Monday, May 31, 2010

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியின் அலர்ஜி 'நெ.1'



''மறுபடியும் கொடநாடு!'' - டமாரம் அடித்தபடி என்ட்ரி கொடுத்த கழுகார், ''மீண்டும் கொடநாடு பயணத்துக்கு பேக்கிங் ஆரம்பம்! இந்த முறை ஓய்வுக்காகக் கிளம்பவில்லை. போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன. வேலைகள் முடிந்து கார்டன் புதுப் பொலிவு பெறும் வரை அம்மையாருக்கு மலை வாசம் தான்!'' என்று ரிலாக்ஸாக எதிரில் அமர்ந்தார்.

''மராமத்து வேலைகள் கார்டனுக்கா? இப்போது, அது கட்சிக்குத்தானே அவசியம்?'' என்றோம்.

''சரியாகச் சொன்னீர்... கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் புள்ளிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். தூணாக இருந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து தாவிக் கொண்டிருப்பதில் சீனியர்கள் ரொம்ப சூடாகவும் சோகமாகவும் இருக்கிறார்கள். முத்துசாமியும் தி.மு.க. பக்கம் போவதற்கு மூட்டை கட்டியதும்... அ.தி.மு.க-வுக்குள் பொருமல் புயலே வீசுகிறது. முதலில் மீடியாக்கள் மூலம் முத்துசாமி 'நூல்'தான் விட்டார்! தி.மு.க. பக்கம் போவதாக தகவல் பரவினாலாவது 'அம்மா' அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதா என்பது அவர் கணக்கு! ஆனால், அவரைத் தொடர்பு கொண் டதோ 'சின்னம்மா'தான்! அவருடைய பேச்சில் திருப்திப்படாத முத்துசாமி, 'அம்மாவிடம் சில விஷயங்களை மனசுவிட்டுக் கேட்கணும். மற்றபடி இப்போதைக்கு ஏதும் சொல்லும் நிலையில் இல்லை' என்றாராம் இறுக்கமாக.


அடுத்த ஐந்தாவது நிமிடம், ஜெயலலிதாவே முத்துசாமியை அழைத்தார். 'எதுவா இருந்தாலும் தாராளமா என்னிடம் சொல்லுங்க...' என உரிமையுடன் தொலைபேசியில் கேட்டாராம். முத்துசாமி ரொம்பவே திக்குமுக்காட... மீண்டும் அழுத்தம் திருத்தமாக, 'உங்களுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் கண்டிப்பா வழங்கப்படும்!' என்றாராம் அம்மையார். அன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கையோடு, 'யாரையும் இழக்க விரும்பவில்லை' என உருக்கமாகவே ஜெ. பேசியதும் நடந்தது. ஆனால், அதன்பிறகும் முத்துசாமி வேறெதையோ எதிர் பார்க்கிறார் என்பதாக அம்மையாருக்குத் தகவல்வர... 'இந்த பிளாக்மெயிலுக்கு நான் ஆளில்லை' என்று கோபமாகிவிட்டாராம் ஜெ!''

''ஓ! அடுத்த நாள் நடந்த செயற்குழுவில் முத்துசாமியை வறுத்தெடுத்த பின்னணி இதுதானா?''

''அட, உம்ம காதுக்கும் வந்ததா?'' என்று வியந்த கழுகார், ''செயற்குழு அரங்கத்துக்கு வந்ததுமே, 'முத்து சாமி விவகாரம் பத்தி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பாங்க. அதைப்பத்தியும் பேசிடலாமே' என்று ஜெ. ஆரம்பிக்க, செயற்குழு பேச்சாளர்களுக்கு பக்கா சிக்னலும் கொடுக் கப்பட்டதாம். அவ்வளவுதான், 'யார் அந்த முத்துசாமி. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடுபவர்களை சும்மா விடக் கூடாது' என்றெல்லாம் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.''

''பழம் புளித்த கதைதான்!''

''கேளும்! அ.தி.மு.க-வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு படி மேலேயே போனார். 'இந்த மாதிரிக் கட்சியைவிட்டு ஓடிப் போறவங்களை ஓட ஓடத் துரத்தணும். அவங்க ஊருக்கே போய் தாக்கணும். அந்த ஆளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறவே விட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சாத்தான், இனி எவனும் துரோகம் பண்ண நினைக்க மாட்டான்' என்று மது சீற, 'போதும் போதும்' என்று சிரிப்பையும் ரசிப்பையும் அடக்க முடியாமல் ஜெயலலிதாவின் முகம் மலர்ந்ததாம்!''

''அதுசரி!''



''கடைசியாகப் பேசிய ஜெ., 'நம்ம ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கூட்டப்பட்ட செயற்குழுவுக்கு முத்துசாமி வந்ததே இல்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்வார். இப்போதும்கூட 'இனி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது' என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே முத்துசாமி போன்றவர்களை கருணாநிதி இழுக்கிறார். இவர்களும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி எழுச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் வந்தாலும் சரி... அதை ஆளுங்கட்சி இந்த வருடமே கொண்டு வந்தாலும் சரி... பலமாக சந்திப்போம். அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்' என்று அம்மையார் சொல்ல... ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரத் துக்குக் குறைச்சல் இல்லை!''

பன்னீர் திராட்சையை தட்டில் வைத்தோம். பதமாக எடுத்து வாயில் போட்ட கழுகார், ''செயற்குழுவில் என்ன விவாதிக்கிறார்கள் என்று ஆர்வமாக கேட் டறிந்தாராம் முத்துசாமி. விவரம் கிடைத்ததும் கொதித் துப்போய் தன் ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். 'விடுங்கண்ணே, போன வருஷம் உங்க ஒரே பையனுக்கு கல்யாணம் பண்ண அந்தம்மாவைக் கூப்பிட்டீங்க. அவங்க சென்னையில் கல்யாணத்தை வைக்கச் சொன்னாங்க. நீங்களும் வெச்சீங்க. கடைசியில், உங்க செலவுலேயே இருபதுக்கும் மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி கும்பலோடு கோவிந்தாவாக உங்க முகத்தில் கரி பூசினவங்கதானே. இதுக்கெல்லாம் வருத்தப்படுவதா?' என்று சூடு ஆற்றினார்களாம். ஆதர வாளர்களின் கருத்தை கேட்டவர், 'இனி தி.மு.க. தான்' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்!''

''தி.மு.க-வின் ரியாக்ஷன் என்னவோ?''

''அம்மாவின் எரிச்சல் ரியாக்ஷனைத்தானே அவர் களும் எதிர்பார்க்கிறார்கள்! கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவதற்குள், அங்கே இன்னும் சில வெயிட்டான ரெட்டை இலை பார்ட்டிகளை சூரிய குடைக்குள் கொண்டு வந்துவிடுவார்களாம். கொங்கு மண்டலத்தில் எப்பவுமே அ.தி.மு.க-தான் வெயிட் என்பதை உடைத்துக் காட்டுவதற்கென்றே தனி டீம் போட்டுவிட்டார்களாம்!'

''அப்படியா!''

''இரு வாரங்களுக்கு முன்னால் ஈரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட புலவர் இந்திர குமாரி, திடீரென முத்துசாமியை வானளாவப் புகழ்ந்தாராம். 'தி.மு.க. மேடையில் அ.தி.மு.க. புள்ளி யைப் புகழ்வது நியாயமா?' என சிலர் கேட்க...'என் வாய் முகூர்த்தம் உங்களுக்குத் தெரியாதா? நான் தர்மபுரி கூட்டத்தில் செல்வகணபதியைப் புகழ்ந்து பேசினேன். அடுத்த இரு வாரங்களிலேயே அவர் தி.மு.க-வுக்கு வந்தார். மதுரைக் கூட்டத்தில் கடலாடி சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தேன். அடுத்த மாதமே அவரும் வந்துவிட்டார். இப்போ முத்துசாமியைப் புகழ்ந்திருக்கிறேன். பார்த்துகிட்டே இருங்க... நான் யாரைப் புகழ்ந்தாலும் தோட்டத்து அம்மா வுக்கு சுர்ருனு கோபம் வரும். அதுக்கப்புறம், சம்பந்தப்பட்டவங்களோட மோதல் வந்தே தீரும்!' என்றாராம்.''

''புலவர் வாக்குக்கு இப்படியரு பலாபலனா?'' என்று நாம் சொல்லி முடிக்குமுன்பே அறிவாலயத்தின் அடுத்த மூவ்களை அடுக்க ஆரம்பித்தார் கழுகார்.

''இந்தக் கட்சி மாறல் கபடியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளூர ஒரு சிங்கிள் ஜோதிடரின் வாக்கு பற்றி ஆளுங்கட்சி வட்டாரத்து முக்கியஸ்தர்கள் சிலர் நகம் கடிக்க ஆரம்பித் திருக்கிறார்களாம்! செல்வமான ஒரு ஜோசியக் கிளி கிளப்பிய கிலியாம் அது.''

''காளஹஸ்தி கோபுரமே தரைமட்டமாகும் காலம். கொஞ்சம் ஜாதகம், ஜோசியம் பார்ப்பார்கள்தானே...'' என்றோம் பொதுவாக.

''ம்! தலைமைக்கு மிகமிக வேண்டிய ஒரு உறவுப் பெண்மணிதான் ஆர்வக் கோளாறில் ஜாதகக் கட்டங் களைக் காட்டி செல்வ ஜோதிடரிடம் விவாதித்தாராம். அந்த ஜோதிடரோ, எதிர்முகாமின் ஜாதகத்தை எடுத்துப் போட்டு... சில ராசி - நட்சத்திரங்களைப் புரட்டிப் போட்டாராம். 1991 மற்றும் 2001 என்று 1-ல் முடிகிற வருடங்கள் போயஸ் தோட்டத்துக்கு சாதகமாக இருந்ததைத் தொட்டுக் காட்டினாராம். '1996-ல் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு தி.மு.க. தராத நல்லாட்சியா? இப்போது போலவே அப்போதும் எத்தனையோ நலத்திட்டப் பணிகளைத் தரவில்லையா? அதையும் தாண்டி 2001-ல் மறுபடி அம்மையார் ஜெயித்தபோது, அந்தக் கட்சிக்காரர்களில் பலரே தங்கள் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவில்லையா? அப்படித்தான், 2011-ல் தேர்தல் நடத்தினாலும் முடிவுகள் அமையும்' என்று சில கூட்டல் கழித்தல்களை போட்டாராம் ஜோதிடர்!''

''சரியாப் போச்சு!''

''விட்டுத் தள்ளுகிற விஷயமா ஆட்சிப் பொறுப்பு? ஜோதிடம் கேட்ட பெண்மணி இதை நேரடியாக பெரியவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாலும்... உடன்பிறப்புகள் சிலரிடம் கவலையாக விவாதித்தாராம். உலகத் தமிழ் மாநாடு முடிந்தபின், 2010 இறுதிக்குள் தேர்தல் என்று எப்படியாவது மேலிடத்தை இறுதி செய்ய வைக்கும் வேலைகள் நடக்கிறதாம். தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவின் பேச்சும் போக்கும், சீக்கிரமே தேர்தல் நடத்த சாதகமாக இருக்குமா என்ற விவாதமும் சூடாகவே நடக்கிறதாம் ஆளுங்கட்சி குடும்ப வட்டாரங்களில்!''

''ஹையோ... ஹையோ!'' என்றோம் குறுஞ்சிரிப்போடு!

''ராஜ்யசபா ஸீட் எப்படியும் வைகோவுக்கு உண்டு என்று பேசினோம்... இப்போது ரெண்டு ஸீட்டும் தங்களுக்கே என்று அம்மையார் சொல்லியிருப்பதைப் பார்த்தீரா?'' என்றார் கழுகார்.

''இது உம்மிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி!'' என்று முறைத்தோம்.

''கடைசி நேரம் வரை வைகோவுக்கு வழங்கவே ஜெயலலிதா தயாராக இருந்தாராம். வைகோவின் அரசியல் வளர்ச்சியில் அக்கறைகொண்ட இளம் வாரிசு ஒருவரும், போயஸ§க்கு வேண்டிய வட்டாரங் கள் மூலம் ஸீட்டை உறுதிப்படுத்தினாராம். 'அப்படியிருக்க எப்படி இப்படி?' என்று எனக்கும் குழப்பம்தான். ம.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தால், கடைசி நிமிடத்தில் எங்கள் பொதுச் செயலாளரின் முடிவு மாறியிருக்கிறது. கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளின்படி, மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். அதோடு, ராஜ்யசபா ஸீட்டை விட்டுக் கொடுப்பதன் மூலம் வேறு சில வாய்ப்புகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம்' என்கிறார்கள். எப்படியோ, 'நான் ராஜ்ய சபாவுக்கு முயன்றது மீடியாக்களின் கற்பனை' என்று சொல்லி, இப்போதைய விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வைகோ!''

''சரிதான்!''

''இப்போதிருக்கும் மூன்று எம்.பி-க்களோடு ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வுக்கு இன்னும் இரு எம்.பி-க்களும் கிடைத்தால் அந்தக் கட்சிக்கு முன் வரிசையில் அங்கே இடம் கிடைக்குமாம். மத்திய அரசு அமைக்கும் குழுக்களில், விவாதங்களில் இடம்பெறத் தகுதியும் கிடைக்குமாம். இதையெல்லாம் மனதில்கொண்டு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்தில் கூப்பிட்டு சரிப்படுத்திவிட்டார் அம்மையார் என்றும் சொல்கிறார்கள்!''

சற்று அமைதி. பிறகு,

''காலாவதி மருந்து மாத்திரை விவகாரத்தில் குண்டர் சட்டமெல்லாம் பாய்ச்சி ஜோராகத்தான் முன்னேறுகிறது போலீஸ். ஆனால், மத்தியில் செல்வாக்கான பதவியில் உள்ள தமிழக கதர் புள்ளி ஒருவர் விவகாரத்தை ஆறப் போடச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாராம். அதையும் தாண்டி போலீஸ் காட்டிய வேகத்தில் அசந்துபோனவர், 'வழக்கை சி.பி.ஐ-யின் கையில் ஒப்படைத்துவிட்டு விலகுங்கள்' என தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் பரிவான வேண்டுதல் வைத்தாராம்.''

''என்ன ஆகும் கடைசியில்?''

''இந்த மத்திய புள்ளிக்கும், தி.மு.க. தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை ஊன்றிக் கவனித்த அ.தி.மு.க. தலைகள் சிலர், அதை அம்மையாரின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். அடுத்த நாளே, 'காலாவதி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என அம்மையாரிடம் இருந்து அதிரடி அறிக்கை வந்தது. இதில் மத்திய புள்ளியின் மனசு ரொம்பவே குளிர்ந்துபோனதாம். என்னவிதமான மூவ் இது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களே சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்களாம்! இது ஒருபுற மிருக்க... கைதான கேதன் தேசாய் விவகாரத்தில் ஒரு தமிழக கைத்தடி சொல்லும் தகவல்களைக் கேட்டு சி.பி.ஐ. ஆடிப் போயிருக்கிறதாம். அங்கே தொட்டு... இங்கே தொட்டு... டெல்லியில் பவரில் இருந்த - இருக்கும் நான்கு முக்கியப் பிரமுகர்களைப் பற்றி வசமான கோப்புகளை சீக்கிரமே சி.பி.ஐ. கைப்பற்றி விடும் என்கிறார்கள்!''

''இது என்ன ஆகும்?'' என்றோம் மறுபடி.

''அரசியலில் பலசமயம் உண்மைகள் பேரத்துக்கே பயன்படும்!'' என்று புதிர் தத்துவம் சொன்னகழுகார்,

''கடந்த 26-ம் தேதி சேரன்மகாதேவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வேல்துரையின் மகனுக்குத் திருமணம்... அதில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் 25-ம் தேதி இரவு மதுரை விமான நிலையத் துக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். மதுரையில் அவரை வரவேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தாற்போல ஆப்சென்ட். வேலுசாமி, பொன்.முத்துராமலிங்கம் மட்டும் வந்திருந் தார்கள். இந்த 'பாய்காட்'டை ஸ்டாலின் முன்கூட்டி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ... 'எதுக்கு நீங்க மட்டும் மெனக்கட்டு வந்தீங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது!' என்று சிரித்தாராம். 'இல்லைண்ணே... எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க' என்று அவர்கள் சமாளிக்க, 'சரி... நீங்க கிளம்புங்க' என்றபடியே காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம் ஸ்டாலின். நெல்லையில் ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தடபுடல்வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் அழகிரி ஆதரவாளரான மாலை ராஜா க்ரூப் ஆப்சென்ட்!''

''யப்பா... இவங்க கதையை புரிஞ்சுக்கவே முடியாது!''

''20 நாள் பயணமாக அமெரிக்கா போன அழகிரியிடம் போனிலும் நேரிலுமாக சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். முதல்வரின் மகள் செல்வி, அமெரிக்காவுக்குப் போய் துரை தயாநிதியிடமும் மணிக்கணக்கில் பேசினாராம். 'தயா' சேனல் முயற்சிகளை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அத்தையின் மனம் கோணக் கூடாது என்பதற்காக தயாவும் அப்போதைக்கு தலையாட்டிவைத்தாராம். இதற்கிடையில், தயாவின் பிசினஸ் பார்ட்னரான 'ஜாக்' கம்யூனிகேஷன்ஸ் கமலேஷிடமும் சிலர் 'பன்முகம்' காட்டிப் பேசினார்களாம். முயற்சிகள் தொடர்கின்றன!''

அச்சுக்குப் போகவிருந்த ஜூ.வி-யின் பக்கங்களை புரட்டிப் பார்த்த கழுகாருக்கு திருமாவளவனின் பேட்டி கண்ணில் பட்டது. ''எம்.பி. ஸீட் பெறுவதில் இதுவரை வெளிப்படையாகப் பேசாத மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் தன் மனக்கிடக்கையைக் கொட்டிவிட்டாராம். 'அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரைப்போன்ற இளைஞர்கள் டெல்லிக்குப் போனால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். மகன் என்பதற்காகவோ கட்சிப் பாசத்திலோ நான் இதைச் சொல்லவில்லை. திறமையான இளைஞர் என்பதற்காகத்தான் சொல்கிறேன். ஆனால், அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருக்கிறார்கள்' எனப் பேசியவர் அவர்கள் யார் என்பதையும் சொல்லத் துணிந்தாராம். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் ஏதோ சொல்லி மருத்துவரின் பேச்சைத் திசை திருப்பினார்களாம்'' என்றபடியே சிறகுகளைச் சிலுப்பி டேக்_ஆஃப் ஆனார் கழுகார்.

குஷ்புக்குப் போதையூட்டிய நடிகை!


shockan.blogspot.com

எஸ்.ஏ. சந்திரசேகரன் ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக "வெளுத்து கட்டு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் சேனாதிபதி மகன் இயக்குகிறார்.

""என் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில், இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் 15 சம்பவங்களின் தொகுப்புதான் "வெளுத்து கட்டு' கதை.

கலாம் சொல்வதைப்போல கனவு காணுங்கள். அதை நிறைவேற்ற திட்டமிடுங் கள். திட்டத்தை நிறைவேற்ற கடுமையாகப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

நான் இளமையில் பண்ணாத பொறுக் கித்தனமில்லை. பண்ணாத சேட்டை இல்லை! அப்படி இருந்தபோதிலும் வாழ்க்கையில் பெரிய ஆளாகிக் காட்டணும் என்கிற வெறி இருந்தது. அது ஒரு நாள் தங்கச்சிமடத்தி லிருந்து மதுரைக்குத் தள்ளிவிட்டது. சென்னைக்குக் கிளம்ப திட்டமிட்டேன். கையில் காசில்லை! கனவுக்கு காசு தடையா? இல்லை; டிக்கெட் எடுக்காமலே ரயிலேறிவிட்டேன். திருச்சியில் டி.டி. இறக்கி விட்டு விட்டார். அடுத்தொரு ரயிலில் ஏறினேன். டி.டி. விழுப்புரத்தில் இறக்கி விட்டார். அடுத்த ரயிலில் ஏறினேன். செங்கல் பட்டில் பிடித்து இறக்கி விட்டார்கள். அங்கி ருந்து நடந்தே சென்னைக்கு வந்து போராடி, பட்டினி கிடந்து இயக்குநரானேன். இன்றைக்கு 68 படங்களை இயக்கியவ னாக- 26 படங்களைத் தயாரித்திருக்கிற வனாக உங்கள்முன் நிற்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து சோர்ந்து போகிறார்கள். +2 தேர்வில் தோற்றால்கூட தற்கொலை செய்து கொள்கிறார்க்ள. கூடாது! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அந்த நம்பிக்கைதான் "வெளுத்து கட்டு' ஆதார சுருதி.

எனக்கு ஓடுகிற குதிரைமேல் பந்தயம் கட்டி ஜெயிப்பது பிடிக்காது. புதுசா ஒரு குதிரையைத் தயார் செய்து சவாரி செய்யத்தான் பிடிக்கும். விஜயகாந்த், ரஹ்மான், சிம்ரன், விஜய் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ கதிர் பலமுறை வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். ரொம்ப உயரமாக இருக் கிறார் என்று அவரை ஒதுக்கி விட்டு, அறிமுகமான ஒரு ஹீரோவை வைத்து ரெண்டு நாள் ஷூட்டிங் கும் போயிட்டேன். அப்பவும் கதிர் வந்தார். அவரது விடாமுயற்சி யைப் பார்த்து அவரை ஹீரோவாக்கினேன்.

இசையமைப்பாளர் பரணியை "பெரியண்ணா' படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். 24 படம் பண்ணிட்டார். ஆனாலும் அவருக்கு ஒரு தேக்கம். மீண்டும் வரும் திறமை உள்ளவர் பரணி என்று அவரை இசையமைப் பாளராக்கிட்டேன். படத்தின் நாயகி அருந்ததி தமிழ்ப் பொண்ணு. ஆனாலும் சரியா தமிழ் பேச வராது. அதனால கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கச் சொல்லி டப்பிங் வரை பேச வெச்சேன்.'' இப்படி தன் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்கள் திரையில் பதிவாகிற மகிழ்ச்சியில் நீண்ட பிரசங்கமே செய்தார். (சுவாரஸ்யமாதான் இருந்தது!).

அருந்ததி அழகு எப்படி?

""ராதாவின் அழகும் சரிதாவின் நடிப்பும் கலந்த சாயலில் அருந்ததி எனக்குப் போதையூட்டினார். இவர் மாதிரி நிறைய தமிழ்ப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்று நாயகியைப் பற்றி சொன்னார் குஷ்பு.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி! ஆனா அருந்ததி தமிழ்ப் பொண்ணு இல்லை என்பது அவர் பேசும்போது வெளிச்சமாகி விட்டது!

ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வாழ்ந்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் குஷ்பு மாதிரி தமிழச்சிதான் அருந்ததி!

எப்படியோ... நடிப்புல வெளுத்துக்கட்டினா ஓ.கே.!

செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார் அபிராமி ராமநாதன்





ஓட்டல்களில்தான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல், த்ரீ ஸ்டார் ஓட்டல் என்று உண்டு. அபிராமி ராமநாதன் திரையரங்குகளிலும் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் ஃபைவ் ஸ்டார் தியேட்டரை அபிராமி மால் தியேட்டரில் திறந்தார். அதை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போது செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார்.

இந்தத் தியேட்டரில் படுத்துக் கொண்டு படம் பார்ப்பது போக, இருக்கையில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உடம்பை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. அது மட்டுமா? இனி நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்குப் போக ஆட்டோக்காரர்களோடு பேரம் பேசி மல்லுக்கட்ட வேண்டாம். அபிராமி தியேட்ட ருக்குப் போன் பண்ணினால் போதும். கார் வந்து உங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும். படம் முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிடுவார்கள்.

இந்த நவீன வசதி கொண்ட திரை யரங்கை புரொஜக்டரை இயக்கித் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் தனது பழைய நினைவுகளை அசை போட்டு, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாராட்டினார்.

மணலிலே உட்கார்ந்து படம் பார்த்த காலம்... பேசும் படம் வராத காலத்தில் ஊமைப் படம் ஓடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒருவர் காட்சிக்கேற்ப வசனங்களைப் பேசிய காலம்... இப்படி படிப்படியாக திரைத்துறையில் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர், ""ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க ஒப்புக் கொண்டாரென்றால், பாட்டை எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் எங்கோ ஒரு நாட்டில் இருப்பார். அங்கி ருந்து ட்யூன் போடுவார். அதற்கு வீணை ஒலிப்பதிவு சுவிட்சர்லாந்திலிருந்து வரும். குரல் பதிவு லண்டனிலிருந்து வரும். அதை நாம் சென்னையிலே இணைப்போம். இந்த வளர்ச்சியை எல்லாம் பார்ப்பது இந்த வயது வரை இருப்பதால்தானே!'' என்று கலைஞர் விஞ்ஞானம், சமூகம், தனது வயது எல்லாம் இணைத்துப் பேசி நெகிழ்ந்தார்.

""திரையரங்கு ஒன்றுதான் பொழுது போக்கு என்றிருந்த காலமுண்டு. இப்போது அப்படி அல்ல! பொழுதுபோக்க பல வழிகள் வந்துவிட்டன. அதனால் ரசிகர்களை வரவழைக்க வேண்டு மானால் தியேட்டர் வசதியாக இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல் படம் பாதி; தியேட்டர் பாதி என்று ஆகி விட்டது'' என்றார் அபிராமி ராமநாதன்.

""சுவிட்சர்லாந்தை சென்னைக்குக் கொண்டு வந்ததுபோல் மருட்சியாக இருக்கிறது'' என்று பிரமித்தார் பாலசந்தர்.

வழக்கம்போல் வைரமுத்து, ""அபிராமி ராமநாதனின் பேத்தி இங்கே கடவுள் வாழ்த்து பாடினார். அப்போது 60 சதவிகிதம் பேர்தான் எழுந்து நின்றார் கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது 100 சதவிகிதம் பேர் எழுந்து நின்றார்கள். கடவுளைவிட தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்தான்'' என்று முதல்வரை தமிழின் பேரால் குளிர் வித்தார்.

அபிராமி ராமநாதனின் புதுமை ஆர்வம் பாராட்டத்தக்கதுதானே!

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!


shockan.blogspot.com

மூன்றாண்டுகள் "கஜினி' இந்தி ரீ-மேக் இயக்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டி திரும்பி இருக்கும் முருகதாஸ், சூர்யாவுடன் "ஏழாவது அறிவு' படத்துக்காகக் கூட்டணி சேர்ந்திருக்கிறார். முதன்முதலாக கமலின் மகள் ஸ்ருதி சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுக மாகிறார். இந்தப் படத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

கமர்ஷியல் ஆக்ஷன், வித்தியாசமான கேரக்டர் என்று இரண்டு களத்திலும் பேலன்ஸ் பண்ணி ஜெயித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்திக்கும் தனது நடிப்பு எல்லையே விரிவுபடுத்தி உள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள "ரத்த சரித்திரம்' படத்தைப் பார்த்த பாலிவுட் பார்ட்டிகள் சூர்யாவை "புக்' பண்ண அலைமோதி இருக்கிறார்கள். ஆனால் சூர்யா, ஸ்ரீதேவியின் கணவர்- தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழில் தனது கமிட்மெண்ட்கள் முடிந்த பின்னரே கால்ஷீட் என்று ஸ்ரீதேவியிடம் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

விஜய் மார்க்கெட் டவுன், விக்ரமின் காலதாமதம் இரண்டும் சூர்யாவுக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யா காட்டுல அடை மழை!

இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!


shockan.blogspot.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர் செய்யும் உரிமையை சஹாரா பரிவார் பெற்றுள்ளது. இதில் கடைசி வரை மோதிய ஏர்டெல் போட்டியிலிருந்து வெளியேறியது.

ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் 31, 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யும். இதன்படி ஒரு போட்டிக்கு ரூ 3.3 கோடி செலுத்தும் சஹாரா.

இந்திய அணிக்கு ஸ்பான்ஸர் செய்வதற்காக சஹாரா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் தகுதிச் சான்றிதழ், பாதுகாப்பு வைப்புத் தொகை போன்றவற்றை சனிக்கிழமை தாக்கல் செய்தன.
Read: In English
இவற்றைப் பரிசீலித்த பிசிசிஐ பாதுகாப்பு கமிட்டி, இறுதியாக சஹாராவை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பார்தி ஏர்டெல் இதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் லோகோவை வீரர்கள் ஐசிசி போட்டிககளின் போது அணிந்திருக்க முடியாது.

காரணம் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ் நிறுவனம் ஐசிசி ஸ்பான்ஸராக உள்ளே நுழைந்துள்ளது.

"காமிராமேன்கள் இயக்குநராகக் கூடாது!''


shockan.blogspot.com

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் "ரெட்டசுழி' படத்தைத் தொடர்ந்து வெளியிடத் தயாராக இருக்கும் படம்- "ஆனந்தபுரத்து வீடு'.

இந்தப் படத்தை கதை எழுதி இயக்கி இருப்பவர் நாகா.

திரைக்கதை- வசனம் எழுத நாகா நாடி இருப்பது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், சரத் ஹரிதாசன்.

நாகா பெரிய திரைக்கு வருவதற்கு முன் "மர்மதேசம்', "விடாது கருப்பு', "சிதம்பர ரகசியம்' உள்பட பல சின்னத்திரை தொடர்களை பாலசந்தர் நிறுவனத்துக்காக இயக்கி யவர். அந்தக் கதைகளெல் லாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனால் எழுதப் பட்டவை. அதனால் "ஆனந்த புரத்து வீடு' படத்தின் வசனத்தை வார்ப்பதில் இந்திரா சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

கதை த்ரில் லரா?

""ஆமாம்; த்ரில் லர்தான். ஆனால் சஸ்பென்ஸ் இல்லாத த்ரில்லர். 90 சதவிகித படத்தை ஒரு வீட்டுக்குள்ளேயே முடித்து விட்டோம். ஏன்னா அந்த வீடும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம்'' என்கிறார் இயக்குநர் நாகா.

இது பேய்க் கதையா?

ஆமாம்; நல்ல பேய்களின் கதை.''

தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கர் படம் பார்த்தாரா?

""பார்த்தார்; பாராட்டினார். இன்னும் டெக்னிகல் பெர்பெக் ஷன் முடிந்தபின் யார் பார்த் தாலும் பாராட்டுவார்கள்'' என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் நாகா.

இனி பெரிய திரைதானா? சின்னத் திரைக்கு டாட்டாவா?

""இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லா விஷயங்களிலும் டீப்பான ஆய்வு மனப்பான்மை வந்துவிட்டது. அப்படி செய்த ஆய்வில், மணிமேகலை காவியத் தில் வரும் "அட்சய பாத்திரம்' என்கிற சிந்தனை கற்பனையா- இல்லையா என்பதை வைத்து சின் னத் திரைக்கு "அமுதசுரபி' என்ற மெகா தொடர் இயக்குகிறேன்.''

இந்தப் படத்தில் வியக்க வைத்த விஷயம்?

""சிறுவன் ஆர்யா. விசாகப்பட் டினத்திலிருக்கும் இந்தப் பையன் இந்தப் படத்தின் சூப்பர்மேன். பட ரிலீஸுக்குப்பின் பெரிய பெயரெ டுப்பான். அவ்வளவு ப்ரில்லியண்ட்!'' என்று குழந்தையைப் போல் குதூகலித்துச் சொல்கிறார் நாகா.

அடிப்படையில் காமிரா மேனான நாகா, ""படம் இயக்குவது என்றால் காமிராவைத் தொடக் கூடாது. கேமராவிற்குப் பின்னால் வந்துவிட்டால் ஆர்டிஸ்டுகளின் உணர்ச்சிகளைக் கவனிக்க முடியாது. அது படத்தைக் கெடுத்து விடும்'' என்று புது தத்துவம் சொல்கிறார்.

ஆனால் பலர் லைட்பாய் வேலையைத் தவிர எல்லா வேலை களையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவஸ்தைப் படுகிறார்கள்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்


shockan.blogspot.com

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவரது பாதுகாவலர் காயமடைந்தார்.

பெங்களூர் புறநகர் பகுதியில் கனகபுரா சாலையில் தலகட்டபுரா என்ற இடத்தில் ரவிசங்கரின் வாழும் கலை ஆசிரமம் உள்ளது. நேற்று மாலை ஆசிரமத்தில் சத்சங் சொற்பொழிவு நடந்தது.

ரவிசங்கர் உரையாற்றிய இந்தக் கூட்டத்தில் சுமார் 8,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாலை 6.30 மணி அளவில் ரவிசங்கர் அங்கிருந்து, காரில் புறப்பட்டார். காரை சுற்றி ஏராளமான பக்தர்கள் கூட்டமாக நின்றனர்.

அப்போது, பக்தர்கள் கூட்டத்தில் இருந்த மர்ம மனிதன் ஒருவன் திடீரென்று ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினான். அதற்குள் கார் நகர ஆரம்பித்துவிட்டதால் ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார்.

இந்த குண்டு அவரது பாதுகாவலரான வினய் என்பவரின் தொடையில் பாய்ந்தது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ரவிசங்கரை சுட முயன்றது யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும், ஆசிரமத்தில் நிலவிய 'பசிட்டிவ் எனர்ஜி' காரணமாகத் தான், துப்பாக்கியால் சுட்டும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை, பக்தர்கள் அமைதியாக இருக்குமாறும் ரவிசங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆசிரம செய்தித் தொடர்பாளர் சாரு கூறுகையில், சத்சங் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரவிசங்கர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது அப்போதுதான் அந்த மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தால் ரவிசங்கர் பதற்றமடையவில்லை. இதையடுத்தும் வழக்கம் போல அவர் சீடர்களிடையே உரையாற்றினார் என்றார்.

ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு-கண்காணிப்பு கேமரா:

இந் நிலையில் ரவிசங்கரின் ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் ரவிசங்கருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Read: In English
துப்பாக்சி சூடு சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. சுடப்பட்ட தோட்டாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஆசிரமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களை சோதனை செய்து அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sunday, May 30, 2010

வெல்லப்போவது யார்?


பிரேசில் சிறைக் கைதிகள் டி.வி. கேட்டு ரகளை செய்கிறார்கள். 'இந்த வாட்டி வாங்கலைன்னா உங்களுக்கு இருக்குடி' என்று இங்கிலாந்து மக்கள் பல்லைக் கடிக்கிறார்கள். பல நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் ஃப்ளைட் டிக்கெட் எடுத்துவிட்டார்கள். ஆம்! உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான, உலகக் கோப்பை கால்பந்து நிகழும் மங்களகரமான ஜூன் மாதம் சுபயோக சுபதினமான 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இனிதே துவங்க இருக்கிறது.


கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலகக் கோப்பை போட்டி நடப்பது இதுவே முதல் முறை.

உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெறுவதே பெரிய சாதனை. உலகக் கால்பந்து சம்மேளனத்தில் (சுருக்கமாக ஃபிஃபா) 208 நாடுகள் உறுப்பினர்கள். பல தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி கடைசியாக 31 நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும். போட்டியை நடத்தும் நாடு ஜம்மென்று ஷார்ட் கட்டில் வந்துவி(ளையா)டலாம். ஆக மொத்தம் 32. இந்த முறை உலகக் கோப்பையைக் கைப்பற்ற பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் முட்டி மோதுகின்றன. யாருக்கு வாய்ப்பு அதிகம்?

பிரேசிலின் ஸ்டார் பிளேயர்களாக இருந்த ரொனால்டோ, ரொனால்டினோ இருவருமே இப்போது பிரேசில் அணியில் இல்லை. கால்பந்தைப் பொறுத்தவரை 30 வயதைத் தாண்டினாலே, வயசாயிருச்சுப்பா என்று ஒதுக்கிவிடுவார்கள். ரொனால்டோவுக்கு வயது 33. ரொனால்டினோ, இப்போது நம்ம ஊர் யுவராஜ் சிங் மாதிரி 'பார்ட்டி பாஸ்' ஆகிவிட்டார். 'பாரில் சார் விழுந்துகிடக்கிறார்' என்று தினமும் செய்தி வர, பிரேசிலின் கோச் துங்கா, அவருக்குக் கல்தா கொடுத்துவிட்டார். இத்தனை பிரச்னைகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு இன்னும் பிரேசிலின் மீது நம்பிக்கை குறையவில்லை. நட்சத்திர வீரர்களான காகா, ரோபின்கோவின் படுவேகமான ஆட்டம், டீம் ஒருங்கிணைப்பு என பிரேசில் அணியின் பாஸிட்டிவ் விஷயங்கள் அதிகம்.

