Saturday, May 1, 2010

மத்திய அரசு தப்பிய பின்னணி!




shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரா பா.ஜ.க கூட்டணியும், இடதுசாரிகள் அணியும் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானங்கள் தோல்வியடைஞ்சதன் பின்னணி பற்றித்தான் டெல்லி வட்டாரத்தில் பேச்சு நிலவுது.''

""கடைசி நேரத்தில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள்தானே வெட்டுத் தீர்மானங்களிலிருந்து காங்கிரஸ் அரசைக் காப்பாற்றி யிருக்குது.''

""அரசாங்கத்தின் நிதி மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதற்குப் பெயர்தான் வெட்டுத் தீர்மானம். இதில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகமா இருந்தால், ஆட்சிக் கவிழும் அபாயம் உண்டு. சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு எதிர்கொண்ட முதல் வெட்டுத் தீர்மானம் இதுதான்னு அரசியல் வல்லுநர்கள் சொல்றாங்க. இதற்கு முன்னாடி, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதி மசோதாவை எதிர்த்து 1946-க்கு முன்னாடி அப்போதைய கட்சிகள் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்திருக்குது. அதற்கப்புறம் 65 வருஷம் கழித்து இப்பதான் வெட்டுத் தீர்மானங்களை ஒரு அரசாங்கம் எதிர்கொண்டது.''

""வெட்டுத் தீர்மானங்களை முறியடிக்க மன்மோகன்சிங் அரசு எப்படி வியூகம் வகுத்ததாம்?''

""இப்படியொரு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவரும்னு காங்கிரஸ் அரசு எதிர்பார்க்கலை. அதிலும் இடதுசாரிகள் ஒருங்கிணைத்த அ.தி.மு.க, தெலுங்குதேசம், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட 13 கட்சிகளின் வெட்டுத் தீர்மானத்துக்கு பா.ஜ.க தரப்பின் ஆதரவு இருக்காதுன்னும் பா.ஜ.க கூட்டணி கொண்டு வரும் தீர்மானத்துக்கு இடது சாரிகள் அணியின் ஆதரவு இருக்காதுன்னும்தான் காங்கிரஸ் நினைத் திருந்தது. ஆனா, பா.ஜ.கவும் இடதுசாரிகளும் ஒருவரையொருவர் ஆதரித்து செயல்பட்டதால் காங்கிரஸ் தரப்பு மிரண்டுவிட்டது. வெட்டுத் தீர்மானங்கள் நிறைவேறினால் ஆட்சிக் கவிழ்ந்திடும். அதனால் பரபரன்னு வேலைகள் நடந்தது.''

""என்ன வேலைகள்?''

""தன்னை பலப்படுத்திக்கொள்வதைவிடவும் எதிரியை பலவீன மாக்குவதுதானே அரசியலில் ரொம்ப முக்கியம். அந்த வேலையைத்தான் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்தது. அதன் லிஸ்ட்டில் முதலில் இருந்தவர், லாலுபிரசாத் யாதவ். மாட்டுத் தீவன ஊழல் பற்றி வருமான வரித்துறை ஒரு ரிப்போர்ட் தயாரித்து, அதை லாலுவின் சொத்துக்குவிப்பு வழக்கோடு சேர்த்தது. இதை எதிர்த்து லாலு அப்பீல் செய்திருந்தார். சி.பி.ஐ.தான் இந்த வழக்கை விசாரித்தது. அதாவது, சிறுதாவூர் பஞ்சமி நிலங் களை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி தாசில்தாரை இடம் மாற்றிக்கொண்டு வந்த ஜெ.வைப்போல, டெல்லியில் தனக்கு நெருக்கமாக இருந்த சத்ருகன் சர்மா என்ற அதிகாரியை பாட்னாவுக்கு இடம்மாற்றி, டாக்குமென்ட்டுகளை தயார் செய்திருந்தார் லாலு என்பதுதான் சி.பி.ஐ குற்றச்சாட்டு. மன்மோகன்சிங் கின் முதல் ஐந்தாண்டுகால ஆட்சியில் லாலுவும் இடம்பெற்றிருந்ததால், இந்த வழக்கில் அவருக்கு ஆதரவான நிலையே இருந்தது. அதனால், அவரோட அரசியல் எதிரியான பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மாநில அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் லாலுவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். லாலுவோ சொத்துக் குவிப்பு வழக்கை குவாஷ் செய்யணும்னு வழக்குப்போட்டார்.''

""என்ன உத்தரவு வந்தது?''

""சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்கில், பீகார் அரசாங்கத்துக்கு மனுதாக்கல் செய்யும் தகுதி கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் சொல்லிடிச்சி. இந்த நிலைமையில்தான், வெட்டுத் தீர்மானக் கத்தி, மன்மோகன்சிங் அரசின் தலைக்கு மேல தொங்க ஆரம்பிச்சது. சொத்துக்குவிப்பு வழக்கை குவாஷ் செய்ய வலியுறுத்தும் லாலுவிடம் காங்கிரஸ் தரப்பி லிருந்து பேசப்பட, வெட்டுத்தீர்மானத்தின் மீது தன் கட்சியின் நிலையை மாற்றிக்கொள்ள லாலு முன் வந்தார். அவர் கட்சி எம்.பி.க்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். சுப்ரீம்கோர்ட்டில் லாலுவுக்கு ஆதரவா சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருக்குது.''

""ஓ...''

""இதே மாதிரிதான் முலாயம்சிங் மேலேயும் அவரது 2 மகன்கள், 1 மருமகன் மேலே 100 கோடி ரூபாய்க்கான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்வது பற்றி சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பொதுநலவழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த அப்போதைய நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், இந்தக் குற்றச்சாட்டு கள் மீது ஏன் சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கூடாது எனக்கேட்டு ஆர்டர் போட, சி.பி.ஐ.யும் முலாயம் உள்ளிட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போட்டது. இதற்காக நீதியரசருக்கு அப்ப மிரட்டல் கடிதம் கூட வந்தது. அவர் மத்திய அரசுக்கு சாதகமா இருப்பதா குற்றம் சாட்டப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கால் மிரண்டு போயிருக்கும் முலாயம் தரப்பிடம் , வெட்டுத்தீர்மானம் தொடர்பா காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்டது. மத்திய அரசின் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால்சுப்ரமணி யம், முலாயம் தரப்பு மீது சி.பி.ஐ.யில் எந்த வழக்கும் இல்லை. குளோஸ் ஆயிடிச்சின்னு அஃபிடவிட் தாக்கல் செய்தார். வெட்டுத் தீர்மானத்தை முலாயமின் சமாஜ்வாடி எம்.பி.க்கள் புறக்கணிச்சிட்டாங்க.''

""ஆதரிப்பாரா எதிர்ப்பாரான்னு கடைசி வரை சஸ்பென்சா இருந்த மாயாவதியின் ரோல் இந்த வெட்டுத் தீர்மானத்தில் காங்கிரஸ் அரசு தப்பிக்க ரொம்பவும் கை கொடுத்திருக்குதே?''

""மாயாவதி தாஜ்காரிடார் ஊழல் தொடர்பா சி.பி.ஐ. வழக்கு இருக்குது. அதோடு 150 கோடி ரூபாய்க்கான சொத்துக்குவிப்பு வழக்கும் இருக்குது. மாயாவதியோ தன்னுடைய சொத்தெல்லாம் மக்கள் தந்த பரிசுப்பணம்னு சொல்றார். சி.பி.ஐ.யோ, மாயாவதி தன்னோட பணத் தைத்தான் மக்கள் பணம்னு கணக்கு காட்டுறாருன்னு சொல்லுது. ரூபாய் நோட்டு மாலைகள் தொடர்ந்து அவருக்கு அணிவிக்கப்படுவதன் ரகசியமும் அதுதான். இது மாயாவதி பணம்தான்னு வருமானவரித்துறையும் ரிப்போர்ட் தாக்கல் செய்திருக்குது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வெட்டுத்தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவுசெய்ததும் இந்த வழக்குகள் மீது காங்கிரசின் கவனம் திரும்பியது.''

""என்ன மூவ்?''

""சோனியாவின் உத்தரவுப்படி மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங்கிடம் அகமது பட்டேல் பேசினார். அதையடுத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எஸ்.சி. மிஸ்ராங்கிறவர்கிட்டே திக் விஜய்சிங் பேசினார். வழக்கு விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டது. மாயாவதி முறைப்படிதான் செயல்பட்டிருக் கிறார்னு வருமானவரித்துறையினர் ரிப்போர்ட் தாக்கல் செய்ய, வருமானவரித்துறையின் ரிப்போர்ட் கரெக்ட்தான்னு அட்டர்னி ஜெனரல் வாகனாவதியும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் சோனியாவிடமே மாயாவதி பேச, வெட்டுத் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவா பகுஜன்சமாஜ்கட்சி எம்.பி.க்கள் வாக்களித்தாங்க. காங்கிரஸ் அரசு தப்பித்தது. இப்ப வழக்கை குவாஷ் செய்யச் சொல்லி மாயாவதி பெட்டிஷன் போட்டிருக்கிறார்.''

""ம்..''

""இந்த விவரங்களையெல்லாம் சொன்ன டெல்லி வட்டாரத்தினர், சொத்துக்குவிப்பு வழக்குங்கிற சூட்சுமக்கயிறை இழுத்தால் பெரிய பெரிய அரசியல் தலைகளெல்லாம் ஆடுது. அதனால, மத்திய அரசின் தயவோடு வழக்கிலிருந்து தப்பிக்கப் பார்க்குது. காங்கிரஸ் உறவை உங்க ஜெ நாடுவதற்கு எலக்ஷன் மட்டும் காரணமில்லை. சொத்துக்குவிப்பு வழக்கும் முக்கியகாரணம்னு சொல்றாங்க. அதனாலதான், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து எப்படியாவது தப்பிக்கணும்னு அதைத் தள்ளுபடி செய்யச் சொல்லி மனு மேல் மனு தாக்கல் செய்கிறார் ஜெ. விஜிலென்ஸ் அதிகாரி நல்லம்ம நாயுடுவின் விசாரணை தவறானதுன்னும் ஏற்கக்கூடாதுன்னும் பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியாகிவிட்டது. மே 3-ந் தேதி மீண்டும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை துவங்குகிறது. அன்று சாட்சிகளுக்கு சம்மன் அனுப் பப்பட இருக்கிறது.''

