Friday, June 4, 2010

எப்படி இருக்கிறார் பிரபாகரன் தாய்?


சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'அவர் இப்போது எப்படி

இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். 1965-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர், 1972-ம் ஆண்டு வரை பயிற்சி மருத்துவராகத் தமிழகத்தில் பணியாற்றி, சொந்த நாட்டுக்குத் திரும்பியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல போராளி இயக்கங்கள், தங்கள் வீரர்களின் சிகிச்சைக்காக இவரை அடிக்கடி கடத்திக்கொண்டு போனது உண்டு. ஒவ்வொரு முறை இவர் கடத்தப்பட்டுத் திரும்பிவரும்போதும், சிங்கள ராணுவத்தினர் வந்து 'விசாரணை' நடத்திச் செல்வதும் நடந்தது. ஆகவே, மயிலேறும்பெருமாள் 86-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டார். பிறகு 92-ல்தான் இலங்கை திரும்பி, வன்னியில் உள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது கிளிநொச்சி அரசு அதிபர், இவரை அரசு வேலைக்கு அழைக்க... இன்று வரை இலங்கை அரசு மருத்துவராகப் பணி தொடர்கிறார்.



மயிலேறும் பெருமாளைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''பார்வதி அம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிகிறதா... தேவையான வசதிகள் இருக்கின்றனவா?''

''இது இலங்கை அரசாங்கம் நடத்தும் மாவட்ட மருத்துவமனை. தேவையைவிட இங்கே ஆட்கள் குறைவுதான். 87 படுக்கைகள் இருக்கின்றன. ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாகவும் பிரசவத்துக்குத் தனியாகவும் விடுதிகள் உள்ளன. சிறிய அளவில் அறுவை சிகிச்சைகளையும் செய்கிறோம். 22 மருத்துவர்கள் தேவைப்படும் இடத்தில், நான்கு மருத்துவர்கள்தான் இருக்கிறோம். ஒரு பல் மருத்துவர், 30 செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். இருந்தும் பார்வதி அம்மாளுக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்துவருகிறோம்.''

''இப்போது எப்படி இருக்கிறார்?''

''மோசம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலது பக்கம் முழுவதும் பாரிச வாயு தாக்கியுள்ளது. மூன்று வேளைகளும் நான் அவரைப் பார்த்துச் சோதிக்கிறேன். மற்ற மருத்துவர்களும் கவனிக்கிறார்கள். காலையில் ஆப்பம், மதியம் சிறிதளவு சாப்பாடு, இரவு பால் ஆப்பம் அல்லது முட்டை ஆப்பம் சாப்பிடுகிறார். இடையிடையே வாழை, ஆரஞ்சுப் பழங்கள் தருகிறோம்... தானாகச் சாப்பிட முடியவில்லை. ஊட்டிவிடுகிறோம். உளுத்தம் களி, புட்டும் தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சம்பலும் கேட்பார். வீட்டில் இருந்து எடுத்துவந்துதான் தருவோம்.''

''இயல்பாகப் பேசுகிறாரா? பிரபாகரன் குடும்பத்தினர் யாரும் தொடர்பில் உள்ளனரா?''

''எங்களிடம் நன்றாகக் கதைப்பார். நான் அவரிடம், 'நீங்கள் கேட்கும் உணவுப் பதார்த்தங்களை எடுத்துவந்தால், என் மனைவி என்னை அடிக்க வருகிறாள்' என்பேன் விளையாட்டாய். அவர், 'அப்படியா, நல்லா அடிக்கட்டும்' என்பார் கஷ்டப்பட்டுச் சிரித்தபடி. கனடாவில் இருந்து பிரபாகரனின் சகோதரி விநோதினியோ, டென்மார்க்கில் இருக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனோ, அமெரிக்காவில் இருக்கும் விநோதினியின் மகளோ... யாராவது தினமும் பார்வதி அம்மாளிடம் பேசிவிடுவார்கள். சுற்றியுள்ள அவருடைய உறவினர்களும் தினமும் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், வரும் எல்லோருக்கும் 'ஆர்மி அல்லது போலீஸ் பார்த்துவிடுமோ' என்ற பயம் அதிகம். சிறிது நேரம் இருப்பார்கள்.

அவருடன் யாராவது பேசிக்கொண்டே இருந்தால் அவருக்கு நல்லது. வயோதிகத்தால் ஞாபகமறதி கூடிவிட்டது. சில சமயம் தாதியர்கள், 'உங்கள் பேரன் பாலச்சந்திரன் எங்கிருக்கிறான்?' என்று கேட்டால், 'அவன் காட்டுக்குள்ள இருக்கிறான்' என சொல்வார். உறவினர்கள் வந்து பேசப் பேச, பழையவற்றை ஞாபகப்படுத்திப் பேசுகிறார்.''

''பார்வதி அம்மாளைப் பார்க்க பார்வையாளர் கூட்டம் வருமா?''

