Sunday, May 2, 2010

மாறிய வடிவேலு! நண்பர்களின் வருத்தம்!


shockan.blogspot.com

""மற்றவர்களை குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கும் ஒரு உண்மையான கோமாளியின் இதயம், எப்போதும் கண்ணீர் குளத்தில் மிதந்து கொண்டு தான் இருக்கும்'' என்றார் மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை கலைஞர் வைகைப் புயல் வடிவேலுவின் பால்ய காலமும் இப்படிப்பட்டதுதான். ""நாவாலும் வறுமையாலும் சுடப்பட்ட வடுக்களைச் சுமந்தபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்தக் கலைஞன்'' எடுத்துக் கட்டி இதை நாம் எழுதவில்லை. தொகுத்துக் கூட்டி வடி வேலுவும் இதைச் சொல்லவில்லை. வைகைப் புயலின் பால்ய காலத்து இணை பிரியா தோழர்களான என்.எஸ்.பாலு, ராஜேஸ் மணி, வீரஷாஜகான், சக்திவேல், துரைபாண்டி, நாகூர்கனி ஆகியோர் கண்ணீர் மல்கச் சொன்ன வை இவை.

""மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் மூணாம் நம்பர் சந்துதான் எங் கள் திறந்தவெளி நாடகப்பட்டறை. பொழுது விடிஞ்சதில இருந்து பாதி சாமம்வரை... சில நாட்கள் கோழி கூப்பிடும் வரை ரிகர்சல் பார்ப்போம். பக்கத்தில் இருக்கிற வெத்தலை கடை வியாபாரியிடம் அடம்பிடித்து மல்லுக்கட்டி 5 ரூபாய் வாங்குவோம். சின்னச் சின்ன நாடகங்களை அரங் கேற்றுவோம். ஏரியா மக்களிடம் கைதட்டலைப் பெறுவோம். அந்த மகிழ்ச்சியைக் கலந்து கொண்டாடுவோம். எங்க 6 பேரின் சிறுவயதும் நாடகமே வாழ்க்கையாக கழிந்தவை!''.

""அந்தக் காலத்துல எங்கள் நண்பன் வடிவேலுவும், அவன் தந்தை நடராஜன் பிள்ளையும் தம்பிமார்கள் 3 பேரும் கண்ணாடிக் கடையில் வேலை செய்தார்கள். அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்துப்புட்டு நாடக ரிகர்சலுக்கு வந்துவிடுவான் வடிவேலு. மணிதான் டைரக்டர். பாலு கதாநாயகன். வடிவேலு காமெடியன்... அப்பவே மக்களை மட்டுமில்லை... எங்க வறுமையையும் மறக்க வச்சு சிரிக்க வைப்பான் வடிவேலு. எல்லாருமே சிரித்துக்கொண்டி ருப்போம் இரண்டு நாள் பசியோடு!''.

""எங்க டீம்ல வருமானமுள்ள ஒரே ஆள் பாலுதான். ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல வேலை. தினமும் நாப்பது அம்பது கொண்டாருவார். வடிவேலு கண்ணாடிக் கடைக்கு மட்டம் போட்டுட்டு தினமும் அரிதாரம் பூசிக்கிற வந்ததால, அவன் குடும்ப வருமானம் வெகுவாக் கொறஞ்சு போச்சு. வீட்டையும் பட்டினி போடமுடியாது. வேஷம் கட்டுற தையும் விட முடியாது. அவன் அப்பாரு... சுனாமியா மாறிடு வாரு. ஃபாரஸ்ட்ல இருந்து பாலு வர்ற வரைக்கும் காத் துக்கினு கெடப்பான் வடிவேலு. வந்ததும் 20 ரூபாய் வாங்கி அரிசியை வாங்கிட்டுத்தான் வீட்டுக்குப் போவான். வீசின கையும் வெறுங்கையுமா வீட் டுக்குப் போனால் வடி வேலு உடம்பு வீங் கிப் போகுமே!''.

""முனிச்சாலை ஏரியாவில 10-க்கும் அதிகமான நாடகங்களைப் போட்டோம். எல்லாருமே ரொம்ப ஃபேமசாயிட்டோம். சினிமாவுல நடிக்கிறதுக்கு எங்கட்ட திறமை யிருக்குனு நம்பினோம். கோடம் பாக்கத்தை கட்டியாளும் பேராசை யோட மெட்ராசுக்கு புறப்பட் டோம். 50 ரூபாய் இருந்துச்சு. லாரிக்காரர்கிட்ட குடுத்துட்டு லாரியோட டாப்பில ஏறிப் படுத்துக்கிட்டாக பாலுவும் ராஜேஸ்மணியும் வடிவேலுவும்... வைகைப் புயலின் முதல் பயணம் அதுதான்...''.

""எங்க வடிவேலு நடிச்ச முதல் படம் ராஜ்கிரணின் "ராசாவின் மனசிலே'னு நெனைக்கிறியளா? இல்லப்பூ... அவன் கேமராவுக்கு மின்னாடி நின்னு நடிச்சது டி.ஆரோட "என் தங்கை கல்யாணி' படத்துக்குதாம்ப்பூ... அதுக்கு 100 ரூபாய் சம்பளம் கெடைச்சதாம்!''.

""என் தங்கை கல்யாணி படத்தில சைக்கிள் திருட்டு சீன்ல நடிச்சுப்பிட்டு மதுரைக்கு திரும் பிட்டான் வடிவேலு. அப்ப, விநியோகஸ்தரா இருந்த ராஜ் கிரண், ஒரு கல்யாணத்துக்காக மதுரைக்கு வந்தார். அவர்ட்ட நடிச்சுக்காட்டிதான் "ராசாவின் மனசிலே' படத்துக்கு சான்ஸ் வாங்கினான்!''.

""அதுவரைக்கும் வெத்தலை கடை வாசல்ல இருக்கிற டீக் கடையில் கடன் சொல்லிக் குடிப்போம். வெத்தலை கடை மணி காசு கொடுப்பார்!''

""ராசாவின் மனசிலே சூட் டிங்ல இருந்தப்ப... வடிவேலு அப்பா செத்துப்போயிட்டாரு... நாங்கதான் ஆளுக்கு 50 ரூபாய், 100 ரூபாய்னு போட்டு, தத்தனேரி சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போனோம். அதை வந்து பார்த்த வடிவேலு... சுடுகாட்ல எங்களை யெல்லாம் கட்டிப் புடிச்சு கதறினான். டேய்... சினிமா சான்ஸ் கிடைச்சு எனக்கு வசதி வந்தால்... சாகும்வரை உங்களுக்கெல் லாம் உதவி செய்வேன்டானு அவன் சொல்லிக்கிட்டே அவன் சிந்தின கண்ணீரு நடிப்பில்லை, சத்தியம்ப்பூ!''.

""புது வீடு கட்டி பால் காய்ச்சி னப்ப... எல்லாரையும் கூட்டிப்போய் "இந்த உழைப்பு, சம்பாத்தியம் இதுக்கெல்லாம் காரணம்... டேய் பாலு நீ சொல்லித் தந்த டயலாக்கும் நடிப்பும்தான்டா... நீ எங்கிட்ட உதவியெதும் கேக்கலை. இருந்தாலும்... உங்க எல்லாருக்காகவும் ஒரு படம் நடிச்சு அந்தக் காசை அப்பிடியே உங்களுக்குத் தருவேன்'னு வடிவேலு சொன்னப்ப... எங்க மனசெல்லாம் நெறஞ்சு போச்சுப்பூ!''.

""மதுரை முனிச்சாலைல நாடக ரிகர்சல் பார்த்துக்கிட்டிருந்தப்ப... எங்களையெல்லாம் விட்டுப்புட்டு, வடிவேலு மேல விழுந்து கடிச்சுக் குதறிப் பிடிச்சு ஒரு தெருநாய்... இவனை தூக்கிட்டுப் போய் மதுரை பெரியாஸ்பத்திரியில அட்மிட் பண்றதுக்கு முன்னாடி நாங்க பட்ட பாடு இருக்கே...!''.

""பசி தாங்க மாட்டான் வடிவேலு. அவிச்ச மொச்சை யும் சுண்டலும் வாங்கித் தின்னுவிட்டு, வெத்தலைக் கடை மணி கணக்குல எழுதிக்கப்பானு சொல்லிட்டு நடிப்பதில கவனம் செலுத்துவான்...!''.

""பத்து வயசுல இருந்து 35 வயது வரை அவனோடு இருந்தவங்க நாங்க. எங்களால் அவனை மறக்க முடியவில்லை. வடிவேலு மறந்து விட்டான். அல்லது மறப்பது போல ஒதுங்கிக் கொண்டு விட்டான். கோடிகளுக்கு அதிபதி ஆன பிறகும்... மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் மூணாம் நம்பர் சந்தையும் தோள் கொடுத்த பால்ய கால நண்பர்களையும் நினைத்துக் கொண்டிருக்க முடியுமா?''.

என்.எஸ்.பாலுவின் ராஜேஸ்மணியின், வீரஷாஜ கானின், சக்திவேலின், துரைப்பாண்டியின், நாகூர் கனியின் முகங்களிலும் குரலிலும் ஏதோ ஒரு ஏமாற்றம் இழை யோடியதை நம்மால் உணர முடிந்தது.

இதில் காமெடி கீமெடி ஏதுமில்லேப்பூ...!

No comments:

Post a Comment