இங்கிலாந்து அணிக்கு இப்போதைய பிரச்னையே, பெண்கள்தான். இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் ஜான் டெர்ரி. அணியின் இன்னொரு வீரரான வேயர்ன் பிரிட்ஜின் காதலி வென்னசாவுக்கும், ஜான் டெர்ரிக்கும் ரகசிய சிநேகிதம். இதனால், வென்னசா கர்ப்பம் அடைய, ஜான் டெர்ரி 20 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்துக் கருவைக் கலைத்துவிட்டார். விஷயம் வெளியே கசிய, நொந்துபோன வேயர்ன் பிரிட்ஜ், 'உலகக் கோப்பை அணிக்கு என்னைத் தேர்வு செய்ய வேண்டாம்' என்று கால்பந்தையும் காதலியையும் கைகழுவிவிட்டார். ஒன்றைப் பத்தாக்குவதுதானே வதந்தி. ஜான் டெர்ரிக்கு இப்படிப் பல பெண்களுடன் தொடர்பு என்று கதை. விளைவு... அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.



'வீரர்கள், தங்களின் மனைவியையோ, காதலியையோ, தென் ஆப்பிரிக்காவுக்குக் கூட்டிக் வரக் கூடாது' என்று உத்தரவு போட்டு இருக்கிறார்கள். அணியின் நட்சத் திர வீரரான டேவிட் பெக்காமுக்கு 35 வயது ஆகிவிட்டாலும், ஃபிட்னெஸ் சரியாக இருந்ததால், அணியில் இருந்தார். இதுவரை மூன்று உலகக்கோப்பை போட்டி களில் ஆடியிருக்கிறார். இங்கி லாந்து கால்பந்து வீரர்கள் யாரும் நான்கு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியது இல்லை. அந்தச் சாதனையை பெக்காம் செய்வார் என்று காத்திருக்கும்போது, சோதனை. காலில் அடிபட்டு, ஆபரேஷன் வரை போனதால் அணியில் இடம் இல்லை. 'இங்கிலாந்து அணியின் இன்ஜின்' வைனி ரூனியும், காதல் விவகாரங்களை மறந்துவிட்டு ஜான் டெர்ரியும் ஒழுங்காக ஆடும்பட்சத்தில், அணி வெற்றிக் கொடி கட்டும்.

கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் இன்னொரு நாடு... ஸ்பெயின்! சமீபமாக ஸ்பெயின் அணி பெற்று வரும் தொடர் வெற்றிகள், அந்த அணியைப் பந்தயப் பட்டியலில் சேர்த்திருக்கிறது. கிரிக்கெட்டில் இந்திய அணி மாதிரி, கால்பந்தில் ஸ்பெயின். எந்த நேரம் எப்படி ஆடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஸ்பெயின் அணியின் பெர்னாண்டோ டாரஸ் எப்போதும் எதிரணிக்கு பாஸ்பரஸ். கால்பந்தில் எதிரணியின் நல்ல வீரர்களைத் தடுக்க, சமாளிக்க, தங்கள் அணியில் ஒருவரை நியமிப்பார்கள். ஆனால், டாரஸ§க்கு இரண்டு, மூன்று வீரர்களை நியமிக்க வேண்டும். தன் காலுக்குப் பந்து வந்த உடனேயே, எங்கே இருந்தாலும் கோல் போஸ்ட்டைப் பார்த்து அடித்துவிடுவார். நிகழ்தகவின்படி நாலு முறைக்கு ஒரு கோல் விழுந்தாலும் கதை கந்தலாகிவிடுமே. அந்தப் பயம் மற்ற அணிகளுக்கு உண்டு. அவரை முடக்கிவிட்டாலே ஸ்பெயினுக்கு பெயின் வந்துவிடும்.

கால்பந்து விளையாட்டின் கறுப்பு ஆடு... நெதர்லாந்து அணி. அர்ஜான் ராபின், ரூபின் வான்பஸி என நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். எல்லா வீரர்களுமே நன்றாக விளையாடுவது நெதர்லாந்தின் ப்ளஸ். கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி மாதிரி, கால்பந்தில் நெதர்லாந்தைச் சொல்வார்கள். காரணம், அதன் துரதிர்ஷ்டம். இரண்டு முறை உலகக் கோப்பை ஃபைனல் வந்தும், நெதர்லாந்தால் கோப்பையைத் தட்ட முடியவில்லை. அதிர்ஷ்ட தேவதை கடைக்கண் பார்வை பார்த்தால், நெதர்லாந்து மலையேற வாய்ப்பு உண்டு.

அர்ஜென்டினாவின் வெற்றிக் கனவு அதன் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியிடம் இருக்கிறது. 22 வயது மெஸ்ஸியின் ஸ்டைல், அப்படியே மரடோனா. அடுத்த மரடோனா என்று புகழ்வதை, அணியின் கோச் மரடோனாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தருவார்கள் என்று நாடே காத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக 188 போட்டிகளில் விளையாடி 88 கோல்கள் அடித்திருக்கிறார். அர்ஜென்டினாவுக்காக, 44 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 13 கோல்களை அடித்திருக்கிறார். பார்சிலோனாவில் ஜொலிக்கும் மெஸ்ஸி, தாய்நாட்டுக்காக விளையாடும்போது சொதப்பிவிடுகிறார் என்பது குற்றச்சாட்டு. இந்த வருடம் சிறந்த கால்பந்து வீரருக்கான 'ஃபிஃபா' விருதினை மெஸ்ஸி வாங்கியிருப்பதால், நம்பிக் காத்திருக்கிறார்கள் அர்ஜென்டினா மக்கள்.

அணியைத் தனி ஆளாக வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வீரர்கள் அத்திப் பூத்ததுபோல்தான் கால்பந்தில் உருவாவார்கள். பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்து, அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டன். சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை இரண்டு முறை தட்டி வந்தவர். உலகின் விலை உயர்ந்த கால்பந்து வீரர். சமீபத்தில், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் 93 மில்லியன் பவுண்டுக்கு இவரை ஒப்பந்தம் செய்தது. போர்ச்சுக்கல் அணி இது வரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த வருடம் வெல்லப்போகும் அணிகளின் பட்டியலிலும் இல்லை. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மந்திரக் கால்கள் அடிக்கும் தந்திரக் கோல்களால் போர்ச்சுக்கலின் எதிர்காலம் எழுதப்படலாம்!

ராஜபக்ஷே டைரக்ஷனில் 'டூப்ளிகேட் புலி'!


தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய 'ராம நாமம்' போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். 'கிளம்பிட்டார்ல எங்க ஆளு' என்று ஒரு பிரிவும், 'இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க' என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்!

''நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது


. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாக நான் தப்பித்து வருகிறேன். எங்கள் படையணியினரின் வீரமும், மன உறுதியும், தாய் நாட்டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்கவைக்கிறது. சிங்கள ராணுவத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வருகிறோம்!''- என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தளபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வரும் கேணல் ராம் என்பவர் அறிவித்திருக்கிறார். இவரைப் பார்த்து யாருமே அதிர்ச்சி அடையவில்லை. ஆனால், 'இவருக்குப் பின்னால் யார்?' என்ற சந்தேகம் மட்டுமே மிச்சமாகி இருக்கிறது.

ராஜபக்ஷே டைரக்ஷனில் தயாராகும், 'டூப்ளிகேட் புலி' என்ற துரோக சினிமாவின் தொடக்கமாகவே, இதை விவரம் அறிந்தவர்கள் உணர்வார்கள். 2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு தடியெடுத்தவர் எல்லாம் தமிழ்ப் புலித் தலைவராகத் தங்களைப் பிரகனடப்படுத்திக்கொண்டனர். 'பிரபாகரன் என்னைத்தான் அடுத்த தலைவராக அறிவித்துப் போனார்' என்று சொன்ன கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன், 'கைது' செய்யப்பட்டு தனி பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளார். 'மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு தங்களைப் புதிய போராளிகளாக, தனி நாட்டுக்காகப் போராடுவதாக அறிவித்தது. 'ஆதரவாளர்களைக் கண்டுபிடிக்க செய்யப்பட்ட செட்டப்' என்று அந்தப் பேட்டி அம்பலப்படுத்தப்பட்டது. புலிகளின் புதிய ஊடகத் துறை - அதிகாரபூர்வ இணையதளம் என்ற பெயரில் அடுத்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியது. அது யார் என்று விசாரித்தால், 21 ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கத்தைவிட்டு வெளியேறி, உளவு அமைப்புகளின் இன்ஃபார்மராக மாறிவிட்ட குண்டப்பா, அதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது... கேணல் ராம்!

கிழக்கு மாகாணத்தை ராணுவம் கைப்பற்றிய பிறகு, அந்த மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்புத் தளபதியையும் தாக்குதல் தளபதியையும் 2008-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரன் நியமித்தார். மட்டக்களப்புக்கு கேணல் கீர்த்தி, திரிகோணமலைக்கு கேணல் வசந்தன், அம்பாறைக்கு கேணல் ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். பிரபாகரனுக்குக் கீழ் அணி வகுத்த அத்தனை தளபதிகளும், பிரிகேடியர் பால்ராஜ் மறைவைத் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, கீர்த்தி, வசந்தன் இருவரை மட்டுமே வரச் சொல்லி இருந்தார் பிரபாகரன். ராமுவுக்கு அழைப்பு இல்லை.

கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு, கிழக்கு மாகாணத்தில் தனித்துவிடப்பட்டார் ராம். ''கிழக்கு மாகாணத்தில் எஞ்சியிருக்கும் புலிகள், அரசாங்கத்திடம் சரணடைய என்னுடைய உதவியை நாடி வருகிறார்கள். ராம் என்று அறியப்பட்ட தலைவர், கடந்த சில தினங்களாக என்னைத் தொடர்புகொண்டு வருகிறார்'' என்று கருணா அளித்த பேட்டி ராமை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. கருணாவின் முயற்சியால், ராம் சரணடைந்ததாகத் தகவல் கள் வெளியாகின.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து ராம் தப்பிவிட்டதாக அடுத்த தகவல் வந்தது. ராணுவத்தின் வசம் இருந்து எவரும் எளிதில் தப்பிவிட முடியாது. அதுவும் கேணல் பொறுப்பில் இருந்தவரை, 'நாலாவது மாடி'யில் வைத்து நையப்புடைத்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ராம் மட்டும் 'தப்பினார்'.

தலைமறைவான ராம், அடுத்த சில நாட்களில் தன்னைப் புதிய தளபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். சந்தேகம் அதிகமானது. மாவீரர் தினத்தன்று உரையும் நிகழ்த்தி, அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். ''இந்தச் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும். இதற்காக, நாம் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யத் தயாராக உள்ளோம். அத்துடன், ஆயுத வன்முறைகளையும் முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் ராம். இவை அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் நடந்தவை. தலைமறைவானவர், தலைமறைவாகத்தான் முடியுமே தவிர, பின்னால் குயிலோசை கேட்க... மாவீரர் உரையாற்ற முடியாது. அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் முக்கியமான அனைத்து இணையதளங்களுக்கும் அப்பேச்சு அனுப்பிவைக்கப்பட்டது. அதுவும், அந்த பி.டி.எஃப். ஃபைலுக்கு 'மகா வீர' என்ற சிங்கள வார்த்தையைக் குறிச் சொல்லாக வைத்து இருந்தார்கள். 'இது நம்முடைய நிலம். இங்கு அந்நியன் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறான்' என்பதுதான் புலிகள் இதுவரை வைத்த குற்றச்சாட்டு. முதன்முதலாக ராம், தமிழர்களைச் சிறுபான்மை இனம் என்று சொல்லிக்கொண்டார். 'தமிழீழ மனோபாவம்கொண்டவரால் அப்படி ஒரு பேச்சை எழுதியிருக்கவே முடியாது' என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

ஆயுதம் உள்பட அனைத்தையும் விட்டுவிட்டு போராடப்போவதாக பகிரங்கமாக அறிவித்த அந்த ராம், இப்போது புலிப் படையை உருவாக்கி காட்டுக்குள் போராடிக்கொண்டு இருப்பதாகக் கதை கட்டப்படுகிறது. இதற்குப் பின்னணியில் சிங்கள உளவுத் துறையின் கைங்கர்யம் அதிகமாக இருப்பதாகவே தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பேச்சு.

பொறிக்குள் தேங்காய் சில்லைவைத்து எலி பிடிக்கும் தந்திரம்போல, ராம் என்ற ஒருவரைக் காட்டி யாரெல்லாம் புலி ஆதரவாளர்கள், நிதி உதவி எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சிங்கள உளவுத் துறை திட்டமிட்டது. ''ராம் தன்னைத் தலைவராகப் பிரகடனப்படுத்தியதும், புலிப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராமைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். வர மறுத்த ராம், குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு அவர்களை வரச் சொன்னார். புலிகள் போகவில்லை. மாறாக, ராமுடன் இருக்கும் இரண்டு பேர் பெயரைச் சொல்லி, அவர்களையாவது எங்களிடம் அனுப்பிவைக்கக் கேட்டனர். அதற்கும் ராம் உடன்படவில்லை. பொதுவாகவே, ராணுவக் கட்டுப்பாட்டில் சிக்கியவர்கள்தான் தங்களது இடத்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள். ராம் மீது அதன் பிறகுதான் சந்தேகம் வந்தது. அவரை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று புலிப் புலனாய்வினர் அறிவித்தார்கள்'' என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புலிகளைத் தலையெடுக்கவிடாமல் தடுப்பது, அவர்களது வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைப்பது, புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அரசியலைச் சிதைப்பது... ஆகிய மூன்று இலக்குகளை சிங்களப் புலனாய்வுத் துறை தனது திட்டமாக வைத்துள்ளது. அதற்கு ராம் 'கையாள்' ஆக்கப்பட்டு உள்ளார்.



ராம், ஆயுதப் பயிற்சி பெற்றது தமிழகத்தில்தான். 1982-ல் கொளத்தூர் முகாமில்தான் பயிற்சி பெற்றதாகச் சொல்லி இருக்கிறார். உண்மை என்னவெனில், புலிப் படையின் 9-வது பிரிவில் பயிற்சி பெற்றவர் ராம். முதல் இரண்டு பிரிவுகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது, 3, 6, 10 பிரிவுக்கு கொளத்தூரிலும், 4,5 பிரிவுக்கு வத்திராயிருப்பு மலையிலும், 7,8,9 பிரிவுக்கு திண்டுக்கல்லிலும் பயிற்சிகள் தரப்பட்டன. அதாவது, தன்னுடைய சுய கதையைக்கூட சுத்தமாகச் சொல்லத் தெரியாத அளவுக்குக் குழம்பி இருக்கிறார் ராம்.

''இவரைவைத்து புலிகள் அமைப்பு மீண்டும் இயங்குவதாகச் சொல்வதன் மூலமாக, இலங்கையை எப்போதும் பதற்றமுள்ள நாடாகவே காட்டிக்கொள்ள ராஜபக்ஷே விரும்புகிறார். பயங்கரவாதம் நாட்டில் இருக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டியே, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறார்'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

இது போன்ற தகவலை இங்கு பரப்புவதும் அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது. 11-வது முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் இந்த மாதம் தடை செய்யப்பட்டு உள்ளது. முற்றாக ஒழிக்கப்பட்ட இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழாமல் இருக்க... இயக்கம் இருப்பதாக போலித் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இதைவைத்து ஈழம், ஈழ மக்கள் துயரங்கள், அவலங்களைப் பேசுவதையே பயங்கரவாதமாகப் பார்க்கத் தூண்டும் காரியத்துக்கு ராம் பயன்படுத்தப்படுகிறார். நிஜப் புலிக்குப் பயந்தவர்கள், டூப்ளிகேட் புலியைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்.

'விழிப்புதான் விடுதலைக்கு முதல் படி' என்று பிரபாகரன் சொன்னதாகச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர், 'எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்துவிட்டான்' என்று எழுதியிருக்கிறார்.

வீரன் முளைக்கும்போதே, துரோகியும் துளிர்க்கிறான் என்பார்கள். ஆனால், வீரனின் வெற்றிக்கு முன், துரோகியின் தோல்வி அறிவிக்கப்படும்!

Saturday, May 29, 2010

யுத்த களத்தில் பிரபகரனுக்கு போன தகவல்!


2009 புத்தாண்டு தமிழருக்கு மரண ஓலங்களோடு பிறந்தது. சிங்களப் பேரினவாதம் ராஜபக்சேக்களின் தலைமையில் வரலாறு கண்டிராத வெறிகொண்டு நின்றது. முப்படை களையும் ஏவிவிட்டு ஓர் மக்கள் இனத்தையே அழிக்கத் துடித்த சிங்களப் பேரினவாதத்தின் கொலைவெறியை தாராள ஜனநாயகத்தின் மேற்குலகமும், இடதுசாரிகளின் உலகமும், புத்தன்- காந்தியை காட்டியே நீண்ட காலம் பித்தலாட்டம் செய்துவரும் இந்தியாவும் "பயங்கரவாதத்திற் கெதிரான' யுத்தமென ஏற்றுக் கொண்டு ராஜபக்சேக் களின் கொலைவெறிக்குத் தூபமிட்டுத் துணை நின்றன. தமிழ் இனம் தனிமையுற்றது. எமக்காய் பேசவோ, கண்ணீர் விடவோ பெரிதாய் எவரும் இருக்கவில்லை. ஜனவரி தொடங்கியதிலிருந்து கொத்துக் கொத்தாய், பூவாகவும், பிஞ்சாகவும் தமிழர்கள் கொல்லப்படும் செய்திகள் வரத் தொடங்கின. உலகெங்கும் தமிழர்கள் கலங்கினர், கண்ணீர் வடித்தனர், களமிறங்கிப் போராடினர்.

தாய்த் தமிழகமும் குமுறத் தொடங்கி யிருந்தது. அரசியற் கட்சிகளின் போராட்டங்கள், மனித சங்கிலிகள், மாணவர் போராட்டங்கள் என நாளுக்கு நாள் நிலைமை சூடாகிக் கொண்டிருந் தது. தினம் தினம் தமிழர் பிணங்கள் விழுவது கண்டும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையின் உணர்வழுத்தம் அனுபவித்த தமிழர் பலர் தங்கள் இன்னுயிரை அழித்து அதிகாரத்தில் இருக்கிறவர்களின், உலகத்தின் அக்கறையை உக்கிரப்படுத்த தலைப்பட்டனர். முத்துக்குமாரின் ஈகம் புதியதோர் தமிழ் இளையர் எழுச்சிக்கான களத்தினை திறந்தது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன் னும் நான்கு மாதம்தான் என்ற நிலையில் தாய் தமிழகத்தில் அரசியற்களம் சிக்கலுக்குள்ளானது. சாமான்யத் தமிழன் தன் இன்னுயிரையும் ஈழத் தமிழனுக்காய் ஒருபுறம் ஈகம் செய்து கொண்டிருக்க- அரசியற் களத்திலோ சூழ்ச்சிகள், சூதுகளின் காம்புகள் விஷம் சுரக்கத் தொடங்கியிருந்தன. அரசியற் கூட்டணிகள் மாற்றம், ஆட்சிக் கவிழ்ப்பு, புதிய கூட்டணி அரசு இவற்றையெல்லாம் பரிசோதித்திட ஈழத் தமிழனின் இறுதி அழிவு ஓர் அற்புத வாய்ப்பாக சிலரால் பார்க்கப்பட்டது. அரசியற் கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின் கண்ணிகள் மிகவும் பலவீனப்பட்டது. போராட் டங்களுக்கு அப்பால் மத்திய அரசை மண்டியிட வைக்கும் அரசியல் பொது எழுச்சியாய் தமிழக இளையர்கள்- கட்சிகள்- மக்களின் முயற்சிகள் மாற முடியாமற் போனமைக்கு இது ஓர் முக்கிய காரணம். உதாரணமாக ஈழத்தமிழருக்காய் வெளிப்படையான ஆதரவு நிலைப்பாடு காட்டும் ஒரு குறிப்பிட்ட கட்சி, கலைஞர் ஈழ மக்களுக்கு துரோகமிழைப்பதாய் கூறிக் கொண்டே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைக்கப்பட அழைப்பு விடுத்தது. கலைஞர் உஷாரான தருணம் அது. சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை யில் ஒருபுறம் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டு மறுபுறம் உரையாடல்- பேச்சுவார்த்தைகள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதென்ற அணுகுமுறையை வரையறுத்தார்.

தி.மு.க.விற்குள்ளும் உணர்வுபூர்வமான விவாதங்கள் நடந்தன. வெளியே பலருக்கும் தெரியாத நெகிழ்வானதோர் உண்மை என்னவென்றால் ""ஆட்சியை இழப்பதால் நிச்சயம் போர் நிற்கும்- ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியற் போராட்டமும் பாதுகாக்கப்படுமென்றால் ஆட்சியை இழப்போம்'' என்ற நிலைப்பாட்டினை ஒரு கட்டத்தில் கட்சிக்குள் துணிவோடு முன்வைத்தவர் துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். மேடைகளில் வீர முழக்கம் செய்து கைதட்டல்கள் வாங்குவதோடு கடமை முடிக்கும் அரசியல்வாதி களுக்கு மத்தியில் ஆரவாரம் எதுவும் செய்யாமல் ஆட்சியைக் கூட இழக்கும் கருத்தினை முன்வைத்த அவர் மீது, இதனைக் கேள்விப்பட்ட கணம் தொட்டு எழுந்த உயர் மதிப்பு அவ்வாறே தொடர்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை சமீப ஆண்டுகளில் மிகவும் வசதியாகிவிட்ட வெகுசில அமைச்சர்களைத் தவிர அனைவருமே ஆட்சியை இழக்கும் உணர்விலேயே இருந்தனர். கனிமொழி அவர்களும் இந்த நிலைப்பாட்டையே வலியுறுத்தினார். ஆட்சியை விட்டு விடலாம் என உள்வட்டத்தில் கலைஞர் நாளுக்கு நாள் பத்து முறையாவது குறிப்பிட்ட நாட்கள் அவை. ஆட்சியை இழப்பதால் மட்டுமே போர் நிறுத்தம் வந்துவிடுமா' என்ற கேள்வியில் தொங்கிய தெளிவின்மையும், போர் நிறுத்தத்தை விட ஆட்சி மாற்றத்தை உள்நோக்காய் கொண்டு தமிழகத்தில் சூழ்ச்சியின் காய்கள் நகர்த்தப்பட்ட சூழலும் "ஆட்சியை இழக்க வேண்டிய அவசியமில்லை' என்ற முடிவிற்கு தி.மு.க.வை நகர்த்தியது. அதேவேளை போர் நிறுத்த வேண்டுகோளை வலுவாகவே புது டில்லிக்கு வைத்துக் கொண்டிருந்தது.

இந்த பின்னணியில்தான் 2009 ஜனவரி 28-ம் தேதி இரவு 10.30 மணியளவில் மத்திய அரசில் முக்கிய அமைச்சராய் இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரது மகன் அவசரமாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ""உடனே சந்திக்க வேண்டும்'' என்றார். "நாளை காலை சந்திக்கலாம்' என்றேன். ""இல்லை, இன்றிரவே பார்க்க வேண்டும்'' என்றார். விபரங்களை தொலைபேசி வழி பேசத் தயங்கினார். ஈழப் போர்க்களம் தொடர்பான அழைப்பு அது என்பது எனக்குப் புரிந்தது.

நான் குறிப்பிட்ட அந்த முக்கிய அமைச்சரின் மகன் எனக்கு நண்பர். என் தனிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்று- பொது நன்மைக்காய் நாம் எல்லோருடனும் நட்புறவு பேண வேண்டுமென்பது. காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் என யாரோடு வேண்டுமானாலும் நாம் நட்பு பாராட்டலாம், உரையாடலாம். அதற்காக அவர்களின் கொள்கை நிலைப்பாடுகளோடு உடன்படுகிறோம் என்றில்லை. கட்சிக்குள் ஏழு பிரிவுகள் இருந்தால்கூட பொது நன்மைக்காய் நாம் எல்லோருடனும் பழகலாம், உறவாடலாம்.

அதிலும் நான் குறிப்பிடும் அந்த அமைச்சரின் மகனை தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கும். தடாலடியாகப் பேசுவாரென்பதைத் தவிர முக்கியமான விஷயங்களை முக்கியத்துவத்தோடு புரிந்து செயற்படும் பக்குவம் கொண்டவர். "இதனைச் செய்ய முடியும் முடியாது' என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். முடியும் எனச் சொல்வதை தாமதப்படுத்தாமல் செய்வார்.

போர் தீவிரமடையத் தொடங்கியிருந்த 2008-ம் ஆண்டின் இடைக்காலம் தொட்டே இவரை நான் அவ்வப்போது சந்தித்து ""வலுவான நிலையில் உங்கள் தந்தை இருக்கிறார். எப்படியேனும் ஓர் போர் நிறுத்தம் கொணர உதவக்கூடாதா?'' என்று கேட்பேன். அப்போதெல்லாம் அவர் வேடிக்கையாக, ""ஃபாதர் நான் ஒரு தபால்காரன் போல- டெலிபோன் ஆபரேட்டர் போல... நீங்கள் சொல்வதை, கேட்பதை அங்கு சொல்லுவேன்... அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது. அதேவேளை அங்கிருந்து ஏதேனும் பதில் வந்தால் ஒரு தபால்காரனைப் போல் உங்களையும் தொடர்பு கொள்வேன்'' என்பார். அப்படித்தான் 2009 ஜனவரி 28-ம் தேதி அந்தப் பின்னிரவு அழைப்பும் வந்தது.

அவரது அழைப்பில் தெரிந்த அவசரத்தை உள்வாங்கிக் கொண்டவனாய், பரபரப்பும் படபடப்பும் பற்றிக் கொள்ள நானே வாகனத்தை ஓட்டிக் கொண்டு இரவு 11 மணி யளவில் அவரது இல்லம் சேர்ந்தேன். வீட்டு முன் அறை நாற்காலியில் அமர்ந்ததுமே அவர் சொன்ன வாக்கியங்கள் இவை: FATHER, GOVERNMENT OF INDIA WANTS A CEASEFIRE. THE ONLY PRE-CONDITION IS LTTE SHOULD ANNOUNCE AN INTENTION TO LAY DOWN ARMS. THE CEASEFIRE WILL BE GIVEN WITHIN 48 HOURS. CAN YOU CONTACT VANNI? தமிழில் மொழிபெயர்ப்ப தானால், ""ஃபாதர், இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே ஓர் போர் நிறுத்தம் நிறுவிட இந்திய அரசு விரும்புகிறது. ஒரே நிபந்தனை "ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தினை' - INTENTION TO LAY DOWN ARMS வெளிப்படையாக விடுதலைப்புலி கள் அறிவிக்க வேண்டும். அறிவித்தார்களென் றால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் நிறுவப்படும்''.

தொடர்ந்தும் அவர் சொன்னார், ""உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமெனச் சொல்லவில்லை. ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தினைத்தான் - INTENTION TO LAY DOWN ARMS கேட்கிறார்கள். அதற்கு விடுதலைப்புலிகள் ஒத்துக் கொண்டால் புதுடில்லியில் இன்னாருக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்'' என தொலைபேசி எண் ஒன்றையும், அந்நபரின் மின் அஞ்சல் முகவரியினையும் தந்தார்.

இன்னொன்றையும் மிக முக்கியமாக அவர் குறிப்பிட்டார்: ""தயவு செய்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விளிம்பு நிலையிலுள்ள எவரையும் இப்பேச்சுவார்த்தைகளைக் கையாள நியமிக்காதீர்கள் என அவர்களை அறிவுறுத் துங்கள். முன்பு ராஜீவ்காந்தி அவர்களோடான பேச்சுவார்த்தைகள் கசப்பாகிப் போக அது ஓர் காரணமாயிருந்தது. இப்போது அவர் கள் யாரை நியமித்தாலும் அவர் பிரபா கரன் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமைத் தகுநிலை உடையவராக இருக்க வேண்டும். அவரது சொல்- பிரபாகரன் சொல்வ தற்கு இணை என்பதாக இருக்க வேண்டும்'' என்றார்.

""எவ்வளவு விரைவில் உங்களுக்குப் பதில் வேண்டும்?'' என்று அவரை நான் கேட்டேன். ""எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக வேண்டும்'' என்ற அவர் ""இன்றிரவே கிடைத்துவிட்டால் உத்தமம்'' என்றார். நான், ""அது சாத்தியமில்லை. நாளை இரவுக்குள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்வேன். கடவுள் இத் தருணத்தை ஆசீர்வதிக்கட்டும்'' என்று கூறி அவரிடமிருந்து விடை பெற்றேன். நேரம் நள்ளிரவு கடந்திருந்தது. சிந்தித்த வாறே வாகனத்தை ஓட்டிக் கொண்டு நேராக என் அலுவலகம் சென்றேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முந்தைய அரசியற்பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள் உயிரோடிருந்தவரை அவருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு களநிலை குறித்து உண்மை நிலை அறிந்து வந்தேன். அவர் படுகொலையானபின் வன்னியோ டான நேரடி தொடர்பு இருக்கவில்லை. எனவே எனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய லண்டனில் வாழும் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன். லண்டனில் அப்போது நேரம் இரவு 8.30 மணி. விஷயத்தையும், அவசரத்தையும் அவருக்கு எடுத்துச் சொல்லி விடுதலைப்புலிகளின் லண்டன் பொறுப்பாளரை உடனடியாக என்னோடு தொடர்புக்கு வரச் சொல்லிப் பணிக்கும்படிக் கூறினேன். அலுவலகத்திலேயே லண்டன் அழைப்புக்காய் காத்திருந்தேன். இந்திய நேரம் ஜனவரி 29 அதிகாலை 3 மணியளவில் லண்டனிலிருந்து ரவி என்பவர் தொலைபேசி அழைப்பில் வந்தார். லண்டனில் அவர் "ரூட் ரவி' என அறியப்படுகிறவர் என முன்னதாக என் நண்பர் எனக்குக் கூறியிருந்தார்.

ரவி அவர்களிடம் எல்லா விபரங்களையும் விரிவாக எடுத்துக் கூறினேன். துரிதமாக இயங்க வேண்டியதன் அவசியத்தையும், தருணத்தின் முக்கியத்துவத்தையும் அவருக்கு வலியுறுத்திச் சொன்னேன். உடனடியாக இச்செய்தியை வன்னியில் அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்குத் தெரிவிப்பதாகவும், நடேசன் அவர்கள் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்வார் எனவும் ரவி கூறினார். "கடவுளே எல்லாம் சரியாக நடக்க வேண்டும்... தமிழுலகம் ஏங்கும் போர் நிறுத்தத்திற்கான தருணமாய் இது அமைய வேண்டும்' எனப் பிரார்த்தித்தவாறு படுக்கையில் விழுந்தபோது அதிகாலை 4 மணிக்கு மேல் ஆகியிருந்தது.

அடுத்த நாள் எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட்டேன். வன்னியிலிருந்து அழைப்பு வரும் எனத் தெரியும். காலை சரியாக 11.10-க்கு வன்னிப் போர்க்களத்திலிருந்து நடேசன் அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

போதை டாக்டரின் வெறியாட்டம்!


""நானாகவா நோயாளி யைக் கற்பழிக்கப் போனேன்? இன்னொரு டாக்டர் தைரியம் கொடுத்ததால்தான் போதையில் போனேன்... போய் கட்டிப்புடிச்சு... அதுக்காக இந்த நர்ஸ்களும் அந்த நோயாளியோட மகனும் மகளுமா சேர்ந்து செருப்பால அடிச்சு போலீஸ்ல புடுச்சுக் கொடுக்கலாமா? சும்மா விடமாட்டேன், ஜெயில்ல இருந்து திரும்பி வந்து நான் யார்னு காட்டுறேன்!'' -சவால் விட்டபடி சிறைக்குச் சென்றார் டாக்டர் இளங்கோ.

தன் மனைவி ஜெயலட்சுமிக்கு என்ன வியாதி என்பதைக் கண்டுபிடித்து குணப்படுத்துவார்கள் என்று நம்பித்தான் மதுரை ஆசீர்வாதம் மருத்துவமனைக்கு அனுப்பினார் பூசுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி.

அம்மாவோடு துணைக்குச் சென்றார்கள் மகனும் மகளும்.

ஜெயலட்சுமியை அட்மிட் செய்த ஆசீர்வாதம் கிளினிக் நிர்வாகம் ""பெரிய டாக்டர் ஆசீர்வாதம் மருந்துக் கம்பெனிகள் தயவால, குடும்பத்தோட மும்பைக்கு டூர் போயிருக்கிறார். டாக்டர் இளங்கோதான் டூட்டி டாக்டர். ஆண்டிப்பட்டி பக்கத்தில இருக்கிற சுப்லாபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர். அங்கே காலைல டூட்டி இங்கே நைட் டூட்டி... அவர் உங்களைப் பார்த்துப்பார்!'' என்றது.

டாக்டர் இளங்கோவின் சிகிச்சை பற்றி நோயாளி ஜெயலட்சுமியின் மகள் பாண்டியம்மாள் நம்மிடம் ""டாக்டரா அவர்? சரியான குடிகாரர்... தினமும் சாயந்தரம் குடிச்சிட்டுதான் வந்தார். உன் அம்மா சிவகாசி ஜெயலட்சுமி மாதிரி... நீயும் நல்லாதான் இருக்கே... குட்டி ஜெயலட்சுமினு ஆரம்பிச்சு... ரெட்டை அர்த்தத்தோட அசிங்க அசிங்கமா பேசினார். நான் நர்ஸ்கள்ட்ட சொன்னேன். எங்ககிட்டயும் அப்படித்தான் பேசுறார். ரொம்ப ஜாக்கிரதையா இரும்மானு சொன்னாங்க. இப்படி எங்க அம்மாகிட்ட தப்பா நடப்பார்னு கனவுல கூட நினைக்கலை!'' தேம்பினார் பாண்டியம்மாள். இன்னும் அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்து மீளாமல் நடுக்கத்தோடிருந்தார் பூசுத்தி ஜெயலட்சுமி.

""திங்கட்கிழமை நைட் எட்டரை மணி... பயங்கர போதையில வந்தாரு... உங்க அம்மாவை செக் பண்ணணும் வெளிய போங்கனு சொல்லி என் மகளையும் மகனையும் அனுப்பிட்டு ரூமை தாழ் போட்டாரு... படக்குனு திரும்பி வந்து என் ரெண்டு மார்பிலயும் கையை வச்சாரு... நான் தள்ளி விட்டுட்டு கத்தினேன். ஏண்டி கத்துறே அவளைத்தான் அனுபவிக்க முடியலை கிழவி உன்னையாச்சும்னு சொல்லிட்டே என் நைட்டியை... அப்புறம் காப்பாத்துங்க... காப்பாத்துங்க... கெடுக்கிறான் இந்தப் பாவினு அலறுனேன். வெளில எல்லாரும் கதவைப் படபடனு தட்டுனாங்க. அப்பவும் பயப்பிடாம என்னென்னமோ செய்றான்... கடைசியில... கதவை உடைச்சிக்கிட்டு வந்து... டாக்டரை கீழே புடிச்சுத் தள்ளி... எல்லாரும் செருப்பாலயே அடிச்சாங்க. அப்புறம்தான் அவன் போதை இறங்குச்சு போல... திமுதிமுனு பக்கத்து அறைக்கு ஓடி கதவை தாழ்ப்பாள் போட்டுக்கிட்டான். 100-க்கு போன் போட்டு சொன்னமா... போலீஸ் வந்து புடுச்சுக்கினு போச்சு... இப்பத்தான் சொல்றாங்க இந்த சீஃப் டாக்டர் ஆசீர்வாதமும் மோசமானவர்னு...'' நடுக்கத்தோடு குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார் பூசுத்தி கிராம முனியாண்டியின் மனைவி ஜெயலட்சுமி.

பிஞ்சு மனதில் நஞ்சு!


சிவகாசியில் கல்லூரி மாணவியின் கண்ணில் கருப்புத் துணியைக் கட்டி காரில் கடத்திய வழக்கில், வயதுக்கு மீறிய செயலில் ஈடுபட்ட தாக, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான் ஆறாவது வகுப்பு படிக்கும் சிவபாதமுத்து.

""சேர்க்கை சரியில்லைன்னா சின்னப் பசங்க எப்படி கெட்டுப் போவாங்கங்குறதுக்கு சிவபாதமுத்து சரியான உதாரணம். இந்தத் தெருவுல அவன் வயசுப் பசங்க யாருமே சிவபாதமுத்து கூட சேரமாட் டாங்க. ஏன்னா அவன் பழக்க மெல்லாம் இந்தத் தெரு வையே மிரட்டிக்கிட்டிருக் கிற விஷ்ணுபாண் டிங்குற ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் கூடத்தான். அந்த விஷ்ணு பாண்டி, செல்போன்ல ஆபாசப் படத்தக் காட்டுறதுலயிருந்து அத்தனை கெட்ட பழக்கத்தையும் சிவபாதமுத்துக்கு கத்துக் கொடுத்திட் டான். அதான், பொம்பளக் கடத்தல் வரைக்கும் இந்தச் சின்னப் பையனைக் கொண்டு போய் விட்ருக்கு'' என்றார் அவன் குடியிருக்கும் ஆவணி நாடார் தெருவில் வசிக்கும் மணிகண்டன். அதே தெருவில் உள்ளவர்கள் ""ஆமாங்க... போற வர்ற பொம்பள களயெல்லாம் அசிங்கமாப் பேசுவான் விஷ்ணுபாண்டி. அவன் மேல ஏற்கனவே ஒரு போலீஸ் கேஸ் இருக்கு. அவன் பண்ணுற தப்புக்கு பேரண்ட்ஸும் சப்போர்ட் பண்ணு றாங்க. அவன் பேச்ச கேட்டுக்கிட்டு இந்த சிவபாதமுத்து பெரிய பொம்பளைகளக்கூட பயமே இல் லாம "பின்னால' தட்டுவான். பிஞ்சுலயே பழுத்துட்டானேன்னு அவன் வீட்டுல சொன்னப்ப அவங்களும் கண்டுக்கல. இப்பப் பாருங்க இந்த ரெண்டுபேரும் போலீஸ்ல மாட்டிருக்கானுக...'' என்றார்கள்.

கல்லூரி மாணவியை ஏன் கடத்தினார்கள்?

"என் லவ்வர்கிட்ட ஏதேதோ சொல்லி அவள என்கிட்டயிருந்து பிரிச்சிட்டா சபீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவளுக்கு சரியான பாடம் கற்பிக்கணும். என் கூட வாங்க...' என்று நண்பன் பிரவீன் சொன்ன மாத்திரத்தில், அவன் ஓட்டி வந்த காரில் ஏறி சபீதாவைக் கடத்த துணை போயிருக்கிறார்கள் விஷ்ணுபாண்டி, மதன், முத்துப்பாண்டி ஆகிய மூவரும். "பொடி யன் பொருத்தமானவன்' என சிவ பாதமுத்துவை விஷ்ணுபாண்டி பரிந்துரைக்க... சிவபாத முத்து பேச்சுக் கொ டுத்து சபீதாவை அழைத்து வர, வாயைப் பொத்தி காருக்குள் இழுத்துப் போட்டிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் 4 பேர், ஒரு பள்ளிச் சிறுவன் என இந்த ஐவரிடமும் 8 மணி நேரம் மாட்டிக் கொண்டு பரிதவித்த சபீதாவை, சிறுவன் சிவபாத முத்து படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடத்தலின் போது நிகழ்ந் ததை அப்ப டியே சொல் லாமல், அம் மாணவி மற்றும் சிறுவனின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு, "மாணவியின் பெற்றோரிடம் 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார்கள்' என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

பட்டிமன்ற பேச்சாளர், ஆன் மிக சொற்பொழிவாளர், ஜோதிடர் என சதா பிஸியாக இருக்கும் விஷ்ணுபாண்டி யின் அம்மா அனுசுயாவை கைபேசியில் தொடர்பு கொண்டோம். ""வேலை வேலைன்னு நானும் என் வீட்டுக்கார ரும் அடிக்கடி வெளியூரு போவோம். அதான் புள்ளய சரியா கண்காணிக்க முடியல. அதன் பலனைத்தான் இப்ப அனுபவிக்கிறோம். இந்தத் தெருக் காரங்க சாதிவெறி பிடிச்சவங்க. நாங்க கலப்பு மணம் பண்ணிக்கிட்டவங்க. அதனால, என் மகன் விஷ்ணு பாண்டிகிட்ட "உன் அப்பன் யாரு தெரியுமா? இப்ப நீ போடுற இனிஷி யல் சரிதானா?'ன்னு அசிங்க அசிங்கமாக் கேட்டு அவன இப்படி முரடனா ஆக்கிட்டாங்க. "ஜோசியம் பார்க்கிறேன்னு சொல்லிக்கிட்டு உன் அம்மா எவன் எவன்கூடவோ படுக்குறான்'னு அவன் காதுபடவே சொன்னா அவன் எப்படி நல்லவனா வளருவான்?'' என்று தன் மகன் சிறைபட்டது குறித்து கவலைப்பட்டார். சிவபாதமுத்து வின் அம்மா சகுந்தலாவோ ""அவன் சின்னப்பய. அவனப் போயி தப்பா நடந்துகிட்டதாக சொல்றாங்க. எப்படி நம்புறது? இனிமே பெரிய பசங்க கூட சகவாசம் வச்சுக்கவே விடமாட்டேன்'' என்றார் பரிதாபமாக.

சிறுவன் சிவபாதமுத்து இனியாவது நல்வழிக்குத் திரும்ப வேண்டும்.


இன்னொரு சிறுவன்! வேறொரு வழக்கு!



ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒரு கூலி வேலை செய்து, சேர்த்த பணத்தை படிப்புச் செலவுக்கு பயன் படுத்துவது வழக்கம். ராஜபாளையம்- சங்கர பாண்டியபுரத்தைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவன் சதீஷ்குமார் இந்த ரகமல்ல. விடுமுறை நாட்களை குஷியுடன் கொண்டாட, பணத் தேவைக் காக வீடு புகுந்து திருடுவான். அதுவும் தனக்குத் தெரிந்த வீடுகளில் யார் யார் வீட்டுச் சாவியை கதவு நிலைகளிலும், சன்னலிலும் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதை நோட்ட மிட்டு, அவர்கள் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றபிறகு, வீட்டுக்குள் நுழைந்து திருடி விடுவான். இந்த விடுமுறையில் அவன் அப்படி திருடிய நகைகளின் மதிப்பு ரூ.2,82,000 என காவல்துறை சொல்கிறது. இப்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான் சதீஷ்குமார்.

வறுமையை வென்ற மாணவி!


வழக்கம் போல... புடவை மூட்டையை தனது டூவீலர் கேரியரில் கட்டிக்கொண்டு, வியாபாரத்திற்கு புறப்பட்டபோதுதான் இந்த இனிமையான செய்தி ஷேக்தாவூதின் காதை நிறைத்தது.

மகள் ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் மாணவியாக, 10-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற் றிருக்கிறாள். இதுதான் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த ஏழை முஸ்லிம் தந்தையை திக்குமுக்காட வைத்த செய்தி.

நெல்லை டவுனில் கல்லணை பகுதியில், 650 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஷேக்தாவூதின் மகள்தான் தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவிய லில் 98 என்று மதிப்பெண்களை குவித்திருக்கும் மாணவி ஜாஸ்மின். தன்னைச் சாதனை மாணவியாக்கிய நெல்லை கல்லணை மாநக ராட்சி மேனிலைப் பள்ளியை, தலைமை ஆசிரியர் நடராசன் சாரை, வகுப்பாசிரியர் ராமன் சாரை, ஊர் ஊராக அலைந்து வியர்வை சிந்தும் தந்தையை, அம்மா நூர்ஜஹானை, அண்ணன் இம்ரான், தம்பி இர்பான் எல்லாரையும் நன்றிப் பெருக்கோடு பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

""அப்பா படும் கஷ்டந்தான் இன்னும் படிக்கணும்... இன்னும் படிக்கணும்கிற ஆர்வத்தை உண்டாக்கியது... எங்க ராமன் சார் எடுத்துக்கிட்ட முயற்சி... எல்லாம் சேர்ந்துதான் எனக்கு இந்தப் பெருமை வந்திருக்கிறது. மாநகராட்சி பள்ளியென் றால் எல்லாருக்கும் இளக்காரம். அந்தப் பள்ளிதான் என்னை மாநிலத்தில் முதல் மாணவியாக்கி கல்வி மாவட் டத்திலேயே தன்னை மூன்றாவது இடத்துக்கு உயர்த் திக் கொண்டிருக்கிறது!'' -தாயின் முத்தங்களோடு சொன்னார் ஜாஸ்மின். ஜாஸ்மினைக் காட்டிலும், அந்த ஏழைக் குடும்பத்தைக் காட்டிலும் அதிகம் பூரித்து நிற்கிறார்கள் நெல்லை கல்லணை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள்.

செம்மொழி மாநாட்டுக்கு கைதிகள் எழுதிய...


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பணிகள் அனைத் தும் வேகமெடுத் துள்ள நிலையில், இம்மாநாட்டின் படைப்புகள் தேர்வுக் குழுவினரால் சிறைக் கைதிகளின் 6 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டி ருக்கின்றன. இந்த படைப்பு களின் சொந்தக்காரர்களான சிறைக்கைதிகளை செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்து கிறது சிறைத்துறை நிர்வாகம். இந்த சம்பவம், சிறைக்கைதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்... இதன் பின்னணிகளை விசாரித்தோம்.

செம்மொழி மாநாட்டின் பணிகளை கவனிக்க 24-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்தார் கலைஞர். இதில் ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக் குழுவும் ஒன்று. இத்தேர்வுக் குழுவிற்கு மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த தங்கள் படைப்பு களை யார் வேண்டுமானாலும் அனுப்ப லாம் என்று அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழறி ஞர்கள் முதல் சாதாரணமானவர்கள் வரை எழுதிய ஆயிரக்கணக்கான படைப்புகள் குவிந்தன. இதில் தமிழக சிறைகளிலுள்ள கைதிகள் பலர் எழுதிய கட்டுரைகளும் அடக்கம்.

""பேராசிரியர் சிவத்தம்பி தலைமையிலான ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக்குழு, பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ரமேசு (எண் 7230), ஐயங்கனி (எண் 8497), சூசைமரியான் (எண் 1175), கிருஷ்ணன் (எண் 8646), கல்கி மோகன் (எண் 1112), செல்வராசு (எண் 1000) ஆகிய 6 பேரின் படைப்புகளும் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்தது. இதனை பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், செம் மொழி மாநாட்டில் அறிவிப்பு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதுடன் படைப்புகளை எழுதியவர்களும் மாநாட்டில் அடையாளப் படுத்தப்படுவார்கள். அந்த வகையில், 6 ஆயுள் தண்டனை கைதிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள ஏதுவாக கோவை சிறைக்கு மாற்றவும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் அனுமதி கோரி சிறைத்துறைத் தலைவர் ஷியாம் சுந்தருக்கு கடிதம் எழுதினர் பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரிகள். ஆனால், இந்த அனுமதியை தராமல் நிராகரித்து விட்டார் ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தர். இந்த சம்பவத்தை அறிந்து சிறைக்கைதிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்!'' என்கிறது சிறைத்துறை வட்டாரம்.

"பழந்தமிழர் அரசில் மக்கள் சுயாட்சி அமைப்பு' என்கிற தலைப்பில் ஆய்வு செய்துள்ள ரமேசு, "பழந்தமிழர் பண்பாட்டில் பெண்ணியம்' என்கிற தலைப்பில் எழுதிய ஐயங்கனி, "பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாறு' என்கிற தலைப்பில் எழுதிய சூசை மரியான், "இலக்கியம்' என்கிற தலைப்பில் ஆய்வு செய்துள்ள கிருஷ்ணன், "தமிழும் இந்திய மொழிகளும்' என்கிற தலைப்பில் எழுதிய கல்கி மோகன், "உலகின் முதல் மொழி தமிழ்' என்கிற தலைப்பில் எழுதிய செல்வராசு ஆகிய ஆறு ஆயுள் தண்டனை கைதிகளும் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, அரசியல், கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை பெரிய அளவில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

""தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் துவங்கி தற்கால இலக்கியங்கள் வரை தங்களது படைப்பு களில் ஆய்வு செய்துள்ளனர் ஆயுள் கைதிகள். தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பியல்புகளுக் கும் உலக இலக்கியங்களிலிருந்தும் உலகப் படைப்பாளிகளிடமிருந்தும் நிறைய ஆதாரங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள். தமிழ் இலக்கியங்கள் மீது ஈர்ப்பும், நிறைய படித்தும் இருந்தால்தான் சிறந்த படைப்புகளை தர முடியும். அந்த தாக்கம் ஆயுள் கைதிகளின் கட்டுரைகளில் இருந்தது'' என்கின்றனர் தேர்வுக் குழுவினர்.

மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் பற்றுதல் கொண்ட ஆயுள் கைதிகளுக்கும் அவர்களது படைப்புகளுக்கும் ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தரின் அனுமதி நிராகரிப்பால் சிக்கல் எழுந்துள்ள நிலையில், சிறைக் கைதிகளுக்காக பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசிய போது, ""சிறைக் கைதிகளுக்குரிய ஆற்றலை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்துகிற வகையில் சிறைத்துறை நிர்வாகம் ஆரோக்கியமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான முடிவுகளும் உத்திரவுகளும்தான் நல்ல பலனைக் கொடுக்கும். தேர்வு செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் அறிவு சார்ந்த படைப்புகளை அங்கீகரிக்க விடாமல் மறுப்பது என்பது... சம்பந்தப்பட்ட சிறைக் கைதி களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதோடு குற்றங்கள் பெருகவே வழி வகுக்கும்.

"மெல்லத் தமிழ் இனி சாகும்' என்கிற சொற்றொடர் புழக்கத்தில் பயன்படுத்தப் படுகிற நிலையில், ஆயுள் தண்டனை கைதி களுக்குள்ளும் இலக்கியவாதிகள் இருப்பதை உலகறியச் செய்ய வைப்பதன் மூலம் தமிழை உயர்வுபடுத்த முடியும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட்டால்... ஆயுள் கைதிகள் செம்மொழி மாநாட்டில் மேடை ஏறும் வாய்ப்பு இருக்கிறது'' என்கின்றார்.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ராஜேந்திரனிடம் கேட்ட போது, ""செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கு சிறைக்கைதிகள் யாரும் கட்டுரைகள் அனுப்பக்கூடாது என்கிற வரையறை ஏதும் இல்லை. யார் வேண்டு மானாலும் கட்டுரைகள் அனுப்பலாம். சிறைக்கைதிகள் எழுதிய கட்டுரைகள் சிறந்ததாக தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டிருந்தால், ஆய்வரங்கத்தில் அவர்கள் கலந்து கொள்ளும் வழி முறைகளை சிறைத்துறை நிர்வாகம்தான் மேற் கொள்ள வேண்டும்!'' என்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து சிறைத்துறை தலைவர் ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தரிடம் கருத்துக் கேட்டபோது...

""சிறைக் கைதிகள் தொடர்பான எந்த அனுமதியையும் நான் நிராகரிக்க வில்லை. அனுமதி கேட்க வேண்டிய சம்மந்தப்பட்டவர்கள் (மாநாட்டு குழு வினர்) யாரும் என்னிடம் அனுமதி கோரவில்லை. அரசாங்கம் கேட்டுக் கொண்டால்... அப்போது பார்க்கலாம்!'' என்பதோடு முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக் குழுவின் செயலாளர் கவிஞர் கனிமொழியிடம் கேட்டபோது, ""அப்படி சிறைக்கைதிகளின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அவர் களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு முயற்சி செய்யப் படும்!'' என்றார்.

ஆனால், மேலும் இதுபற்றி விசாரித்தபோது சிறைக்கைதிகளின் கட்டுரை கள் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது.

தரித்திரம் பிடிச்ச ராஜகோபுரமாம்!


நூறு இடிகள் ஒன்றாய் சேர்ந்து உச்சந் தலையில் விழுந்தது போன்ற பயங்கரச் சத்தத் தோடு இடிந்து நொறுங்கி விழுந்து கற்குவிய லாகி விட்டது, தென் கைலாயம் என்று நாயன் மார்களால் போற்றிப் புகழப்பட்ட காளத்தி நாதர் கோயிலின் 140 அடி உயர ராஜகோபுரம்.

26-05-10 அன்று கோபுரம் நொறுங்கி விழுந்தபோது அருகிலுள்ள கணேஷ் பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் பக்தர் சோமசுந்தரம் நம்மிடம், ""சார் ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தப்பவே நொறுங்கியிருக்க வேண்டிய காளத்தி நாதர் ராஜகோபுரம் இப்பத் தான் விழுந்தது. பத்து நிமிஷத்துக்கு முன்னால் வரை வானளந்து கொண்டிருந்த கோபுரம்... இப்ப மண்ணும் செப்பறியாங்கல்லும் தூசியுமா குவிந்து கிடக்குது!'' என்றார்.

""ஜெயலலிதா மேல உங்களுக்கு என்ன சார் கோபம்... காளஹஸ்திக்கு தினமும் பல லட்சம் பக்தர்கள் வர்றாங்க. அந்த பக்தர்களில் ஒருத்தராதான் ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தாங்க. அவங்க மேல ஏன் அபாண்டமா சொல்றீங்க? ஜெ. வர்றதுக்கு முன்னாடியே பனங்கிழங்கைப் பிளந்தது போல பிளந்தபடி தானே நின் றது அந்தக் கோபுரம்?''

""ஆமாமா... அப்பிடி நிக்கிறதைப் பார்த்து விட்டுத்தான்... தங்களோட தலைவியை வரவேற்கிறதுக்காக ஒண்ண ரை லட்ச ரூபாய்க்கு வெடிகளை வாங்கி வந்து இந்தக் கோபுரத்தை ஒட்டி வெடிச்சாங்க... வெடியினா சாதாரண வெடியில்லை... குவாரியில பாறை உடைக்க வைக்கிற ஜெலட்டின் வெடிச்சத்தம் மாதிரி சத்தம்... அந்த வெடிச் சத்தத்திலேயே அதிர்ந்து நொறுங்கி இருக்க வேண்டிய கோபுரம் 10 நாள் கழிச்சு விழுந்திருக்கு...!''






""தகவலுக்கு ரொம்ப நன்றி! நாங்க புறப்பட்டு விட்டோம்!''.

சென்னையில் இருந்து காளஹஸ்திக்குப் புறப்பட்டோம்.

காளஹஸ்தி மெயின்ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந் தது. அந்தச் சாலையை ஒட்டித்தான், நுழைவுவாயிலைப் போல கட்டப்பட்டி ருந்தது ராஜகோபுரம். இடிந்த மண் கற்குவியல் சாலையில் பாதியை அடைத்துக் கொண்டிருந்ததால்தான் போக்குவரத்தை நிறுத்தியிருந்தார்கள்.

""கோபுரம் பலகீனமானதுக்கு இந்த ரோட்டில், அளவுக்கு மீறிய எடையோடு போன லாரிகளும், ட்ரக்கு களும் கூட ஒரு காரணம் தான். யார் வந்தாலும் வெடிப் போட்டு வரவேற்பது, அப்புறம் யாருக்காவது கல்யாணம் என்றால் வெடி போடுவது என்ற பழக்கம் இங்கே இருக்கிறது. இதை தடை செய்திருந்தால் இந்தக் கோபுரம் உடைந்திருக்காது!'' பக்கத்தில் இருக்கும் கணேஷ்பவன் ஹோட்டல் ஊழியர் சொல்லிவிட்டு நகர்ந்ததும் மூடிக்கிடந்த ஒரு கடையின் உரிமையாளர் நம்மிடம்,

""கோபுரம் விரிசல் விட்டதுக்கு இந்த கணேஷ்பவன்காரங்கதான் கார ணம். கோபுரத்துக்கு பக்கத்தில இருந்த சங்கரமுனி மடத்தை விலைக்கு வாங்கி, அதை நொறுக்கிவிட்டு, இருபது அடி, முப்பது அடி பள்ளம் தோண்டி, சுரங்கத் தளமும் அஸ்திவாரமும் கட்டினார்கள். பள்ளம் தோண்டும் போதே கீறல் விழுந்து விட்டது கோபுரத்தில். இன்னொரு முக்கியமான காரணம் கோபுரத்தை சுற்றியிருக்கிற ஒவ்வொரு வீட்லயும் 400 அடிக்கு, 500 அடிக்கு "போர்' போட்டிருக்காங்களே அதுவும் கோபுரத்துக்கு பலகீனத்தை உண்டாக்கியிருக்கும்!'' என்று சொன் னார்.

""கணேஷ்பவன்காரர்கள் இந்தப் பக்கம் தோண்டினாங்களா... போதாக் குறைக்கு இன்னொரு குரூப் அந்தப் பக்கம் பள்ளம் தோண்டி கிருஷ்ண தேவராயருக்கு மண்டபம் கட்டினாங்க. கிருஷ்ண தேவராயருக்கு சிலை யும் வச்சாங்க. கோபுரம் நொறுங்குனா சிலையும் உடை யும்னு நெனைச்சோம்... சிலைக்கு ஒரு சேதாரமும் இல்லை. நான் கும்புடுற காளத்தி நாதர் எந்த உயிரையும் எடுக்காம, பாதிப்பு ஏற்படாமல் பாத்துக்கிட்டாரு!'' -கன்னத்தில் போட்டுக் கொண்டார் பக்கத்தில் நின்ற கணேஷ்ராம் நாயுடு என்ற பக்தர்.

காளத்தி நாதர் கோயில் வெளிச்சுற்றுச் சுவரில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில், சாலையோரம், கோயிலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், ஒரு நுழைவு வாயிலைப் போல கட்டப்பட்டிருந்தது இந்த ராஜகோபுரம்.

""1988-ஆம் ஆண்டிலேயே இந்த ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உடனே கவர்மெண்ட் ஆபீசருங்க வந்தாங்க, பேசினாங்க. டெண்டர் விட்டாங்க. வெடிப்புல சிமெண்ட் பாலையும், மணலையும் கலந்து ஊத்துனாங்க. "விரிசலை 15 லட்சம் செலவழித்து அடைத்து விட்டோம்... இனிமேல் உலகம் அழியும் வரை இந்த ராஜகோபுரத்துக்கு அழிவே இல்லை'னு சொல்லிட்டு போயிட்டாங்க. சிவன் சொத்தை நாசம் பண்ணுன அந்த ஊழல் அதிகாரிகளை சிவபெருமான் தண்டிக்க மாட்டான்... சி.பி.ஐ.தான் விசாரித்து தண்டிக்கணும்... 1988-ல் 15 லட்சம்னா கொஞ்சமா?''

காளத்தி நாதர் கோயில் அர்ச்சகர் நம்மிடம் சொன்ன தகவல் இது.

""என்ன சாமி... நீங்களே உங்க கோயில் நிர்வாகம் பற்றி இவ்வளவு கேவலமா குற்றம் சாட்டுறீங்க?'' என்றோம்.

""ஏங்க... அந்த தரித்திரம் பிடித்த ராஜகோபுரத் துக்கும் எங்க கோயிலுக்கும் என்னங்க தொடர்பு? எங்க கண்ட்ரோல்ல அது இருந்ததே இல்லை. இந்தக் கோயிலை மகாராஜா கட்டும்போதே பயங்கர ஊழலாம். அப்புறம்... அந்த இடத்தில கோபுரம் கட்டப்பிடாதுனு "சாமி' சொன்னதாம். மீறித்தான் ராசா கட்டினாராம். அதனால, அந்த இடிஞ்ச தரித்திரம் பிடித்த கோபுரம் வழியா "காளத்தி நாதர்' போக மறுத்துவிட்டாராம். உற்சவ காலத்தில ஒருநாள் கூட அந்த கோபுர வழியா சாமி ரதம் போனதே இல்லை. அம்மன் விக்கிரகத்தை மட்டும்தான் அந்த வழியா தூக்கிப் போவாங்க. விஷயம் தெரிஞ்ச, வழக்கமா வர்ற பக்தர்கள் கூட அந்த கோபுரம் வழியா வரமாட்டாங்க. அது நொறுங்கினது நல்லதுதான்!'' -உதடுகளை நீட்டிவிட்டுப் போனார் அர்ச்சகர்.

ராஜகோபுரம் இடிந்து நொ றுங்கியதற்காக, கோயிலுக்குள் கும்பிட்டுக் கொண்டிருந்த பல நூறு பக்தர்களில் யாரும் வேத னைப்பட்டதாகத் தெரியவில்லை.

""ரொம்ப அழகா இருந்தது... இடிஞ்சு போச்சு... அதை விட அழகா ஒரு கோபுரத்தை அரசாங்கம் கட்டித் தரட்டும்!'' என்ற பக்தரொருவர் ""இது பகவான் சாபம் கோபம்னு நெனைக்காதீங்க. ஒரு ஆடு, மாடு கூட சாகாமப் பார்த்துக் கொண்டார் பகவான்!'' என்று பெருமையோடு சொல்லிவிட்டுப் போனார்.

இடிந்த கோபுரப் பாது காப்பில் நின்ற போலீசாரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியும், எஸ்.பி.ராமகிருஷ்ணனும் உடனே வந்துட்டாங்க. பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பக்காவாக்கிட்டாங்க. போனவாரம் சென்னை ஐ.ஐ.டி. இன்ஜினியர்கள் வந்து பார்த்துச் சொன்னதுமே, ராஜகோபுரத்தைச் சுற்றி 30 அடி தூரத்திற்கு பென்சிங் போட்டு யாரும் நுழையாம தடுத்துவிட்டோம். அக்கம் பக்க வீடுகளை, கடைகளை மூடச் சொல்லி பாதுகாப்பான தூரத்திற்கு அனுப்பிவிட்டோம்!'' காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டை விரிவாகவே சொன்னார் அவர்.

காளஹஸ்தியில் அதிக கவலையோ வேதனையோ தென் படவில்லை. ஆனால் இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பதி யில்...?

""ஏழுமலையானே...! காளஹஸ்தி கோயில் இடிஞ்சு போச்சாம்... இது எதுக்கு அறிகுறி? ஆந்திராவுக்கு ஆபத்து ஒண்ணும் வராம காப்பாத்து கோவிந்தா!'' என்றுதான் பலரும் வேண்டியிருக்கிறார்கள்.

பெண்கள் தொடர்பு! ஆள் கடத்தல்!



திருச்சி ஐ.ஜி. வன்னியப் பெருமாளை சந்தித்து புகாரை நீட்டியபடி கலங்கிய கண்களோடு சொன்னார் கல்யாண சுந்தரம். ""சார்... உங்க டிபார்ட்மெண்ட் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் என் மனைவியைக் கடத்திச் சென்று மறைத்து வைத்துக் கொண்டு என்னையும் மிரட்டுகிறார் சார்!''.

அரியலூர் எஸ்.பி. நஜ்மல்கோடா தலைமை யில் போலீஸ் விசாரணை தொடங்குமுன் நமது விசாரணை தொடங்கியது.

இன்ஸ் கோவிந்தராஜை, காவல்துறை அதி காரிகளும், திருச்சி, புதுக்கோட்டை அரசியல்வாதி களும் "மாவட்டம் கோவிந்தராஜ்' என்றுதான் அழைக்கிறார்கள். போலீஸ் வேலைக்கு தேர்வாகு முன்பு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் புதுக் கோட்டை மா.செ.யாக இருந்தவர் கோவிந்தராஜ். எம்.ஜி.ஆர். இறந்தபோது, தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு அழுதவர்.

திருச்சி எம்.பி. குமாரின் அக்காவைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருச்சி காஜாமலை கிரசெண்ட் தெருவில் பிரமாண்டமான பங்களா கட்டியிருக்கிறார் இன்ஸ் கோவிந்தராஜ். அந் தப் பங்களா மாடியில்தான் எம்.பி. குடியிருக்கிறார்.

""திருச்சி மா.செ. பதவிக்கு குறிவச்சிருக் கிறார். கிடைத்தால் இன்ஸ்பெக்டர் வேலையை ராஜினாமா செய்துவிடுவார். ரெண்டு மூணு முறை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுரேஷ் குமார் முயற்சி செய்தும் கோவிந்தராஜ் எஸ்கேப் ஆகிவிட்டார்!'' என் கிறார் சக இன்ஸ் ஒருவர்.

பிரச்சினை என்று பெண்கள் புகார் கொடுக்கவந்தால்... தூண்டில் போட ஆரம்பித்து விடுவார் இவர் என்று சில சம்பவங்களை சொன்னார் கள் பாடாலூர் ஏரியா காக்கிகள் சிலரே. அந்தச் சம்பவங்களில் சில...

திருச்சி காவல்துறை அமைச்சுப் பணி யாளராக இருந்து ஓய்வு பெற்ற அசோக் சீனி வாசன் என்பவரின், மணமான மகள் பிரியா, புகார் கொடுப்பதற்காக இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிடம் வந்தார். மகளிர் காவல ரான இந்தப் பிரியாவிற்காக அக்கறை எடுத் துக் கொண்ட இன்ஸ்பெக்டர்... பிரியாவுக்கும் அவர் கணவருக்கும் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தி, அவர் கணவரை மனநோயாளி யாக்கி தெருவில் அலையவிட்டு விட்டு, பிரியா வுக்கு கே.கே.நகரில் ஒரு வீடு எடுத்துக் கொடுத் தார். இதைக் கேள்விப்பட்ட இன்ஸ்பெக்ட ரின் மனைவி, மகளிர் போலீஸ் பிரியாவின் வீட்டுக்குப் போய் கட்டிப் புரண்டார்.

ஐயப்பா நகரில் ஒரு ஹவுஸ் ஓனரான பெண்மணி தன்னிடம் கடையை கிரயம் வாங்கிய எஸ்.டி.டி.பூத் ராஜலட்சுமி என்ற பெண்மணி, பணம் தராமல் மோசடி செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தாராம். குற்றம் சாட்டப்பட்ட ராஜலட்சுமியும், இந்த ராஜலட்சுமி தங்கையும் இன்ஸ்பெக்டர் வாங்கிக் கொடுத்த தென்றல் நகர் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ஏரியாவில் இவர் இன்ஸ்பெக்டராக இருந்தபோதுதான் பா.ஜ.க. சந்திரசேகர் மர்மமாக இறந்து போயிருக்கிறார். பா.ஜ.க. பிரமுகரின் அன்பிற்கினியவராக இருந்த மஞ்சுர வள்ளி மாமியின் பெய ரில்தான் தனது ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தியிருக்கிறார் இன்ஸ். இப்படி பல பல சம்பவங்களைத் தாராளமாக இன்ஸ்பெக்டர் மீது சுமத்து கிறார்கள், இதே காக்கி வட்டாரத்தினர். கடைசியாகத்தான், அரியலூர் மாவட்டம் செந்துறை கல்யாண சுந்தரத்தின் புகார்.

""கோவிந்தராஜ் பாடாலூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது ஒரு புகார் கொடுப்பதற்காக நானும், என் மனைவி இளவரசியும் என் அக்காவும் போனோம். அந்தப் பிரச்சினையை முடித்துத் தரு கிறேன் என்று அடிக்கடி வீட்டுக்கு வந்தார் இன்ஸ்பெக்டர்.

நான் வேலைக்காக வெளிநாடு சென்றதும், என் வீட்டுக்கு அடிக்கடி வருவதும், என் மனைவியோடு செல் ஃபோனில் பேசுவதுமாக இருந்திருக்கிறார். திடீர் என எனக்கு போன் செய்த என் மனைவி, இன்ஸ்பெக்டர் டார்ச்சர் செய்கிறார் உடனே வாங்க என்று போன் செய்தவள், நான் வருவதற்குள் என் மனைவியையும் குழந்தையையும் கடத்திக் கொண்டு போய்விட்டார். என் மனைவிக்கு போன் செய்தேன். அம்மு என்கிற நந்தினிதான் என் மனைவியின் செல்ஃபோனில் என்னிடம் பேசினார். திருச்சி கருமண்டபத் தில் இருப்பதாகச் சொன்னார் நந்தினி. நான் இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு கெஞ்சி னேன். "நந்தினி வீட்டில் இருக்கிறாள் உன் மனைவி... போய் கூட்டிப் போ' என்றார். முக வரியை தெரிந்து கொண்டு அங்கே போனேன். அந்த வீட்டுக்குள் இருந்து வந்த என் காதல் மனைவி இளவரசி, எங்கள் குழந்தை அருந்ததியை என்னிடம் கொடுத்துவிட்டு, "என்னால் இப்போது உங்களோடு வரமுடியாது. என் சூழ்நிலை அப்படி' என்று அழுது கொண்டு சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள். பின்பக்கமாக எங்கேயோ அவளைக் கடத்தி விட்டார்கள். மீண்டும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் என்னை மிரட்டுகிறார்!'' நடந்ததை எல்லாம் கோர்வையாக சொன்னார் கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம் புகார் கொடுத்தது தெரிந்ததும் ""என் வீட்டு வேலைக்காரி இளவரசி, கணவரிடம் செல்வதாகக் கூறி விட்டுப் போனாள். அங்கே வரவில்லை என்கிறார் கணவர். அவளை கண்டுபிடித்துக் கொடுக்கவும்!'' என்று கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் நந்தினி. மீண்டும் புகார் கொடுப்பதற்காக அரியலூர் எஸ்.பி.நஜ்மல்கோடா அலுவலகம் சென்ற கல்யாண சுந்தரத்தை ஒரு பகல் முழுக்க ஒரு அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.

இதற்கிடையில் 4 போலீசார், 6 வக்கீல்கள், ஒரு காரில், இளவரசியை எஸ்.பி.அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்கள். வேகமாக இறக்கப்பட்ட இளவரசி ""என் கணவர் என்னை சந்தேகப் பட்டு அடித்தார். அவரோடு வாழப்பிடிக்காமல் நான் போய்விட்டேன்'' என்று எஸ்.பி.யிடம் வாக்குமூலம் கொடுத்துவிட்டு வந்த காரில் ஏறிப் பறந்து விட்டார்- போலீஸ் + வக்கீல்களுடன்.

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை தொடர்பு கொண்டு, அவர் மீது கூறப்படும் சம்பவங்களையும், இளவரசி பிரச்சினையையும் கேட்டோம்.

""யாரோ திட்டமிட்டு பரப்புகிறார்கள். இளவரசி என்ற அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது அத்தனையும் அபாண்டம்!'' என்றார். மீண்டும் தொடர்பு கொண்டோம். ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அரியலூர் மாவட்டம் கீழ்பளூர் காவல் நிலையத்திற்கு போன் செய்தோம்.

""இன்ஸ்பெக்டர் 20 நாட்களாக விடுமுறையில் இருக்கிறார்!'' என்றார்கள்.

அன்புமணிக்கு ராஜ்யசபா! எதிர்க்கும் சோனியா!


""ஹலோ தலைவரே... .... உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் சந்தோஷ் குமார்ங்கிற சென்னைக்காரர் ஏறி, தமிழ் வாழ்கன்னு உரக்கச் சொல்லியிருக்காரு. எவரெஸ்ட்டில் ஏறிய முதல் தமிழர் இவர்தான். உச்சிக்குப்போனாலும் தாய்மொழியை மறக்காத அவரோட மன உணர்வு பாராட்டுக்குரியது.''

""சத்தமில்லாத சாதனைதான்... பரபரப்பான அரசியலுக்கு நடுவே இதையும் மறக்காம ஞாபகப் படுத்தினியே... நல்ல விஷயம். அ.தி.மு.க. செயற் குழுவில் என்ன நடந்தது?''





""முத்துசாமி விவகாரம் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார் ஜெ. சிங்கம் மாதிரி இருந்த நீங்க இப்படி தாழ்ந்த குரலில் பேசுறீங்களேன்னு கோகுல இந்திரா சொல்லியிருக்கிறார். மதுசூதனன் பேசுறப்ப, "பொளந்தா எவனும் போகமாட்டான்'னு சொன்னார். அதற்கு ஜெ, முன்னெல்லாம் கட்சிக்கட்டுப்பாடுங் கிற பேரில் அதிரடியா நடவடிக்கை எடுப்பேன். இப்ப எனக்கு 62 வயசாயிடிச்சி. பக்குவம் வந்திடிச்சி. அத னால ஒருவரையும் கட்சியிலிருந்து இழக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்னு தன்னோட வழக்க மான தொனியை மாற்றிப் பேச, கட்சி நிர்வாகிகளுக்கு பலத்த ஆச்சரியம்.''

""அ.தி.மு.க. அணிக்கு கிடைக்கும் 2 ராஜ்யசபா சீட்டில் ஒன்று, கூட் டணிக் கட்சிக்கு கிடைக் கும்னு எதிர்பார்க்கப் பட்டதால் வைகோவும் தா.பா.வும் ரொம்ப நம்பிக் கையோடு இருந்தாங்க... ஆனா, இரண்டுமே அ.தி.மு.க.வுக்குத்தான்னு சொல்லி, கூட்டணிக்கட்சி களின் ஆதரவையும் ஜெ. வாங்கிட்டாரே?''

""ராஜ்யசபாவில் ஒரு கட்சிக்கு, 5 எம்.பி.க்கள் இருந் தால்தான் அதை ஒரு குழுவா அங்கீகரிப்பாங்க. கட்சி சார்பில் பேச அதிக நேரமும் கிடைக்கும். தற்போதைய நிலையில் அ.தி. மு.க.வுக்கு 3 எம்.பிதான் மிஞ்சு வாங்க. கூட்டணிக்கு கிடைக்கக் கூடிய 2 சீட்டும் அ.தி.மு.க.வுக்கே கிடைத்தால்தான் ராஜ்யசபாவில் குழுவா செயல்படமுடியும். அதனாலதான், இப்ப விட்டுக்கொடுங்க, மேலவை எலெக்ஷனில் பார்த்துக்கலாம்னு கூட்டணித் தலைவர்களிடம் ஜெ. சொல்லியிருக்கிறார்.''

""அவங்களுக்கு மனப்பூர்வ சம்மதமா?''

""ஆதரவு கொடுத்தாலும் வருத்தம் இருக் கத்தான் செய்யுது. கார்டனுக்கு வரணும்னு வைகோவை ஜெ.வே தொடர்புகொண்டு அழைத்திருக்கிறார். சி.பி.எம். மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணனை செங்கோட்டை யன் நேரில் போய் அழைத்திருக் கிறார். ஆனா, சி.பி.ஐ.க்கு முறைப் படியான அழைப்பு எதுவும் வரலையாம். ராஜ்யசபா சீட் வரும்னு எதிர்பார்த்திருந்த தா.பா, அழைப்புகூட வரலையேங்கிற கோபத்தில், கார்டனுக்கு அவர் போகாமல் மகேந்திரனை அனுப்பி வச்சிட்டார்.''

""கூட்டணி கட்சி களின் ஆதரவுடன் 2 சீட்டும் அ.தி.மு.க. வுக்குத்தான்ங்கிற நிலையில், யார் யாரை ஜெ. அறிவிக்கப் போறாராம்?''

""காலியாகிற இடங்களில் மெஜாரிட்டி சமு தாயங்களைச் சேர்ந் தவங்க இருக்காங்க. இப்ப கட்சிக்குள்ளே முத்துசாமி விவகாரம் பெரிதாகியிருப்பதால, கவுண் டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு சீட் கொடுத்து சரிபண்ணப் போறாங்களாம். இன்னொரு சீட் முக்குலத் தோரைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷுக்காம்.''

""காங்கிரசில் ஒற்றை சீட்டுக்கு நடக்கும் யுத்தம் இன்னும் ஓயலையாமே?''

""ரேஸில் ஒருத்தரை யொருத்தர் முந்துறாங்க. சோனியாவை சந்தித்து வந்ததிலிருந்து இளங் கோவன் ரொம்ப தெம்பா இருந்தார். காங்கிரசில் ராஜ்யசபா எம்.பி. பதவி நிறைவுபெறும் சுதர்சன நாச்சியப்பன், முக்குலத்தோர்ங்கிற தால அதே சமுதாயத்தைச் சேர்ந்த இன்னொ ருத்தருக்கு சீட் தரணும்ங்கிறது ப.சி.யோட வலியுறுத்தல். அவர், திருநாவுக்கரசரை சிபா ரிசு செய்றாராம். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், பதவி முடிவடையும் சுதர்சன நாச்சியப்பனும் எம்.பி. சீட்டைப் பெற்றுவிட ணும்னு முயற்சிக்கிறாங்க. இளங்கோவனும் தங்கபாலுவும் கட்சியின் முன்னாள்-இந்நாள் தலைவர்கள். திருநாவுக்கரசர் கட்சிக்குப் புதியவர். சுதர் சன நாச்சியப்பனுக்கே மறுபடியும் தரலாமான்னு காங்கிரஸ் மேலிடத்தில் டிஸ்கஷன் நடக்குதாம்.''

""தி.மு.க.வில் யார் யாருக்கு சான்ஸ்?''

""நாம போனமுறை சொன்ன மாதிரி ஸ்டாலின் சிபாரிசில் செல்வகணபதி, அழகிரி சிபாரிசில் கே.பி.ராமலிங்கம், சீனியர்ங்கிற முறையில் காஞ்சனா கமலநாதன் மூவரும்தான் ரேஸில் இருந்தவங்க. மூவருமே மேற்கு மாவட்டக்காரர்கள்ங்கிறதால, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருத்தரை எம்.பி. யாக்கணும்ங்கிற எண்ணம் கட்சிக்குள் வலுப்பட்டிருக்குது. அதோடு தி.மு.க.வில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ராஜ்யசபாவுக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகிவிட்ட தால், தென்மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்து தி.மு.க பிரமுகர் ஒருவரை எம்.பி.யாக்குவது பற்றியும் தலைமை ஆலோசித்துக் கொண்டிருக்குதுங்க தலைவரே..''

""அப்படின்னா பா.ம.க.வுக்கு?''

""தன் அன்புமகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கணும்ங்கிறதுக்காக தி.மு.க மீதான கடும் விமர்சனங்களையெல்லாம் ராமதாஸ் குறைச்சிட்டார். தி.மு.க அரசை பாராட்டிப் பேசும் பா.ம.க.வின் இரண்டாம்மட்ட தலைவர்கள் அடிக்கடி கலைஞரையும் சந்திக்கி றாங்க. அ.தி.மு.க 2 இடத்திலுமே போட்டியிடும் நிலையில், தி.மு.க.வில் சான்ஸ் கிடைத்தால் மட்டுமே உண்டு என்கிற நிலைமையில் பா.ம.க இருக்குது. கலைஞர் எப்படியும் சீட் தருவார்ங்கிற நம்பிக்கை பா.ம.க.வுக்கு இருந்தாலும், காங்கிரஸ் தலைமையின் எண்ணத்தை தெரிந்துகொண்டு முடிவெடுக்கலாம்ங்கிறது தான் தி.மு.க.வோட நிலை.''

""போன முறையே நம்ம டெல்லி சோர்ஸ் மூலம் இது பற்றி பேசியிருந்தோமே.''

""சோனியாவிடம் தி.மு.க. தரப்பு இந்த விஷயத்தைக் கொண்டு போனதும், டெல்லியில் காங்கிரஸ் "கோர்' கமிட்டி கூட்டப்பட்டிருக் குது. அதில் கலந்துகொண்ட காங் கிரஸ் தலைவர்கள், "2009 எம்.பி. தேர்தலில் 7 சீட் கேட்ட பா.ம.க.வுக்கு கலைஞர் 6 சீட் உறுதிசெய்தார். நேரில் வந்து 1 சீட் பற்றி பேசலாம்னு சொன்னப்ப, அறிவிச்சாதான் வரு வோம்னு பா.ம.க. சொல்லிடிச்சி. நம்ம கூட்டணியில் 5 வருசம் பா.ம.க. இருந்ததால, அதை இழக்க வேணாம்ங்கிற எண்ணத்தில், காங் கிரசுக்கு கலைஞர் ஒதுக்குற சீட்டில் ஒன்றைத் தர்றோம்னு சொல்லியும் அவங்க கடைசிநேரம் வரைக்கும் மந்திரிபதவியை அனுபவிச்சிட்டு கூட்டணிமாறி போயிட்டாங்க. இப்ப வேற வழியில்லாமல் வர்றாங்க. அதோடு, இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயுடன் சேர்ந்து ஊழல் வழக்கில் கைதான ஜிதேந்தர் சிங் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரிச்சிக்கிட்டிருக்குது. இந்த நேரத்தில் எதற்கு ராஜ்யசபா சீட். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வந்தால் கலைஞர் சீட் தரட்டும். அதற்காக இப்பவே ராஜ்யசபா தரணும்னு பா.ம.க. நிபந்தனை போட்டு அதை ஏற்றுக்கொண்டால், நம்ம கூட்டணி பலவீனமா இருக்கிறதா ஆயிடும்'னு சொல்லியிருக்காங்க. சோனியாவும் ஆமோதிச்சிருக்கிறார். இதை யடுத்து, பா.ம.க.வுக்கு சீட் தருவதை சோனியா விரும்பலைங் கிற தகவல் தி.மு.க. தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதா டெல்லி வட்டாரத்தினர் சொல்றாங்க.''

""செல்வகணபதிக்கு எம்.பி. சீட், முத்துசாமிக்கு தி.மு.க. வில் இடம்னு அ.தி.மு.க. பக்கம் இருப்பவங்களை ஈர்க்கும் வகையில் ஆளுங்கட்சி விரித்திருக்கும் வலை ஸ்ட்ராங்கா இருக்குதே?''

""தலைவரே.. .. முத்துசாமியை தி.மு.க பக்கம் கொண்டு வரும் அசைன்மென்ட்டை முனைப்பா செய்தவர் துணை முதல்வர் ஸ்டாலின்தான். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி அ.தி.மு.க.வில் ஆக்டிவ்வா இருக்கும் பிரமுகர்களை மொத்த மா தி.மு.க. பக்கம் கொண்டு வந்திடணும்ங்கிறதுதான் அவ ரோட டார்கெட்டாம். கே.கே.எஸ்.எஸ்.ஆர், எ.வ.வேலு, கருப்ப சாமிபாண்டியன், செல்வகணபதின்னு அ.தி.மு.க.விலிருந்து வந்தவங்களெல்லாம் தன்னிடம் காட்டும் விசுவாசத்தைப் பார்த்துட்டுத்தான் ஸ்டாலின் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். முத்துசாமியைத் தொடர்ந்து கரூர் சின்னசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நெல்லை பாப்புலர் முத்தையான்னு அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் தி.மு.க.வோடு பேசிக்கிட்டிருக்காங்களாம்.''

""ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடகா ஹைகோர்ட்டில் மறுபடியும் தள்ளிப்போயிட்டதால நொந்து போன நித்யானந்தா ஜெயிலிலே புலம்பிக்கிட்டிருக்காராமே?''

""ஆசிரமத்திலிருப்பவங்களை ஜெயிலுக்கு வரச்சொல்லி சந்தித்து, "என்னதான் நடந்துக்கிட்டிருக்குது. என்னை உள்ளே வச்சி வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கீங்களா?'ன்னு அழுதுகிட்டே புலம்பியிருக்காரு நித்யானந்தா. எந்தக் குற்றச்சாட்டும் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்த நிலையில், கேஸை விசாரிக்கும் கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு இன்னும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதால அதையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்காங்களாம். நித்யானந்தாவுக்கு பெயில் கிடைக்குமா... கிடைக்காதாங்கிற சந்தேகம் தொடர்ந்துகிட்டேதான் இருக்குது. இதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.''

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்! முத்துசாமியின் மனம் திறந்த மடல்!


அ.தி.மு.க.வில் தொடர்ந்து குமுறல்கள் வெடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் மேற்கு மதுரை எம்.எல்.ஏ.வாக இருந்த சண்முகம் தொடங்கி, மாஜி மந்திரிகள் செல்வ கணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோயில்பட்டி ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் என பலரும் அ.தி.மு.க.வுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தி.மு.க.வில் ஐக்கியமானபடியே இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில்... கட்சியின் அமைப்புச் செயலாளரும் மாஜி மந்திரியுமான முத்துசாமியும் இடம்பிடிக்கப்போகிறார். கலைஞர் தலைமையில் மாஜி எம்.பி. கரூர் வி.கே.சின்னசாமி, மாஜி எம்.எல்.ஏ.க்கள் அந்தியூர் மாதையன், ஏ.டி.சரஸ்வதி, பூந்துறை பால கிருஷ்ணன், ஈரோடு மாணிக்கம் மற்றும் ஒ.செ.க்கள், ந.செ.க்கள், கி.செ.க்கள் உள்ளிட்ட பெரும்படையோடு தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார்.

புதன்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத் துக்கு வந்த ஜெ., ""முத்துசாமிக்கு என்ன பிரச்சினை, என்ன குறை என்பது எனக்குத் தெரியவில்லை. அவருக்கு என்ன குறை உள்ளது என்பதை அவர் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்தித்துப் பேசலாம். பேச்சு வார்த்தையின்போது குறைகளைத் தீர்த்து கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை ஒன்றரை கோடி உறுப்பினர்களில் நான் யாரையும் இழக்க விரும்பவில்லை'' என்று இறங்கி வந்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.

முத்துசாமியின் இந்த திடீர் முடிவின் பின்னணி என்ன? இது குறித்து முத்துசாமியின் ஆதரவாளர்களிடம் நாம் கேட்டபோது ""கடந்த 33 வருடங்களாக அண்ணன் அ.தி.மு.க.வுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். 91-ல் அண்ணனுக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெ., செங்கோட்டையனின் பேச்சுக்களை கேட்டு... அண்ணனை ஓரம்கட்ட ஆரம்பித்தார். அதே சமயம் செங்கோட்டையனை ஓரம்கட்டத் துடிக்கும் சசிகலா, முத்துசாமியை முழுமையாக ஆதரித்துவருகிறார். எனினும் ஜெ.வோ செங்ஸுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறார். அவர் பேச்சைக்கேட்டுக்கொண்டு... 2001-லும் 2006-லும் சீட் கொடுக்காமல் அண்ணனை ஓரம்கட்டினார். இப்படி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால்.... தற்போது ஒரு நல்ல முடிவை நோக்கி நகரத் தொடங்கி விட்டார். அதாவது தி.மு.க.வில்தான் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்''’ என்கிறார்கள் உற்சாகமாக. பிறகு?

“கடந்த ஒரு மாதமாகவே ஐசரி கணேஷ்தான் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து முத்துசாமி தனது மகன் ராஜா மூலம்... துணை முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதியிடம் தனது விருப்பத்தைக் கொண்டு போனார். கட்சியில் இணைத்துக்கொள்ள ஸ்டாலின் கிரீன் சிக்னல் காட்டியதோடு... ஒரு ஓட்டலில் முத்துசாமி யை நேரிலும் சந்தித்தார். இருவரும் சில நிமிடங்கள் மனம்விட்டுப் பேசினார்கள். பின்னர்... முத்துசாமியிடம்... "அ.தி.மு.க.வின் சீனியர் லீடர் நீங்கள். உங்கள் முடிவு மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்குரிய மரியாதை தி.மு.க.வில் எப்போதும் கிடைக்கும்' என ஸ்டாலின் சொல்ல ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார் முத்துசாமி’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 26-ந் தேதி மாலை ஒரு முடிவோடு கிங் ஃபிஷர் ஃபிளைட்டைப் பிடித்து சென்னை வந்தார் முத்துசாமி.

தன்னை ஏர்ப்போர்ட்டிலேயே மடக்கிய நிருபர் களிடம் ""நான் என் மனக்குறைகளை ஒரு கடிதமாக ஜெ.’வுக்கு எழுத இருக்கிறேன். இதற்கு ஜெ.வின் பதில் என்ன என்பதைப் பொறுத்தே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’ என்று சின்னதாக சஸ்பென்ஸ் வைத்துவிட்டு தனது செனாய்நகர் வீட்டிற்கு விரைந்தார். இந்த நிலையில் சென்னைக்கு கிளம்பும் முன்பாகவே முத்துசாமிக்கு தொலைபேசியில் வந்த ஜெ., நேரில் பேசலாம் வாங்க என அழைத்தார். அதோடு... முத்துசாமியை சமாதானப்படுத்த சசியின் உறவினர்களான ராவணன், கலியபெருமாள் போன்றோர் தொடர் முயற்சி எடுத்தும் அவர் பிடிகொடுக்கவில்லை.





ஜெ.வுக்கு முத்துசாமி எழுதியிருக்கும் 14 பக்க கடிதத்தின் சாராம்சம் இதுதான்...

அன்புள்ள பொதுச்செயலாளர் அம்மா அவர்களுக்கு,

கழக அமைப்பு செயலாளர் முத்துசாமி எழுதிக் கொண்டது. உங்களை பார்த்தால் எங்களைப் போன்றவர் களுக்கு பேச்சு வராது. அதனால்தான் இந்த கடிதம்.

நான் 38 வருடகால அ.தி.மு.க.காரன். அப்படிப்பட்ட என்னை 96-ல் உண்மையறியாமல் கட்சியை விட்டு நீக்கினீர்கள். அப்போது செங்கோட்டையன், கண்ணப்பன், ரகுபதி மூவரையும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று பத்திரிகைகளுக்கு நான் தகவல் கொடுத்ததாக செங்கோட்டையன் உங்களிடம் சொன்னதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்தீர்கள். ஆனால், நான் அப்படி சொல்லவேயில்லை. அப்போது நான் அம்மா வீட்டில்தான் கட்சிக்காக ஒரு அறிக்கை தயார் செய்துகொண்டிருந்தேன். நீங்கள் என் னைக் கூப்பிட்டீர்கள். ""என்ன மிஸ்டர் முத்துசாமி, என் வீட்டில் இருந்துகொண்டே பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பீர்களா?'' என்று கேட்டீர்கள். அது தவறான தகவல் என்பதையும் நான் எந்தச் செய்தியையும் கொடுக்கவில்லை என்றும் சொன்னேன். என்னையும் என் பதிலையும் உதாசீனப்படுத்தினீர்கள். நான் வருத்தத் தோடு வந்துவிட்டேன். அன்றே நடந்த செயற்குழுவில் என்னைக் கட்சியை விட்டு நீக்கினீர்கள்.

அதற்குப் பிறகு நான் கட்சியில் சேர்ந்தபோதும், என்னை ஜானகி அணி என்று புண்படுத்தும் போக்கு தொடர்ந்தது. ஆனாலும் கட்சிக்காக நான் தொடர்ந்து பாடுபட்டேன். கட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டேன்.

சமீபத்தில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் அவர்களுக்கு நிதியளிக்க நீங்கள் ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு வந்திருந்தீர்கள். அந்த மாவட்டம் எனது பொறுப்பின் கீழ் உள்ள மாவட்டம். அந்த மாவட்டத்திற்கு தாங்கள் வருகிறீர்கள் என ஆர்வமுடன் வந்த என்னை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

நான் நான்குமுறை கையெடுத்து கும்பிட்டேன். நீங்கள் அதை ஏற்கவில்லை.

எம்.ஜி.ஆர். கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு ஊரில் இரண்டு தலை வர்களுக்கிடையே போட்டி என்றால் இருவரையும் தட்டிக் கொடுத்து அணைத்து கொண்டு போய் இருவருக்கும் தனது வீட்டில் சாப்பாடு போட்டு சமாதானத்துடன் கூடிய போட்டியை வளர்ப்பார். நீங்கள் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்கிறீர்கள். இதுதான் அவருக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமணத்தில் பேசிய நீங்கள் மக்கள் எனக்கு ஓட்டு போட்டார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் துரோகம் செய்து விட்டார்கள் என்று பேசினீர்கள். அ.தி.மு.க. தொண்டன் துரோகம் செய்திருந்தால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் மெகா கூட்டணியை எதிர்த்து இத்தனை இடங்கள் நாம் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

எம்.ஜி.ஆர். என்ற மந்திர சொல்லில் இன்றும் மயங்கிக் கிடக்கும் அ.தி.மு.க. தொண்டனை அவரை மறக்க சொல்வது போல உங்கள் அணுகுமுறை உள்ளது.