""வெட்டுத் தீர்மானத்திலிருந்து தப்பிக்கும் சூட்சுமக் கயிறைக் கண்டு பிடித்து மன்மோகன்சிங் அரசு தப்பிச் சிடிச்சி. ஆனா ஜார்கண்டில் சிபுசோரன் அரசுக்கு சிக்கலாயிடிச்சே.''

""தலைவரே... ஜார்கண்டில் பா.ஜ.க. தயவுடன் சிபுசோரன் தலைமையிலான ஜே.எம்.எம். அரசு ஆட்சி செய்யுது. முதல்வரான சிபுசோரன் இன்னமும் சட்டமன்ற உறுப்பினராகலை. எம்.பி. பதயிலேயே நீடிச்சிக்கிட்டிருக்கிறார். வெட்டுத் தீர்மானத்தில் கலந்துகொண்டு காங்கிரசுக்கு ஆதரவா இவர் ஓட்டுப் போட்டதால் ஜார்கண்டில் இவருடனான உறவை வெட்டிவிடுவதா பா.ஜ.க. அறிவித்திருக்குது.''

""அப்படின்னா காங்கிரஸ் கை கொடுக் குமே?''

""மற்ற தலைவர்களுக்கு சொத்துக் குவிப்பு வழக்குன்னா, சிபுசோரனுக்கு கொலை வழக்கு பயமுறுத்துது. மாநிலத்தில் ஒரு கட்சியின் ஆதரவு, மத்தியில் இன்னொரு கட்சிக்கு ஆதரவுன்னு அவர் ஊசலாடியதன் பின்னணி இதுதான். தெரியாம பட்டனை அழுத்திட்டேன்கிற அளவுக்கு சிபுசோரன் சொல்லியும் பா.ஜ.க. சமாதானமாகலை. ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டாங்க. ஜார்கண்ட் அரசியல் நில வரம் அகில இந்திய கவனத்துக்குரியதாயிடிச்சி.''

""குமுதம் பத்திரிகை பிரச்சினையைத் தீர்க்க குழு அமைக்கப்படும்னு முதல்வர் சொல்லி யிருந்தார். இப்ப அந்த விவகாரம் என்ன நிலையில் இருக்குதாம்?''

""குமுதம் குழுமத்தில் 66% ஷேர் அதன் ஆசிரியர் ஜவகர்பழனியப்பன் வசம் இருக்குது. அவங்க அம்மா கோதை ஆச்சிக்கு 2% ஷேர். மீதி 32% ஷேர் இன்பிரிண்ட் டெக் என்ற நிறுவனத்தின் பெயரில் இருக்குது. இதில் குமுதம் எம்.டி வரதராஜன், அவர் தம்பி சீனிவாசன், இவர்களின் மனைவிகள், பாட்டின்னு எல்லோரும் பங்குதாரரா இருக்காங்க. ஜவகர் பழனியப்பன் தரப்பு என்னசொல்லுதுன்னா, கடந்த 3 வருடத்தில் 30 கோடி ரூபாயை சம்பளமா எடுத்திருக்கிறாராம் வரதராஜன். இது அவர் தரப்பின் 32% ஷேரைவிட அதிகம். அதனால அவர்தான் கூடுதலா பணம் தரணும். இருந்தாலும், இந்த சம்பளத்தை ஷேர் கணக்கில் கழித்துவிடுகிறோம். அவர் வெளியேறணும்னு சொல்லுது. வரதராஜன் தரப்போ, கணக்குகள் எல்லாம் மிகச்சரியா இருக்கு. அதனால், குமுதம் நிறுவனத்தில் முழு அதிகாரத்தோடு தங்களுக்கு பொறுப்பு தரணும்னு வலியுறுத்துது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத்தான் குழு அமைக்கப்படுது.''

""எந்தப் பக்கம் நியாயம் இருக்குதோ அதன்படி செயல்படத்தான் குழுன்னு முதல்வர் சொல்லியிருக்கிறார்.''

""பிரபாகரன் அம்மா பார்வதியம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சையளிக்க மத்திய அரசை வலியுறுத்தணும்னு கலைஞர்கிட்ட வீரமணி, திருமா, சுப.வீ. மூவரும் மனு கொடுத்தாங்க. பிரபாகரன் அம்மா கிட்டே இது சம்பந்தமா கடிதம் வாங்கிக் கொடுத்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்னு கலைஞர் சொல்லியிருக்கிறார். மே 17-ந் தேதியோடு பார்வதி யம்மாளின் விசா முயுயுது. அதற்குள் கடிதம் வாங்கி, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்கான முயற்சியில் மும்முரமா இருக்காரு சுப.வீ.''

No comments:

Post a Comment