''தமிழர்கள், சிங்களர்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் வருகிறார்கள். யாரையும் தடுப்பது இல்லை. வயோதிகமான ஒரு பெண்ணை விருப்பப்பட்டு பார்க்க வருவோரை மருத்துவன் என்ற முறையில் தடுக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில்தான் 'அவர் பார்க்கக் கூடாது, இவர் பார்க்கக் கூடாது' என்று சொல்லிவிட்டார் கலைஞர் அய்யா. மருத்துவன் என்ற முறையில் சொல்கிறேன்... வயோதிக நோயாளிகளுக்கு அவர்கள் கேட்பதைக் கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகும். இல்லையென்றால், மனவருத்தம் அடைவார்கள்தானே... அப்படி வருத்தப்படவைத்து சிகிச்சை அளிப்பதில் அர்த்தம் இல்லை. அதே நேரம், பார்வதி அம்மாளைப் பார்க்க வருபவர்கள் அன்பு மிகுதியால் அவர் உடல் நலத்துக்கு ஒவ்வாத பலவிதமான உணவுப் பொருள்களைத் தந்துவிடுகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். 'பார்வையாளர்கள் எந்தப் பொருளையும் அம்மாவுக்குக் கொண்டுவரக் கூடாது' என உத்தரவிடப்போகிறேன்.''

''பிரபாகரனின் அம்மாவுக்குச் சிகிச்சை அளிப்பதால், உங்களுக்கு பிரச்னைகள் ஏதும்..?''

''81 வயது நோயாளி அந்த அம்மா. நான் அவருடைய மருத்துவர். இதில் என்ன பிரச்னை? இனிமேல் என்ன பிரச்னை வந்துதான் என்ன? 70 வயதிலும் நான் இந்த வேலையில் இருக்கிறேன். தொழில்தர்மத்துடன் செயல்படுகிறேன். இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. முன்பு, நான்கு முறை துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியிருக்கிறேன். ஒரே நேரத்தில் புலிப் போராளிகளுக்கும் ராணுவப் படையினருக்கும் சிகிச்சை அளித்துள்ளேன். அப்போது, அவர்களுக்குள் தாக்குதலும் நடந்துள்ளது. இப்போது அதையெல்லாம் கடந்து நெடுந்தூரம் வந்து விட்டோம்.''

''பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா... இல்லையா?''

''நான் மன்னாரில் மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்தபோது, பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை, மாவட்ட நில அதிகாரியாக இருந்தார். எனக்குத் தெரிந்தவரை போராட்டம் என்று கையில் 'துவக்கு' தூக்கிய பிறகு தன் குடும்பத்துடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இல்லை. சமாதானக் காலத்தில்தான் பெற்றோருடன் இணைந் திருந்தார். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு தெய்வப் பிறவி, அசாதாரண மான மனுஷன். ஆனால், அவர் எடுத்த வழிதான் வேறு. அவர் எங்கோ உயிருடன் இருப்பதாகவே இங்குள்ள பெரும்பாலான மக்கள் சொல்கி றார்கள்!'' - அழுத்தமாகவே சொன்னார் டாக்டர் மயிலேறும் பெருமாள்!

விடாத கருப்பன்!

பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, பொதுநலன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கருப்பன். அவர் நம்மிடம், ''அனைத்துலக ஒப்பந்தப்படி எந்த நாட்டவரும் எந்த நாட்டிலும் தஞ்சம் கோரலாம். அப்படி அகதியாக வரும் யாரிடமும் விசா கேட்கமுடியாது. அகதிகளாக வருபவர்களுக்கே இந்த உரிமை என்றால், முறைப்படி விசா பெற்று, மகனை இழந்த தாயாக, கணவனை இழந்த விதவையாக, சிகிச்சைக்காக வந்த 81 வயது மூதாட்டியைத் திருப்பி அனுப்பியது எந்த விதத்தில் நியாயம்? கொடுத்த விசாவை முறியடிக்கும் வகையில் நடந்துகொண்டது மாபெரும் குற்றம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஆயிரக்கணக்கானோருக்கு தாராளமாக மருத்துவ விசா வழங்கப்படுகிறது. ஆனால், மறைந்துவிட்ட ஒரு வீரத் தமிழனின் தாய்க்கு மருத்துவ உதவிக்கு அனுமதி இல்லை. இதிலும் மாநில அரசு நிபந்தனைகளை விதிக்கிறது. மத்திய அரசின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சட்ட சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் இங்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்கவேண்டும். இதில் நீதி கிடைக்கும்வரை விடமாட்டேன். பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சைஅளிக்க அனுமதி பெறுவதற்காக, அனைத்துலக நீதிமன்றங்களின் கதவுகளையும் விரைவில் தட்டுவேன்'' என்று ஆவேசப்பட்டார் மூத்த வழக்கறிஞர் கருப்பன்.

No comments:

Post a Comment