""1984-லேயே அ.தி.மு.க. முடிந்து விட்டது. நான்தான் அதற்கு உயிர் கொடுத்தேன் என்றும் மக்கள் எம்.ஜி.ஆரின் பெயருக்கு ஓட்டு போடவில்லை எனக்குதான் ஓட்டு போடுகிறார்கள்'' என்று கட்சி நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசுகிறீர்கள்.

ஜா., ஜெ. என கட்சி இரண்டாக பிரிந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு தேர்தலில் தோற்றுப் போன சமயம். அன்று இரண்டு அணிகளை ஒன்று சேர்க்க என்னிடம் நீங்கள் பேசியபோது, எம்.ஜி.ஆரின் புகழையும் இரட்டை இலையையும் வாழ வைப்பேன் என உறுதியளித்தீர்கள்.

உங்கள் உறுதிமொழியை உண்மை என்று நம்பிய நான் ஜானகி அம்மையாரிடம் போய் பேசினேன். நான் அன்று உங்களுக்கு ஆதரவாக பேசியதை இன்று அமைச்சர்களாக உள்ள எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் போன்றோரெல்லாம் எதிர்த்தார்கள்.

அப்பொழுது ஜானகி அம்மையாரிடம் எம்.ஜி.ஆரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் இரட்டை இலை சின்னம் வேண்டும். தலைவியாக ஜெ. ஆகிய நீங்கள் வர வேண்டு மென உறுதி தந்தேன். எனது இந்த முயற்சிகளை பாராட்டி 91-ல் கழக அரசு அமைத்தபோது அமைச்சராக்கினீர்கள். நான் ஜானகி அம்மையாருக்கு கொடுத்த எம்.ஜி.ஆர். புகழ் நிலைக்கும், அதை தூக்கி பிடிப்பீர்கள் என்கிற வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள். 15 வருடமாக எம்.எல்.ஏ சீட், எம்.பி. சீட் வேண்டுமென்று கேட்கவில்லை. எனக்கு எந்த சீட்டும் தராவிட் டாலும் கட்சி வேலையை செய்துவந்திருக்கிறேன். 38 வருட கால அரசியலில் கடந்த நான்கைந்து நாட்களில் நான் அழுதது போல எந்தச் சூழ்நிலையிலும் அழுதது கிடையாது. அந்தளவுக்கு மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வின் பெயர் கெட்டுவிடக்கூடாது என நினைக்கிறேன். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் -என்ற ரீதியில் மனம் திறந்து தன் வேதனைகளை கடிதத்தில் கொட்டியிருக்கிறார் முத்துசாமி.

தொண்டர்களும் கட்சிப் பிரமுகர்களும் எளிதில் சந்திக்கமுடியாதபடி தன்னைச் சுற்றி இரும்புக்கோட்டையை அமைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் ஜெ. இந்த நிலையை ஜெ’ மாற்றிக்கொண்டு தொண்டர்களிடம் அவர் வராவிட்டால்... கலகலத்து வரும் அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதே கஷ்டம் என்கிறார்கள் கவலையில் இருக்கும் ர.ர.க்கள்.


"இழப்பு இல்லை' -செங்கோட்டையன்!



செங்கோட்டையனுக்கு எதிராக முத்துசாமிக்கு ஆதரவாக இருந்தவர் சசிகலா. இதனால் முத்துசாமி தனது கடிதத்தில் தன்னை கார்னர் பண்ணலாம் என கவலையடைந்திருக்கும் செங்கோட்டையன்... தனது ஆதரவாளர்களிடம் “""இந்த முத்துசாமி கட்சிக்கு துரோகம் பண்ணியதே இல்லையா? திருநாவுக்கரசர் போட்டி அ.தி.மு.க.வை 97-களில் ஆரம்பித்தபோது.. எஸ்.டி.எஸ், கண்ணப்பன், அரங்கநாயகம் போன்றவர் களோடு அந்த முகாமுக்கு ஓடிப்போனவர்தானே இவர். ஜெ.வை எதிர்ப்பதில் தோற்றுப்போய்... மீண்டும் அ.தி.மு.க.விலேயே சரணாகதி அடைந்தவர்தானே முத்துசாமி. அப்படியிருந்தும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று கட்சிதாவத் துடிக்கிறார் முத்துசாமி. இவர் கட்சி மாறுவதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை''’ என்றெல்லாம் மனம் குமைந்துகொண்டிருக்கிறார்.

யுத்தம் 57 -நக்கீரன் கோபால்




shockan.blogspot.com

இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமியின் கேள்வியில்தான் நக்கீரன் மீதான பொய்வழக்குகளுக்கும் விசாரணைகளுக்குமான உள்நோக்கம் என்ன என்பது அடங்கியிருந்தது. தேவாரம் பற்றி நக்கீரனில் வெளிவந்த செய்திக்கும், வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்கு களின் விசாரணைக்கும் என்ன சம்பந்தம்? நக்கீரன் மீதான பொய் வழக்குகளின் சூத்திர தாரிகளில் தேவாரம் முக்கியமானவர் என்பதா லும் அவருடைய இன்ஸ்ட்ரக்ஷன் படி செயல்படு கின்ற போலீஸ் டீம்தான் இந்த விசாரணையை நடத்துகிறது என்பதைத்தான் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று குறிப்பிட்டேன்.

""குழந்தை அது, இதுன்னு போட்டு தேவாரம் சாரை கேவலப்படுத்திட்டீங்களே!'' என்றார் லட்சுமணசாமி. விசாரணையின் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை அவரது வார்த்தைகள் மீண்டும் உறுதி செய்தன. ""அந்த செய்திக்குப் பழி வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விசாரணை நாடகமா?'' என்றேன்.

லட்சுமணசாமி குறிப்பிட்டது, நக்கீரனில் வெளியான ஓர் ஆஸ்திரேலியப் பெண்ணின் வாக்குமூலம்தான். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண். ""தனது குழந்தைகளுக்கு தேவாரம்தான் தகப்பன்'' என்று அவர் தெரிவித்ததை நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என தேவாரம் மறுத்தார். இது பொய்க்குற்றச் சாட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் குழந்தைகளின் பர்த் சர்டிபிகேட்டில் தேவாரம்தான் தந்தை பெயரில் இருப்பதை வெளியிட்டிருந்தோம். என்ன நடந்தது என்பதை அந்த ஆஸ்திரேலியப் பெண் கண்ணீர் பொங்க விளக்கியிருந்தார். இந்த உண்மைகளை நக்கீரன் மட்டுமே வெளி யிட்டது என்பதால் தேவாரத்துக்கு அவ்வளவு ஆத்திரம். ""உண்மைகளை மறைப்பதற் காகத்தான், நக்கீரன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. ஆஸ்திரேலியப் பெண் விவ காரத்தில் ஆதாரத்துடன்தான் செய்திகளை வெளியிட்டோம்'' என்பதை இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமியிடம் தெரிவித்தேன். அவருக்கும் உண்மை தெரிந்திருக்கும். அதை மீறி, மேலிடத்து விசுவாசம் என ஒன்று இருக்கிறதே!

ஒரு கையெழுத்தைக் காட்டி ""இது வீரப்பன் கையெழுத்தா'' என்று என்னிடம் கேட்டார்கள். ""தெரியாது'' என்றேன். "எதை யாவது செய்து, என்னை வீரப்பன் வழக்கு களில் தொடர்புபடுத்திவிடவேண்டும்' என்று போலீசார் ரொம்பவே போராடிக்கொண்டிருந் தனர்.

""தீவிரவாதிகளுக்கு உதவக்கூடாது. போலீசுக்கு உதவணும்'' என்று சம்பந்தமில்லா மல் சொன்னார் டி.எஸ்.பி. நாகராஜன்.

""சார்... எங்க உதவியாலதான் பல வழக்குகளில் போலீசாரால் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்குது. பாபர் மசூதி நினைவுநாளையொட்டி 3 ரயில்களில் குண்டு வெடித்ததே... அதில் சம்பந்தப்பட்ட அலி அப்துல்லாவின் போட்டோவை அட்டையில்போட்டு, "இவன்தான் குண்டுவைத்தவன்'னு எழுதியது நக்கீரன்தான். அப்புறம்தான் போலீசுக்கு அடையாளம் தெரிஞ்சுது. திருவாரூரில் அவனை அரெஸ்ட் பண்ணினாங்க. நாங்க ஒரு போதும் தீவிரவாதத்துக்குத் துணை போகமாட்டோம். மக்களுக்குத் துணையா நிற்போம். மக்கள் பக்கம் யார் இருக்காங்களோ அவங்களுக்குத் துணையா இருப்போம்''.





""காட்டுக்குப் போன நக்கீ ரன் டீமுக்கு நிறைய பணத்தை இன்சூரன்ஸ் செய்திருக்கீங்க ளாமே?''

""ஆமா சார்... ராஜ்குமார் மீட்புக்காக காட்டுக்குப் போனப்ப 1 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்தோம். ஆரம்பத்தில் போகவேணாம்னுதான் முடிவு செஞ்சிருந்தோம். கலைஞர், கிருஷ்ணா, சிவாஜி, ரஜினி, சின்னக்குத்தூசி அய்யா இவங்க ளெல்லாம் வலி யுறுத்தியதாலதான் காட்டுக்குப் போக சம்மதித்தோம்''. "இது ரொம்ப பெரிய மிஷன். அதோடு, ரொம்ப ரிஸ்க்கான மிஷன்'. அதனால, தம்பிகளோட குடும் பத்தினருக்கு ஒரு பயம் இருந்தது. என்னை நம்பி வரும் தம்பிகளின் குடும்பத் துக்கு தைரியம் கொடுக்க வேண்டியதும், நம்பிக்கை தர வேண்டியதும் என்னோட பொறுப்பு. அந்தக் குடும்பங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்குது. அதனால்தான் நேஷனல் இன்சூரன்ஸிலும் நியூ இந்தியா இன்சூரன்ஸிலும் பாலிசி போட்டோம். அவ்வளவு பெரிய தொகைக்கு ஓவர் நைட்டில் இன்சூர் பண்ணிக் கொடுத்தாங்க. அந்த நன்றியை நாங்க மறக்கவே முடியாது.

இன்சூரன்ஸ் பாலிசி டாக்குமென்ட்டோடு மறுநாள் காலையில் முதல்வர் கலைஞரைப் போய்ப் பார்த்து, டாக்குமென்ட்டைக் காட்டி னோம். அதைப் பார்த்த கலைஞர், "இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நீங்க போகவேண்டியிருக்கா'ன்னு கவலையோடு கேட்டார். "இல்லண்ணே நம்மை நம்பி வர்றவங்களுக்கு நம்பிக்கை அளிக்கணுமே'ன்னு சொன்னேன் . அவர் கண் கலங்கிட்டார். அப்ப போட்ட இன்சூரன்ஸை இப்ப வரைக்கும் கன்டின்யூ பண்ணிக்கிட்டிருக்கோம்'' என்றேன்.

மணி 3 ஆகிவிட்டது. அன்றைய விசாரணை அத்துடன் முடிந்தது. வெளியே வந்தபோது அட்வகேட் ப.பா. மோகன் அவரது ஜூனியர்கள் எல்லோரும் காத்திருந்தார் கள். விசாரணை கடுமையாக இருந்ததையும், தீவிரவாதிகள் லிஸ்ட்டில் என்னைச் சேர்ப்பதற்கு போலீசார் தயாராகி, அதற்கான ஆல்பத்தை ரெடி செய்து வைத்திருப்பதையும் வழக்கறிஞரிடம் சொன்னேன். விசாரணை நடந்த இடத்தின் வாசலில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடானது. திரண்டிருந்த கோபிசெட்டிபாளையம் பத்திரிகையாளர்களிடம், ""என் மீது தீவிரவாதி என்ற முத்திரையைக் குத்த போலீஸ் எடுக்கும் முயற்சிகளை அப்படியே விளக்கினேன். பத்திரிகை சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரஸ் மீட் ஒரு புறமென்றால், தலைமைச்செயலாளர்-உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு போலீஸ் விசாரணையின் கடுமை பற்றி தந்தி கொடுப்பது இன்னொரு புறம் நடந்துகொண்டிருந்தது. கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கான அஃபிடவிட்டை ப.பா.மோகனின் ஜூனியர்கள் ரெடி செய்துகொண்டிருந்தனர்.

எல்லாம் முடிந்த பிறகுதான் மதிய உணவு. அதற்காக ஸ்டாலின் சிவகுமார் வீட்டிற்குச் சென்றோம். சத்தியமங்கலம் கோர்ட்டில் நமது ஜாமீனுக்கு ஷ்யூரிட்டி கொடுத்தவர் அவர். நான், அட்வகேட் ப.பா.மோகன், தம்பி ஜீவா, டிரைவர் மோகன், செக்யூரிட்டி குண்டு பூபதி, ஃபோட்டோகிராபர் இளங்கோவன் எல்லோரும் ஸ்டாலின் சிவகுமார் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, எங்க பின்னாடியே ஒரு எஸ்.டி.எஃப் ஜீப் ஃபாலோ பண்ணிக் கொண்டிருந்தது. "எதற்காக வருகிறார்கள், வேறு எங்காவது போவதற்காக இதே பாதையில் வருகிறார்களா' என்று யோசித்தபடி நாங்கள் சாப்பிடப் போய்விட்டோம்.

சாப்பிட்டு முடித்து திரும்பி வரும்போது அதே எஸ்.டி.எஃப் ஜீப் எங்களைப் பின்தொடர்ந்தது. நம்மைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என்பது உறுதியானதால், ஃபோட் டோகிராபர் இளங்கோவனிடம் அந்த வண்டியை வீடியோ எடுக்கச் சொன்னேன். ஃபோட்டோவும் வீடியோவும் அவர் தான் எடுத்துக்கொண்டிருந்தார். எஸ்.டி.எஃப் வண்டியையும் தனது ஸ்டில் கேமரா-வீடியோ கேமராக்களில் பதிவு செய் தார். இதை கோர்ட்டில் பதிவு செய்வதற்காக எடுத்தோம். விசாரணை நேரம் முடிந்தபிறகும், போலீசார் எங்களைப் பின் தொடர்வதை அஃபிடவிட்டில் சேர்த்து தாக்கல் செய்தோம்.

மறுநாள். கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசா ரணைக்குச் சென்றபோது பெரிய பிரளயமே உருவாகியிருந் தது. எப்போதும் என்னை சுற்றிக்கொண்டு விசாரணை நடத் தத் தயாராக இருக்கும் அதிகாரிகள், அன்று வேறு ஏதோ பயணத்திற்குத் தயாராவது போல இருந்தனர். என்னைப் பார்த்ததும், ""சரி.. சரி.. கிளம்புங்க. காட்டுக்குப் போவோம்'' என்ற டி.எஸ்.பி. நாகராஜனின் குரலில் கடுமை தெறித்தது. போலீசார் பக்கம் திரும்பி, ""ஜீப் ரெடியா?'' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "இங்கேதானே விசாரணை நடத்தணும்னு கோர்ட் ஆர்டர் கொடுத்திருந்தது! நேற்று வேற ஏதாவது ஆர்டர் வாங்கிட்டாங்களா?' என்று யோசித்தேன். ""இங்கேதானே விசாரணை'' என்று கேட்டேன். எந்தப் பதிலும் வரவில்லை.

வழக்கம்போல சேரில் உட்கார்ந்து கொண்டேன். ""நான் வேற எங்கேயும் வர முடியாது. நீங்க கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லணும்ங்கிறதுதான் கோர்ட் உத்தரவு. கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் வரமாட் டேன்'' -நான் சொன்னதும் அவர்கள் வெளியே போய் யாரிடமோ பேசுகிறார்கள். ஒரு டீம், வெளியே நிற்கிற என் வண்டியை சர்ச் செய்கிறது. அதற்கு ப.பா.மோக னின் ஜூனியர்கள் சிவராமன், கார்த்தி ஆகியோர் பலமாக அப்ஜெக்ஷன் செய்கிறார்கள். ஒரு 20 நிமிடம் கழித்து போலீஸ் டீம் மீண்டும் உள்ளே வந்தது.

டி.எஸ்.பி. நாகராஜன் கோபத்தோடு பேச ஆரம் பித்தார். ""நீங்க எங்களைப் பற்றிய விவரங்களை வீரப்ப னுக்கு அனுப்பி, எங்களைக் கடத்துறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கீங்க. வீரப்பன் இருக்கிற இடம் உங்களுக்குத் தெரியும். வந்து காட்டுங்க'' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ""உங்க விசாரணை வளையத்தில இருக்கும்போது உங்களை கடத்த வீரப்பனுக்கு நான் உதவுறேனா? பொருத்தமே இல்லாம பொய்யை அள்ளிவிடுறீங்களே'' என்றதும், ""நேத்து என்ன செஞ்சீங்க'' என்றார் டி.எஸ்.பி. எனக்கு அப்போதும் எதுவும் தோன்றவில்லை. "அவர்கள் போட்ட எல்லா பொய்வழக்குகளிலும் பெயில் வாங்கிவிட்டோம். அந்த பெயிலைக் கேன்சல் பண்ணுவதற்கும் புது கேஸ் போடுவதற்கும் ரூட் போடுகிறார்களோ' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

டி.எஸ்.பி.யே பேச ஆரம்பித்தார். ""எங்க எஸ்.டி.எஃப் வாகனத்தை நீங்க ஃபோட்டோவும் வீடியோவும் எடுத்தீங்களா இல்லையா?''

""ஓ... அது உங்க வேலைதானா? ஆமா சார்.. நாங்க வெளியே போகும்போதும் திரும்பி வரும்போதும் எங்களை எந்த வாகனம் ஃபாலோ செய்தாலும் அதைப் பதிவு செய்வோம். அதிலே நாங்க கவனமா இருப்போம். எல்லாத்தையும் சட்டரீதியா நிரூபிக்கிறதுக்காகத்தான் இப்படி செய்றோம்''.

""இல்லை... எங்க வண்டியையும் எங்களையும் ஃபோட்டோ எடுத்து அதை வீரப்பனுக்கு அனுப்பி எங்களை அடையாளம் காட்டி, கடத்துறதுக்குத்தான் நீங்க ஏற்பாடு பண்ணுறீங்க. வீரப்பன்கிட்டே எங்களை நீங்க அடையாளம் காட்டிக் கொடுக்குறீங்க. உங்க ளுக்கு வீரப்பன் இருக்கிற இடம் தெரியும் உடனே எங்ககூட காட்டுக்கு கிளம்புங்க..''

-டி.எஸ்.பியின் குரல் வெறித்தனமாக இருந்தது. இன்னொரு பயங்கரம் சூழ்வதை உணர்ந்தேன்.