Monday, May 24, 2010

சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!


shockan.blogspot.com
கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் சந்தித்த அதே சோதனையை இப்போது கேரளாவிலும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழ்ப் படங்களுக்கு கேரள மக்களிடையே கிடைக்கும் பெரும் வரவேற்பு, மலையாளப் படங்களுக்கு தியேட்டர் கூட கிடைக்காத நிலையை உருவாக்கிவிடுவதால், தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை இரண்டு வாரங்கள் கழித்துதான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதையும் மீறி சுறா மற்றும் கைட்ஸ் (இந்தி) படங்களை விநியோகித்த இரு நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதித்துள்ளது கேரள விநியோகஸ்தர்கள் சங்கம்.

சுறா படத்தை தமீன்ஸ் பில்ம்ஸ் என்ற நிறுவனம் கேரளாவில் வெளியிட்டது. இரு வாரங்கள் கழித்து வெளியிடாமல், தமிழகத்தில் வெளியான போதே கேரளாவிலும் ரிலீஸ் செய்தது.

அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் ஹ்ரித்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை ஒரே நேரத்தில் கேரளாவிலும் வெளியிட்டது. இது தங்களின் முடிவை மீறிய செயல் என்று கூறி, சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் ரெட் கார்டு போட்டுள்ளது விநியோகஸ்தர்கள் சங்கம்.

அதேநேரம், கைட்ஸ் படம் 45 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. ஆனால் விநியோகஸ்தர்கள் தந்த நெருக்கடியால் வெறும் 18 தியேட்டர்களில்தான் வெளியானது.

சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தையும் தமீன்ஸ் பிலிம்ஸ்தான் வெளியிடவிருக்கிறது. ஆனால் இந்நிறுவனத்துக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதால், சிங்கத்துக்கு தியேட்டர் தர யாரும் முன்வரவில்லை.

அதே போல மணிரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. இந்தப் படத்துக்கும் தியேட்டர் தரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்படியே வேறு விநியோகஸ்தர்கள் இந்தப் படங்களை ரிலீஸ் செய்ய முனைந்தாலும், இரு வாரங்கள் கழித்துதான் வெளியிட்டாக வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாட்டின் பின்னணியில் மலையாள முன்னணி நடிகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களின் படங்கள் இரு வாரங்களுக்குக் கூட தாக்குப் பிடித்து ஓடுவதில்லை. ஆனால் தமிழ், இந்தி, ஆங்கிலப் படங்கள் நல்ல வசூலுடன் அதிக நாட்கள் ஓடுகின்றன. எனவே பிற மொழிப் படங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் மலையாளப் படங்களை ஓட்டஒ ரே வழி என்று மலையாள திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment