Sunday, May 9, 2010
இந்தோனேசியா நிலநடுக்கத்தால் சென்னை மெரீனா கடற்கரையில் மக்கள் வெளியேற்றம்
shockan.blogspot.com
இந்தோனேசியாவின் அசே பகுதியில்கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமிஎச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மக்கள் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் பீதி காணப்படுகிறது.
இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டராக இருந்தது.
30 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்திய நேரப்படி முற்பகல் 11.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அசே மக்கள் பெரும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
கடும் நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தமிழக கடலோரங்களில் பெரும் பீதி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும் பீதி ஏற்பட்டது.
தலைநகர் சென்னையில் மெரீனா கடற்கரைக்கு இன்றுகாலை திரண்டு வந்திருந்த பொதுமக்களிடம் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறுமாறு கூறினர். இதையடுத்து கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
மேலும் நொச்சிக்குப்பத்தில் உள்ள மீனவர் குப்பத்தையும் போலீஸார் உஷார்படுத்தினர். இதையடுத்து அவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரைச்சாலையில் திரண்டனர்.
கடற்கரைச் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த வெளியேற்றம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல நெல்லை, குமரி உள்ளிட்ட கடற் பகுதிகளிலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment