Saturday, May 8, 2010

பெண்களுக்கு போதை லேகியம்: கல்கி பகவான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண் பக்தர்கள் புகார்


shockan.blogspot.com
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையம் அருகே பத்துலவல்லத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார்.

இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தவர். இவரது மனைவி புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவானாக மாற்றி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

இந்த 2 பகவான்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக ஆசிரம பக்தர்கள் புகார் கூறினார்கள்.

இந்த நிலையில் கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. அதில் போதை லேகியம் சாப்பிட்ட பெண்கள் மயங்கிவிழும் காட்சிகள் இடம் பெற்றன. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை.

இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பக்தர் சுதாராணி கூறும்போது, நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிறு கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.

இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. போலீசார் கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை கடவுள் என்று எங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துவிட்டனர்.

எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர். கடவுளை எப்படி நோய் தாக்கும்? கடவுளே நோயாளியாக இருந்தால் பக்தர் களின் நோய்களை எப்படி தீர்ப்பார்?

இவ்வாறு அவர் கூறினார்.

கல்கி பகவானுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருப்பதால் ஆசிரம நிர்வாகிகள் பீதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment