ளவு போல்டான லேடி... எப்பப் பார்த்தாலும் செல்ஃபோன்ல பேசும்... ரியல் எஸ் டேட் தொழில் பண்றதாவும் தமிழ்நாடு முழுக்க புரோக்கர் களை தெரியும்னும் சொல்லுவாங்க... 9 வரு ஷமா குழந்தை திருடுற தொழிலைத்தான் செஞ்சாளா.... ராஜரிக சேவா மையம்... அது, இதுனு புதுசு புதுசா போர்டு மாட்டிட்டு இந்த தொழிலைத்தான் செஞ்சாளா? திரு.வி.க. நகர் தோழர் கோடீஸ்வரனோட குழந்தை பிரகாஷ் காணாமல் போயிட்டான்... இவ ளுங்கதான் கடத்தியிருப்பாளுங்க... கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க!'' -அந்தப் பகுதியில ஏழெட்டுப் பேர் சொன்ன தகவல்கள் இவை.

கிருஷ்ணகிரியில் எஸ்.பி.பாபுவைச் சந்தித்து, குழந்தை கடத்தல் கும்பல் பற்றிக் கேட்டோம்.

""ஒரு குழந்தைக்காக ஸ்பெஷல் டீம் போட்டோம். 8 குழந்தைகளை இதுவரை மீட்டிருக்கிறோம். அதிக குழந்தைகள் பாண்டிக்கு கடத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்து பிரான்சுக்கு கடத்தியிருக்கலாம். எக்கச்சக்க நம்பர்களை செல்ஃபோன்ல ஸ்டோர் பண்ணி, தமிழ்நாடு முழுக்க ரொம்ப பேர்ட்ட தொடர்ந்து பேசியிருக் கிறார்கள். பெரிய நெட் ஒர்க்... டிரேசவுட் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் வளர்ப்பதற்காக விற்பனை செய்தார்களா? குழந்தைகள் உடல் உறுப்புகளுக்காக இதை செய்தார்களா?

டாக்டர்கள் யாருக்காவது இதில் தொடர்பிருக்கிறதா? நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டிருக்கும் இவர்களை போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரிக்கும் போதுதான் பூதங்கள் கிளம்பும்'' என்கிறார் கிருஷ்ணகிரி எஸ்.பி.பாபு.

இன்னும் இதுபோன்ற கும்பல்கள் பெரிய நெட்வொர்க்குடன் தமிழகம் முழு வதும் குழந்தைகளை கடத்திக் கொண்டிருப்ப தாக பல தகவல்கள் வருகிறது. உடனடியாக, தனிப்படை அமைத்து அந்த கும்பல்களையும் போலீஸ் கைது செய்தால்தான் குழந்தைகள் தப்பிக்கும்.

No comments:

Post a Comment