Thursday, June 3, 2010

பேரம் முடியலப்பா! பாவம் பா.ம.க!


shockan.blogspot.com

சில இயக்குநர்களின் படம் பார்த்தால் க்ளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று முதல் ரீலில் முடிவெடுத்துவிடலாம். அதை அரசியலில் அமல்படுத்துபவர் டாக்டர் ராமதாஸ். ஒரு தேர்தல் மேடையில் கருணாநிதியுடன் கைகோத்தால், அடுத்த தேர்தலில் ஜெ-வுக்கு ஜே போடுவார். இந்த அணி மாற்றம் உடனே நடக்கும் என்பது அனைவரும் அறிவார்கள். 'பா.ம.க. இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி' என்பது ராமதாஸ் சொல்வது. ஆனால், வெற்றி கிடைக்கப்போகும் இடத்தில் அவர் இருப்பார் என்பதே நிஜத்தில் நடப்பது. இப்படி ஒரு காட்சி மாற்றம் இந்த வாரத்திலும் நடந்திருக்கிறது. இதை ராஜ தந்திரம் என்று ஆதாயம் பெறுபவர்கள் வேண்டு மானால் சொல்லலாம். ஆனால் நரித் தந்திரம் என்றே அப்பாவிகள் சொல்வார்கள்.

பென்னாகரம் தேர்தல் முடிந்து முழுமையாக மூன்று மாதங்கள் முடியவில்லை. 'தி.மு.க-தான் எங்களது முதல் எதிரி' என்று ராமதாஸ் அறிவித்தார். அந்தக் கட்சியின் மந்திரிகளை எழுத முடியாத அளவுக்கு ஏசினார். 'படி படி என்பவன் நான். ஆனால், உங்களைக் குடி குடி என்று கெடுத்தது கருணாநிதிதான்' என்று பாய்ந்தார். 'தி.மு.க-வின் பணம் முக்கியமா? அல்லது இனம் முக்கியமா?' என்று முடிவெடுக்கச் சொன்னார். மக்கள் என்ன முடிவெடுத்தார் கள் என்பது இருக்கட்டும். ராமதாஸே தி.மு.க-தான் முக்கியம் என்று திரும்பினார். மேலவை கொண்டுவரும் தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர்கள் அத்தனை பேரும்


ஆதரித்து வாக்களித்தார் கள். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க் கள் முதல்வரே நனையும் அளவுக்குப் புகழ்ந்தார்கள். மாமல்லபுரம் இளைஞர் விழாவில் கருணாநிதி மீதான காரம் அவ்வளவாக இல்லை. கர்ஜிக்கும் ராமதாஸ்கூட, 'முதல்வரைச் சந்திப்பேன்' என்று மூன்று முறை திறந்தவெளி அப்பாயின்மென்ட் கேட்டார். 'சரணடையும் ஆளைத் தழுவத் தேடும்போது, அவன் தரையில் உருண்டோடி வந்ததைப்போல' கோபாலபுரத்தை நோக்கி நகர்ந்து வந்தது தைலாபுரம்.

இதற்காகத்தானே காத்திருந்தார் கருணாநிதி. துண்டுச் சீட்டு கொடுத்தாலே, அதை 'அளப்பரிய' ஆதாரமாகக் காட்டும் அவர், ராமதாஸ் அனுப்பிய கடிதங்களையா விட்டுவைப்பார். 'தி.மு.க. கூட்டணியில் பா.ம.க-வை மீண்டும் சேர்த்துக்கொள்கிறோம்' என்று உயர்மட்டச் செயல்திட்டக் குழுத் தீர்மானத்தைவிட, அதில் இணைக்கப்பட்ட ராமதாஸின் கடித வரிகள்தான் அதிகமாக இருந்தன. 'இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்துவிட்டோம். நீங்களும் மறந்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்' என்று ஆரம்பிக்கும் ராமதாஸின் கடிதம், 'இப்போது நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க-வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என்ற வேண்டுகோளுடன் முடிகிறது. கடந்த காலச் சம்பவங்களை கருணாநிதி மறக்கவில்லை, மறக்க விரும்பவும் இல்லை என்பதை அவர் எடுத்துள்ள முடிவு காட்டுகிறது. 'கூட்டணிக்குள் பா.ம.க. இணைய லாம். ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், மேலவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு நடக்கப்போகும் மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடத்தை வழங்கத் தயார்' என்று கருணாநிதி அறிவித்தார். இதைக் கொஞ்ச மும் ராமதாஸ் எதிர்பார்க்கவில்லை. 'நம்பவெச்சுக் கழுத்தை அறுத்துவிட்டார்' என்று பா.ம.க-வின் மேல்மட்ட அளவில் கோபம்தான் வெடித்தது.

ராமதாஸ§க்குக் கோபம் வந்ததில் நியாயம் இருக்கிறது. அவர் இரண்டு கடிதங்களைத் தனக்கு அனுப்பியதாக கருணாநிதி சொல்கிறார். ஒரு கடிதம்தான் முதலில் அனுப்பினார் ராமதாஸ். அதில், எல்லாவற்றையும்சொல்லி விட்டு, 'தி.மு.க-வுடன் இணக்கமாகச் செயல்படத் தயாராக இருக்கிறோம்' என்று ராமதாஸ் அதில் எழுதிஇருந்தார். இதைப் பார்த்த கருணாநிதி, 'இணக்கமான என்ற வார்த்தை தெளிவாக இல்லை, கூட்டணியில்இணை கிறோம்' என்பது மாதிரி இருந்தால் நல்லது என்று சொன்னதாகவும் அதன் அடிப்படையில் இரண்டாவது கடிதத்தை ராமதாஸ் எழுதியதாகவும் தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. அதில் கூட்டணியில் சேர்ந்து செயலாற்று வோம் என்று உள்ளதாம். 'இப்படிக் கடிதத்தை மாற்றிக் கேட்டதே தி.மு.க-வுக்கு எங்கள் மீதான நல்லெண்ணத்தைக் காட்டியது. நாங்கள் கேட்ட எம்.பி. பதவியைத் தருவதற்கு ஒப்புக்கொண்டதால்தான் அவர் வார்த்தைகளைமாற்றித் தரச் சொன்னார்' என்று பா.ம.க. தரப்பு நம்பியது.

அன்புமணிக்கு எம்.பி. பதவி தருவதில் கருணாநிதிக்கு ஆட்சேபனை இல்லை. அவர்தான் முந்தைய தேர்தலில் தி.மு.க-வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னவர் என்பது கருணாநிதிக்குத் தெரியாததல்ல. ஆனால், ஸ்டாலின், அழகிரி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா என நித்தமும் கருணாநிதியை வலம் வருபவர்கள் பா.ம.க-வை எதிர்த்தார்கள். ஒவ்வொருவர் எதிர்ப்புக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால், அனைவரும் சேர்ந்து, 'உங்களிடம் எம்.பி. வாங்கிவிட்டு சட்டசபைத் தேர்தலில் அந்த அம்மாவிடம் சேர மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்று கேட்ட கேள்விக்கு கருணாநிதியால் பதிலளிக்க முடியவில்லை. எனவேதான், 'சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம்' என்று கருணாநிதி கை விரித்தார்.

'இது ராமதாஸின் லாயல்டியைச் சோதனை செய்வதற்கான முடிவா?' என்று நிருபர்கள் கேட்டபோது, 'உங்கள் கற்பனைக்கு நான் ஆள் அல்ல' என்று மறுத்தாரே தவிர, 'ராமதாஸ் மீது நான் சந்தேகப்படவில்லை' என்று அவரால் சொல்ல முடியவில்லை. 'கருணாநிதியை எங்கள் எம்.எல்.ஏ-க்கள் சந்தித்துப் பேசுவார்கள்' என்று ராமதாஸ§ம் இறங்கியே போக வேண்டி இருந்தது... திங்கள்கிழமை இரவு வரையிலான நிலவரம்.

ராமதாஸை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் போய், நிபந்தனை விதிக்கும் நிலைக்கு மாறக் காரணம் இந்த 'லாயல்ட்டி'தான்! அரசியலில் மிக மோசமானவர்கள்கூட உயரத்துக்குப் போயிருக்கிறார்கள், ஆனால், நம்பத்தகாதவர்கள் எவ்வளவு உயரம் போனாலும் வீழ்ந்திருக்கிறார்கள்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால்தான் வாக்கு கிடைக்கும். இது ராமதாஸ§க்கு மட்டும்அல்ல, அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்!

No comments:

Post a Comment